Friday, May 14, 2010

கால கணிதம் (1,2,3,4 & 5)

கால கணிதம்.
கடந்த ஒன்றரை மாத காலமாக, காலத்தின் கோலத்தின் சிறு பகுதியைப் பார்த்தோம். கால கணிதம் பற்றி எழுதுவதற்கு அனேகம் உள்ளது. அதற்கு காலம் போதாது.
கால கணிதம் - 1 (எதிர்காலத்தை எழுதினோம்)
கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)
கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
கால கணிதம் - 4 (கலிதோஷத்தினை நீக்கிய கணிதம்)
கால கணிதம் - 5 (கால கணித ஆலயம் - மோட்சம் தரும் காட்சி)
ஆகிய ஐந்து பதிவுகளையும் "கால கணிதம்" என்ற ஒரே தொகுதியாகக் கொடுத்திருக்கின்றேன். சற்றே பெரிய பதிவுதான்.
ஆயினும் ஒரே காலத்தில் இந்தப் பதிவுகளைப் படிக்க வசதியாகத்தான் இந்தப் பதிவு.
கால கணிதம் எனும் பகுதியை எழுத ஆரம்பிக்கும்போது இப்படி ஐந்து பதிவுகளாக எழுதவேண்டும் என்று திட்டமிடவில்லை. (பஞ்சாங்கத்தில் உள்ள கணித வகைகளை எழுதத்தான் நினைத்திருந்தேன்.) ஆயினும், காலம் தான் இப்படி எழுதத் தூண்டியது எனலாம்.
எல்லாம் காலத்தைப் படைத்த இறைவன் செயல்.

சரி, இனி கால வெள்ளத்தில் நுழையலாம்.


காலம். நான்காவது பரிமாணம் (FOURTH DIMENSION)
சூர்யனை மையமாகக் கொண்டு நம் பூமி சுற்ற ஆரம்பித்த முதலே காலம் என்பது தோன்றிற்று. கால கணிதம் ஒரு அருமையான அறிவியல்.
வேத காலம் தொட்டே நம் பாரத நாடு கால கணிதத்தில் மிக மேன்மை பெற்றிருந்தது.
ஸப்தரிஷி சகம் என்பது மூத்த கால கணிதம்.
வேதங்களில் பல இடங்களில் கால அளவைகளைக் காணமுடிகின்றது.
யஜுர் வேதத்தில் ஆறாவது அத்யாயம், 21ம் செய்யுளில் வானவியல் பற்றி அற்புதமாக விவரிக்கப்படுகின்றது.
அதர்வண வேதத்தில் ஜ்யோதிஷ பகுதி என்று ஒன்று இருந்தது என்றும் அது காலப் போக்கில் காணக் கிடைக்கவில்லை என்றும் வேத ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆன்றோர்கள் வேதத்தைப் பகுத்து ஆறு அங்கமாக்கியதில் ஜ்யோதிஷமும் மிக முக்கியமான ஒன்று.கால கணிதத்தில் நம் பாரத தேச ஆன்றோர்கள் மிக மேன்மையான அறிவு பெற்றிருந்தார்கள். எந்தவொரு உயர்நிலைக்கருவி (SOPHISTICATED APPARATUS) உதவி இன்றி, சூர்ய குடும்பத்தையும், அதன் சஞ்சாரங்களையும் மிக அழகாக விளக்கியிருக்கின்றார்கள்.
லாகதர், சுசுருதர், வராகமிகிரர், ஆரியபட்டர், பிரம்மகுப்தர், மஹாவீராச்சாரியார், பராசரர் போன்ற காலத்தால் முந்தைய கால கணித அறிஞர்களும், பிற்காலத்தில் காளிதாசர் முதற்கொண்டு பாஸ்கராச்சாரியார் வரையிலும் பல அறிஞர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். அவர்களின் கணித கணக்கீடுகள் மிக முக்கியம் வாய்ந்தவை.
பொதுவாக இந்து கால கணிதம் சூர்யன் பூமியைச் சுற்றி வருவதாக எண்ணிக்கொண்டுதான் கணக்கீடுகள் செய்யப்பட்டன. ஜாதகக் கட்டத்தினைப் பார்த்தால் எளிதில் புரியும். சூரியன் ஒவ்வொரு ராசி மண்டலத்திலும் ஒரு மாதம் தங்கும் விதத்தில் கணக்கீடு செய்யப்பட்டிருக்கும். இதை விளக்க தொடு வானம், மண்டல விஸ்தாரம் என்று மேலும் விளக்க வேண்டியிருக்கும்.
ஆனால், விஞ்ஞான அறிவியல் சூர்யனைத் தான் அனைத்து கிரஹங்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இது நிரூபணமான உண்மை.
இரு அறிவியல்களும் வேறு விதமான கணக்கீடுகளைக் கொண்டிருந்தாலும், முடிவு என்று பார்த்தால் ஒன்றாகத்தான் அமைகின்றன.
உதாரணமாக, கிரஹண கணிதம். கிரஹணம் உருவாகக் காரணிகள் ராகு மற்றும் கேது கிரஹங்கள். புதன், வியாழன், சனி எனக் கூடிய கிரஹங்களை அறிவியல் ஒத்துக்கொண்டாலும் சூர்ய மண்டலத்தில் ராகு மற்றும் கேது எனும் கிரஹங்கள் இல்லை என்கின்றன அறிவியல். அவை சாயா கிரஹங்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
எது எப்படியோ பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தினத்தில் தான் கிரஹணம் நடக்கின்றது. இந்து கால கணித முறையில் அடுத்தடுத்த வருடங்களில் நிகழும் கிரஹணங்களைக் கணக்கீடு செய்ய முடிகின்றது.
அதே போல நாஸா போன்ற நிறுவனங்கள் கடந்த நூறாண்டுகளில் நடைபெற்ற கிரஹணங்களையும் அடுத்த நூறாண்டுகளில் நடைபெறவிருக்கின்ற கிரஹணங்களையும் கணக்கீடு செய்து விடுகிறார்கள்.
ஆயினும் இரண்டு கணக்கீடுகளிலும் கிடைக்கின்ற நாளில் தான் கிரஹணம் நிகழ்கிறது. நேரம் மட்டும் சில நிமிடங்கள் மாறுபடுகின்றது.
கிரஹணம் பற்றி தனியான ஒரு பதிவில் காண்போம்.
கால கணித வகையில் சிறப்பு பெற்ற ஒரு அம்சத்தினை மட்டும் இங்கு காண்போம்.
இந்து காலக் கணிப்பில் (பிரபவ முதற்கொண்டு அக்ஷய வரை) அறுபது வருடங்கள் உண்டு. சித்திரை 1ம் தேதியே ஆண்டின் முதல் தேதி. தமிழ் மாதத்தின் தேதியும், கிழமையும் இணைந்த ஒரு அற்புதக் கணக்கினைக் காண்போம்.எல்லா வருடங்களுக்கும் பொதுவாக அமைந்த ஒரு கணக்கீடு கீழே காண்போம்.
கிழமை ===> மாதப் பிறப்பு
0 ========> சித்திரை 1, கார்த்திகை 1
+1 ==========> மார்கழி 1
+1 ==========> புரட்டாசி 1
+1 ==========> வைகாசி 1, ஆடி 1, தை 1
+1 ==========> மாசி 1
+1 ==========> அய்ப்பசி 1
+1 ==========> ஆனி 1, ஆவணி 1, பங்குனி 1

0 என்பது ஏதாவது ஒரு கிழமை எனக் கொண்டால் +1 என்பது அடுத்த கிழமை.
உதாரணம் 0 என்பது வெள்ளி எனக் கொண்டால் +1 ஆகிய அடுத்த கிழமை சனிக் கிழமை. அதற்கடுத்த +1 அடுத்த கிழமை.
உதாரணமாக சித்திரை 1 வெள்ளிக் கிழமையில் அமைந்தால், மிக நிச்சயமாக மார்கழி 1 சனிக் கிழமைதான். சனிக் கிழமைக்கு அடுத்த நாளாகிய ஞாயிறு - புரட்டாசி 1ல் அமையும்.
எதிர்வரும் ஆண்டு விக்ருதி ஆண்டு.
விக்ருதி வருடப்பிறப்பு (சித்திரை 1ம் தேதி) புதன் எனில், கார்த்திகை 1ம் தேதி புதன் தான்.
மறுநாளான வியாழன் மார்கழி 1;
அடுத்த நாளான வெள்ளி புரட்டாசி 1,
மறுநாள் சனி வைகாசி 1, ஆடி 1, தை 1,
அடுத்த நாளான ஞாயிறு மாசி 1,
மறு நாளான திங்கட் கிழமை ஐப்பசி 1,
அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை ஆனி 1, ஆவணி 1, பங்குனி 1 என அமையும்.
இது எல்லா வருடங்களுக்கும் பொருந்தும்.
இந்தக் கணித வகை கைலாச நாதர் சதகத்தில் (91 - 96 வது பாடல்) காணப்படுகின்றது.இதே போன்று பல கணித வகைகள் உண்டு. அதைக் கொண்டுதான் கால நிர்ணயம் (விசேஷ தினங்கள், கோயில் வைபவங்கள் போன்றவை) கணக்கீடு செய்யப்படும்.

விக்ருதியே வருக ! வளம் பல தருக !!
விக்ருதி வருட ஆரம்ப நாளன்று பஞ்சாங்கப் படனம் படிக்கப்படும்.
புதிய பஞ்சாங்கத்தை -ஒரு தூய்மையான மனை பலகையில் அலங்காரங்களுடன் -அமைத்து, அந்த பஞ்சாங்கத்திற்கு விநாயகர், சரஸ்வதி முதலான தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டு, லக்ஷ்மி நாராயணரையும், பார்வதி பரமேஸ்வரனையும், ஹிரண்யகர்பரையும் விசேஷ பிரார்த்தனை செய்து கொண்டு, வரும் வருடம் அனைவருக்கும் நற்பலன்களைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, பானகம், வேப்பம் பூ பச்சடி, நீர் மோர் முதலானவற்றை நிவேதனம் செய்து, விக்ருதி வருடத்தின் தெய்வங்கள், அந்த தெய்வங்கள் கொடுக்கக் கூடிய பலன்கள் என அறிவிக்கப்படுவதே பஞ்சாங்கப் படனம் எனப்படும். பாம்பு பஞ்சாங்கத்தில் பலன்கள் அறிவிக்கப்பட்டிருக்கும்.
அந்த பஞ்சாங்கத்தில் கிரந்த மொழியில் உள்ள மந்திரங்களைப் படிப்பதும், அதைக் கேட்பதும் பெரும் புண்ணியங்களை நல்கும்.
வாரத்தைச் சொல்வதால் ஆயுள் வளரும்; திதியைச் சொல்வதால் ஐஸ்வரியம் கிடைக்கும்; நட்சத்திரத்தை உச்சரிப்பதால் பாவங்கள் நீங்கும்; யோகத்தைக் கூறுவதால் நோய் குணமாகும்; கரணத்தைச் சொல்வதால் நினைத்த காரியம் நடக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
வாரம், திதி, நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகியம் ஐந்தும் இணைந்த அம்சம் தான் பஞ்சாங்கம்.
வரும் ஆண்டாகிய விக்ருதி வருடம் அனைவருக்கும் வளமான வாழ்க்கையை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வணங்கிடுவோம்.

கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

காலத்தை நமது ஆன்றோர்கள் மிகக் குறைந்த நேரம் முதற்கொண்டு மிகப் பெரும் அளவுள்ள நேரம் வரை பகுத்திருக்கின்றார்கள்.
காலக் கோட்பாட்டினை இரு விதமாக விஞ்ஞானிகள் பகுக்கின்றனர்.
ஒன்று சுழற்சி முறை (WHEEL OF TIME). (சூர்யனை கோள்கள் சுழலும் காலம் கொண்டு கணிப்பது. பூமி 365.25 நாட்களில் ஒரு முறை சூர்யனைச் சுற்றிவருகின்றது. இதே போல் மற்ற கிரஹங்களுக்கும் சூர்யனைச் சுற்றி வரக் கூடிய காலத்தைக் கணித்திருக்கின்றார்கள்.)
மற்றொன்று அம்பு முறை (ARROW OF TIME). அதாவது சூர்யனிடமிருந்து ஒரு அம்பு புறப்பட்டால் எப்படி முடிவின்றி பயணிக்குமோ அதைப் போல ஒரு கணித முறை. ஐன்ஸ்டீனின் E = MC2 ஒத்தது. அதாவது பிரபஞ்சம் நீண்டுகொண்டே இருக்கின்றது.
காலம் என்று சொல்லும் போதே நமக்கு மூன்று காலங்கள் புலப்படுகின்றது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.
கடந்த காலத்துக்குப் போவோமா?
எந்த வித மந்திர தந்திரங்களும், தவப் பயனும் இன்றி கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது இயற்பியலாளர்களின் கணிப்பு.
குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க கி.மீ./மணி என்பது நம் வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக நெய்வேலியிலிருந்து சென்னைக்கு 200 கி.மீ. செல்ல 5 மணி நேரம் ஆகும் என்பது.
மிக நீண்ட பயணத்தை கணக்கிட ஒளி ஆண்டு என்பார்கள். அதாவது ஒளி (LIGHT) ஒரு ஆண்டு பயணித்தால் ஆகும் தூரமே ஒரு ஒளி ஆண்டு.
(ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,000 KILOMETERS)

ஒரு தோராயமான கணக்கு : இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களில் ஒருவர் 30 வயதில் பூமியிலிருந்து குறிப்பிட்ட ஒளி ஆண்டு வேகத்தில் யுரேனசுக்குச் செல்கின்றார் எனில், அவர் 35 வது வயதில் யுரேனசை அடைந்து, திரும்ப அவர் 40 வயதில் பூமியை வந்தடைந்தார் என்றால், அவருடனே பிறந்த சகோதரனுக்கு 45 வயதாகியிருக்கும். (இங்கே குறிப்பிட்ட எண்ணிக்கைகள் அனைத்தும் எடுத்துக்காட்டிற்காக மட்டுமே. மிகத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனின் பதிவு மேலும் நீளும்.)
இது விஞ்ஞானக் கோட்பாட்டின்படி சரிதான்.
இதையே வேறுவிதமாக உபயோகித்தால் கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்ட கோட்பாடு.
பூமியின் காலம் வேறு (சுழற்சி முறை). பூமியிலிருந்து அம்பு போல வேறொரு கிரஹம் செல்லும் காலம் வேறு. ஆனால் பயணிக்கும் காலம் மிக முக்கியம். ஒளி வேகம் அல்லது அதைத் தாண்டிய வேகம் இருப்பின் கடந்த காலம் செல்ல முடியும். (மேலும் விளக்கம் வேண்டுமெனில் ஒரு இயற்பியல் அறிஞரிடம் அறிந்து கொள்ளுங்கள். அல்லது ஃபோட்டான், சிங்குலாரிட்டி தத்துவம், பெருவெடிப்பு (BIG BANG), ஐன்ஸ்டீன் விதி, பிரபஞ்ச ஆரம்ப கணங்கள், 1D, 2D, 3D, 4D பற்றிய விபரங்களை நான் அறிந்த வரையில் அறிவிக்க வேண்டுமெனில் மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை விளக்கம் தருகின்றேன்.)
ஆனால், இன்றைய நடைமுறையில் இது சாத்தியமில்லைதான். ஏனெனில் மனிதன் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் (900 கிமீ/மணி) பயணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை.
அறிவியல் வழியில் காலத்தைப் பார்த்தோம்.
ஆன்மீக வழியில் பார்ப்போம். ஆன்மீகத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் குறித்து அனேக குறிப்புகள் உள்ளன. எதிர்காலத்தைக் கணக்கிட ஜோதிடவியல் உள்ளது. கடந்த காலத்தைக் கணிக்க ரிஷிகள் எழுதிய ஓலைகள் (நாடி ஜோதிடம்) உள்ளன. நிகழ்காலத்தில் தான் நாம் வாழ்கின்றோம்.
இந்த மூன்றிலும் பயணிப்பவர்கள் மஹரிஷிகள்.
திரிலோக சஞ்சாரி என்றும் திரிகால ஞானி என்றும் நாரதரை அழைப்பார்கள். அவர் முக்காலங்களிலும் பயணிக்க வல்லவர் என்று நாரத புராணம் கூறுகின்றது.
கால சக்ர ப்ரவர்த்திகா, கால நேமி, கால நேதா போன்ற நாமாவளிகள் தெய்வங்கள் காலம் எனும் சக்கரத்தைச் சுழற்றுவதாகக் கூறுகின்றன. அதாவது காலம் இறைவன் கையில் என்கின்றன.
தெய்வத்திற்கு மூன்று கண்கள் உண்டு என்கின்றன ஆன்மீகம்.
மூன்றாவது கண் தான் நான்காவது பரிமாணமாகிய காலத்தின் ஊடே பயணத்தைக் காண வல்லது.
ஒரு கண் இருந்தால் இரு பரிமாணங்களைப் பார்க்க இயலும். இரு கண்கள் இருந்தால் மூன்றாவது பரிமாணத்தைப் பார்க்க முடியும். மூன்றாவது கண் இருந்தால் நான்காவது பரிமாணமாகிய காலத்தைப் பார்க்க முடியும்.
ஒரு பரிமாணம் என்பது ஒரு பொருளின் நீளம். இரு பரிமாணம் என்பது அந்தப் பொருளில் அகலம்.
ஒரு காலண்டரை நாம் பார்க்கின்றபோது அதன் நீளம் மற்றும் அகலம் புலனாகின்றது.
உதாரணமாக, தொலைக் காட்சியிலோ அல்லது சினிமாவிலோ நாம் காணும் காட்சிகள் இரு பரிமாணம் கொண்டவை. அக்காட்சியின் நீளம் மற்றும் அகலம் மட்டுமே காணமுடியும்.
நம் எதிரில் ஒரு கார் நிற்கின்றது. அதன் நீளம் & அகலம் தெரிகின்றது. கூடுதலாக மூன்றாவது பரிமாணமாகிய கனபரிமாணம் அதாவது அதன் உயரம், கொள்ளளவு என்பது நமக்குத் தெரிகின்றது.
ஆக, இரு கண்கள் உள்ள நாம் மூன்று பரிமாணங்களைப் பார்க்க முடிகின்றது. அதைக் கையாள முடிகின்றது. நீள அகல உயரங்களிடையே நாம் செல்ல முடிகின்றது.
ரயிலில் பயணிக்கின்றோம். காலை 6 மணிக்குக் கிளம்புகின்றோம். 9 மணிக்கு பயணத்தை முடிக்கின்றோம். அந்த ரயில் 6, 7, 8, 9வது மணியில் எங்கெல்லாம் இருந்தது என்று சொல்ல முடிகின்றது.
அந்த பயண காலத்தை நம்மால் உபயோகப் படுத்த முடிவதில்லை. அதாவது, நாம் கிளம்பிய பிறகு ஒரு மணி நேரம் சென்று, திரும்பவும் கிளம்பிய நேரத்திற்குச் செல்ல முடிவதில்லை. அதாவது காலத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.மூன்றாவது கண் இருந்தால் மட்டுமே நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிக்க முடியும்.
ஆகையால் தான் ஆன்மீகம், தெய்வங்கள் மனிதர்களை விட மேம்பட்ட குணத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.
காலக் கணிதத்தினை எப்படியெல்லாம் நம் ஆன்றோர்கள் பகுத்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

புராணங்களின் கூற்றுப்படி கீழ்க்கண்ட கணக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
தமிழின் தொல்லிய நூலாகிய கணக்கதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரம்:
கண்ணிமை 2 = 1 கைந் நொடி
கைந் நொடி 2 = 1 மாத்திரை
மாத்திரை 2 = 1 குரு
குரு 2 = 1 உயிர்
உயிர் 9 = 1 க்ஷணிகம்
க்ஷணிகம் 12 = 1 விநாடி
விநாடி 60 = 1 நாழிகை
நாழிகை 7.5 = 1 சாமம்
சாமம் 4 = 1 பொழுது
பொழுது 2 = 1 நாள்
நாள் 30 = 1 மாதம்
மாதம் 12 = 1 வருடம் (1728000 வருடம் = கிருத யுகம், 129600 வருடம் = திரேதா யுகம், 8,64,00 வருடம் = துவாபரம் யுகம், 4,32,000 வருடம் = கலியுகம், இந்த நான்கும் சேர்த்து 43,20,000 வருடங்கள்)
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
74 மனு = 1 இந்திர ராஜ்ய காலம்
270 இந்திர ராஜ்ய காலம் = 1 பிரம்ம நாள் (பிரம்மாவுக்கு ஒரு நாள்)
365X100 பிரம்ம நாள் = 1 பிரம்ம காலம் பூர்த்தி
360 பிரம்ம கால பூர்த்தி = 1 ஆதி பிரம்ம பிரளயம்
100 ஆதி பிரம்ம பிரளயம் = 1 விஷ்ணு கற்பம்
100 விஷ்ணு கற்பம் = ரோம ரிஷியின் 1 ரோம காலம் (உடலெல்லாம் ரோமங்கள் கொண்ட ஒரு மஹரிஷி. அவரின் உடலில் ஒரு ரோமம் உதிரும் காலமே 1 ரோம காலம்)
10 கோடி ரோம காலம் = மீனசமக ருஷியின் 1 செதில் காலம் (மீனைப் போன்ற செதில்களைக் கொண்டவர் மீனசமக ருஷி. அவரின் உடலில் ஒரு செதில் உதிரும் காலமே 1 செதில் காலம்)
1 கோடி செதில் காலம் = பரத்வாஜருக்கு 1 நிமிடம்
30 கோடி பரத்வாஜ நிமிடம் = 1 சக்தி காலம்
780 கோடி சக்தி காலம் = மகாசக்திக்கு 1 நிமிஷம்

ி.கு. : இந்தப் பதிவு மிக விரிவாக எழுத நினைத்து, ஆன்றோர்கள் கூறுவது போல 'விரிவஞ்சி விடுத்தனம்'. என்றாலும் காலத்தின் கோலத்தை மிக விரிவாக பிறிதொரு காலத்தில் கணக்கிடுவோம்.

கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)

கால கணிதம் - 1 (எதிர்காலத்தை எழுதினோம்)
இந்தப் பதிவில் எதிர்வரும் நாட்களை மிகத் துல்லியமாக கணித்திட உதவும் ஒரு சமன்பாட்டினைக் கண்டோம். ("எதிர்காலத்தை எழுதினோம்" - future & past கலந்த கலவையை கவனியுங்கள்)
கடந்த காலத்துக்குச் செல்ல கணித வகையின் கூற்றினைப் பார்த்தோம். தற்போதைக்குச் சாத்தியமில்லை எனினும் கணிதக் கூறு உண்மைதான். ("கடந்த காலத்துக்குப் போவோமா" - past & future tense கொண்ட முரண்பட்ட வாக்கியத்தைக் கவனியுங்கள்)
கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
கடந்த காலம் கடந்தே போனது. எதிர்காலம் எப்படியோ? இரண்டும் கடவுள் ஒருவர் மட்டுமே அறிய முடிந்தவை. ஆயினும், மானுட ஜன்மத்தில் நிகழ்காலத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கணத்தை உணர முடிகின்றது. நிகழ்காலமே நிதர்சனம்.
நிகழ்காலத்தில், நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும், நாம் செய்கின்ற அனைத்து செயல்களிலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவே செய்ய உறுதி மேற்கொள்வோம்.
ஆன்மீகம் காட்டும் பாதை அறப்பாதை. அந்த ஆன்மீக வழியில் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அன்பு செலுத்தி நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.
ஆன்மீக பிரார்த்தனைகள், க்ரியைகள் எனும் செயல்கள், பூஜைகள் மற்றும் பிற காரியங்கள் அனைத்திற்கும் ஸங்கல்பம் எனும் ஸ்லோகம் முதலாவதாகச் சொல்லியே செய்யப்படுகின்றது.
அந்த ஸ்லோகம் நிகழ்கால நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது.
உதாரணமாக, ஒருவர் கணபதி ஹோமம் செய்ய இருக்கின்றார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி ஹோமம் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது.
அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பித்து,
"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ¢ண) அயனே (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ...... மாஸே (சுக்ல/ கிருஷ்ண) ப§க்ஷ ......சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
என்று முடிந்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.

மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.

பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு. பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்.
நாம் வாழும் காலத்தைத் தொடங்கிய பிரம்மாவிற்கு முன் பல பிரம்மாக்கள் தங்கள் படைத்தல் - முடித்தல் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.
மஹா கல்ப காலத்தில் ஒரு பிரம்ம காலம் என்பது நூறு பிரம்ம வருடங்கள். அதில் பாதி (அர்த்தம்) ஐம்பது பிரம்ம வருடங்கள். (பிரம்ம வருடங்களைக் கணக்கிட முந்தைய பதிவைக் காணவும்.) ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
14 மன்வந்திரங்களாவன : 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும், ஹோமத்தை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலம் விக்ருதி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம் அல்லது தக்ஷ¢ணாயனம் எனும் இரு அயன காலத்தில் உத்தராயண காலத்தில், ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாதத்தில், வளர்பிறை சதுர்த்தி தினத்தில், ஞாயிறு கிழமை, ரோகிணி நக்ஷத்ரம் (18.04.2010) இணைந்த சுபமுஹ¥ர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் கணபதி ஹோமம், கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு, அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.

கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4)

கால கணிதத்தின்படி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது கலியுகம்.
கலியுகம் என்பதைவிட கல்வி யுகம் என்றே சொல்லலாம். வித்தைகளிலும், கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர்களே இந்த யுகத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளார்கள்.
ஆகவே இது கல்வி யுகம். கற்ற கல்வி முன்னேற்றத்தைத் தரும் யுகம். ஆகவே கல்வியில் கவனம் செலுத்தினாலே கலி யுகத்தில் சாதனை செய்ய முடியும் என்பதே இதுவரை நடந்திருக்கின்றது.
வாழ்வின் அடிமட்டத்தில் வறுமையில் இருப்பவர்கூட கல்வியில் சிறந்தால், உயர்மட்டத்திற்கு செல்லமுடியும்.
அதற்கு பலரும் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றார்கள்.
கல்வியில் கணிதம் ஒரு முக்கியமான அங்கம். கணிதம் வாழ்வை சிறக்கச் செய்யக் கூடியது. இப்பொழுது ஆதிக்கம் செலுத்தி வரும் கணிணி துறைகூட மிக அடிப்படையில் கணிதத்தின் சமன்பாடுகளையே கொண்டது (binary).
கணிதத்தில் சிறந்தவர், கணிணி துறையில் சிறப்பார்கள். வாழ்வை வெல்வார்கள். இதைக் கண்கூடாக நாம் காணமுடிகின்றது.
சிறப்புப் பெற்ற கணிதத்தை அறிந்து கொண்டதால் வாழ்வில் சிறந்த ஒரு காவிய நாயகனின் வரலாற்றில் நடந்த சம்பவத்தை இங்கு காணவிருக்கின்றோம்.

கணிதம் கற்றதால், கலி விலகியது !
மஹா பாரதம் - பாரத இதிகாசங்களில் ஒன்று.
இதில் தருமர் சகுனியிடம் சூதாட்டத்தில் தோற்கின்றார் (சதுரங்க விளையாட்டும் ஒரு கணிதமே - கணிதத் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே வெல்ல முடியும்.) ராஜ்யம், மனைவி அனைத்தையும் இழந்து துயரமே வடிவாக நிற்கின்றார்.
அப்பொழுது, வியாச மஹரிஷி, தருமரைத் தேற்றுவதற்காக ஒரு அருமையான காவியத்தைச் சொல்கின்றார்.
அக்காவியத்தைக் கேட்டபின் தர்மர் தைரியம் பெறுகின்றார்.
அதுவே நைஷதம் (நைடதம்) என்று பெயர் பெறுகின்றது. வடமொழியில் அமைந்த நைடதத்தை தமிழில் புகழேந்திப் புலவர் "நளவெண்பா" எனும் அருமையான நூலாக அமைத்தார்.

சுருக்கமாக நள சரித்திரம் :
நிடதம் எனும் நாட்டினை அரசோச்சுபவன் நளன், ஒரு நாள் வனத்தினில் அழகிய அன்னத்தைக் (சவம்) கண்டு, அதன் அழகில் மயங்கி அதைப் பிடிக்கின்றான். பயந்த அன்னம் என்னை விட்டுவிடு என்று பேசியது. உடன் அதை விடுவிக்கின்றான். செய்நன்றி மறவாத அன்னம், அவனுக்கு நன்மையளிக்க வேண்டி, தமயந்தி எனும் அரசகுமாரியின் அழகை விவரிக்கின்றது. தமயந்தியின் அழகில் மயங்கிய நளன், தன் காதலின் தூதாக அந்த அன்னத்தையே விடுக்கின்றான். அன்னம் தமயந்தியிடம் வந்து நளனின் அழகு, வீரம் முதலியவற்றைச் சொல்கின்றது. தமயந்தியும், தான் நேரில் பார்க்காவிட்டாலும் அன்னத்தின் வாயிலாக அறிந்த நளன் மீது மையல் கொள்கின்றாள். தமயந்தியின் தந்தை சுயம்வரம் அமைக்கின்றார். தேவர் முதலானவர்கள் சுயம்வரத்திற்கு வந்தாலும், அவர்களையெல்லாம் விடுத்து தன் காதல் மன்னனாகிய நளனுக்கே மாலை சூட்டுகின்றாள். காலம் கடக்கின்றது. ஒரு சமயம், நளன் செய்தத் தவறினால், கலிபுருஷன் நளனைப் பிடிக்கின்றான். கலி புருஷன் (கலி பீடித்தல் - சனி பீடித்தமைக்கு சமம்) பீடித்ததால், சூதாட்டத்தில் நாட்டம் போன்ற கெட்ட நடவடிக்கைகளால் நளன் ஆட்படுகின்றான். புஷ்கரன் எனும் சூதில் வல்ல மன்னனுடன் சூதாட்டம் ஆடுகின்றான். நளன் புஷ்கரனிடம் தோற்று, ராஜ்யம் இழந்து, காட்டிற்குப் போகின்றான். உடன் தமயந்தியும் வருகின்றாள். தமயந்தி காட்டில் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவளைத் தனியே விட்டுச் செல்கின்றான். கணவனைக் காணாது கலங்கிய தமயந்தி தனது தந்தை வீடு செல்கின்றாள். கலி பீடித்தக் காரணத்தால், பல இன்னல்களை சந்திக்கின்றான் நளன். கார்க்கோடகன் எனும் பாம்பு இவனைத் தீண்டியதால், அவன் அழகுமிகு உருவம் மாறி அருவருக்கத்தக்க உருவம் (வாகுகன் என்ற பெயர்) கொண்டான். நடுவே, தமயந்தியின் தந்தை நளனை எங்கு தேடியும் கிடைக்காமையால், அவளின் நல்வாழ்வுக்காக, மறு சுயம்வரம் நடத்த நாள் குறிக்கின்றான். நளன் பல இடங்களுக்குச் சென்று பின், ரிதுபர்ணன் எனும் அரசனிடம் தேரோட்டியாக "வாகுகன்" என்ற பெயரில் சேர்கின்றான்.ரிதுபர்ணன் தமயந்தியின் மறு சுயம்வரத்திற்குச் செல்ல விழைகின்றான். அது சமயம் நளன் தேரோட்டியாக அமைகின்றான்.
நளனுக்கு அச்வ (குதிரை) சாஸ்திரம் நன்கு தெரியும். ஆகையால் குதிரைகளின் காதில் மந்திரம் ஓதினான். தன் மனைவியின் சுயம்வரத்திற்காக மற்றொருவனை தேரில் ஏற்றி மாமன்னனாகிய நளன், ரதத்தைச் செலுத்துகின்றான். வாயு வேகத்தில் தேர் பறக்கின்றது. ரிதுபர்ணன் இதுவரை காணாத வேகத்தைக் காண்கின்றான். அரசனின் உத்தரீயம் எனும் மேல் துண்டு ரதத்தின் வேகத்தால் பறந்து விழுகின்றது.
ரிதுபர்ணன் ரதசாரதியாகிய நளனாகிய வாகுகனைக் கூப்பிட்டு, "துண்டு விழுந்துவிட்டது, எடுக்க வேண்டும்" என்று கூறுகின்றான். இதைக் கூறி முடிக்கும் முன்பே ரதம், விந்தை மிகு வேகத்தால், பல காதம் (பல கிலோமீட்டர்கள்) கடந்துவிட்டது. ஆச்சர்யம் அடைந்த அரசன் தன் தேரோட்டி சாதாரணன் அல்ல, அவனிடம் வித்தை இருக்கின்றது எண்ணி, வாகுகனைப் பணிந்து வணங்கி, தேரினை வேகமாக செலுத்த உதவும் அஸ்வ சாஸ்திரத்தைப் போதிக்கக் கேட்கின்றான். அதற்குப் பதிலாக தான் வல்லமை பெற்ற விருக்ஷ (மரம்) சாஸ்திரம் என்ற கணித சாஸ்திரத்தை நளனுக்கு அறிவிக்கின்றான்.
விருக்ஷ சாஸ்திரம் என்பது ஒரு மரத்தைப் பார்த்த உடனேயே அதில் எத்தனை இலைகள், கிளைகள், காய்கள், கனிகள், பூக்கள் என்பனவற்றை உடனடியாக அறியும் ஒரு அற்புதக் கணிதக் கலை.
(முந்தைய பதிவில், தற்காலத்தில் மரத்தின் வயது காண உதவும் கணித கலையையும், பலாப்பழத்தைப் பிளக்காமலேயே அதில் உள்ள சுளைகள் எண்ணும் விந்தையான கணிதத்தையும் காணுங்கள்)
கலி புருஷன் பீடித்தமையால் அனேக துன்பங்கள் அனுபவித்து வந்தான் நளன். கலி புருஷன் நீங்குவதற்கு ஒரே வழி கணித கலையை அறிவது தான்.
கணிதத்தை அறிந்தால் உடனே கலி விலகும் என்பது கலி புருஷனின் லக்ஷணம்.
நளன் ரிதுபர்ணனிடமிருந்து கணித கலையை அறிந்த உடனேயே கலி அவனை விட்டு நீங்குகின்றது.
வாகுகன் என்ற அருவருக்கத்தக்க நிலையில் இருந்தவன் அழகுமிக்க நளன் ஆக மாறுகின்றான்.
நளனைக் கண்டு அதிர்ந்த ரிதுபர்ணன், அவனை தமயந்தி அரசவை கொண்டு சேர்க்கின்றான்.
பல சம்பவங்களுக்குப் பிறகு நளனும் தமயந்தியும் இணைந்து நீண்ட காலம் வாழ்கின்றார்கள்.
இந்தக் காவியத்தைக் கேட்டாலே கலி தோஷம் நீங்கும் என்கிறார் நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர்.
என்காலத் துன்சரிதம் கேட்டாரை யானடையேன்
மின்கால் அயில்வேலாய்! மெய், என்று - நன்காலி
மட்டிறைக்கும் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி. (401)
(கலி புருஷன், நளனைப் பார்த்துச் சொன்னது யாதெனில், என் காலத்து (கலியுகத்தில்) உன் சரித்திரத்தை எவர் ஒருவர் கேட்கின்றாரோ அவரை அடைந்து துன்பம் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்.)
{கலி தோஷத்தினை நீக்கும் ஸ்லோகம் :
ஓம் கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா: நளஸ்யச ரிதுபர்ணஸ்ய ராஜரிஷி: கீர்த்தனம் கலி நாசனம்
கார்கோடகன் (எனும் பாம்பு) நளனைத் தீண்டியது தான் அவனுக்கு கலி விலக உதவியது. ரிதுபர்ணனிடம் இருந்து விருட்ச (மரங்களைப் பற்றிய அரிய வகை) கணிதம் கற்றதால் கலி விலகியது.ஆகவே, கலி தோஷம் நீங்க - கார்க்கோடகன், நளன், தமயந்தி, ரிதுபர்ணன் ஆகிய நான்கு பேரையும் சொன்னாலே கலி விலகும் என்கின்றது மேற்கண்ட ஸ்லோகம்.}
கணிதம் கற்றால் காலத்தை வெல்லலாம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டுதான் இந்தக் காவியம்.

தற்காலத்தில் மைக்ரோசா•ப்ட் பில்கேட்ஸ், விப்ரோ (மைண்ட் ட்ரீ) ஆசிப் ப்ரேம்ஜி, இன்•போசிஸ் நாராயண மூர்த்தி போன்றோர்கள் பெரும் செல்வம் கொண்டமைக்கு ஒரு பெரும் காரணம், கணிதம் அறிந்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கணிணியே காலத்தை வெல்லும் காரணியாக (கால கணிதத்தையும்) அறிந்து அதில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்கள்.
கணிதம் கற்போம் ! கலி விலகட்டும் !!

உபரி தகவல் :
சிதம்பரம் நடராஜருக்கு நளன் சாற்றிய பதக்கம் !
நளன், தமயந்தியிடம் மையல் கொண்ட காலத்தில், அவளை தனிமையில் காண விருப்பம் கொண்டான். ஒரு சக்கரவர்த்தி போன்றவன், மற்றுமொரு அரசனின் குமரியாகிய தமயந்தியை நேரில் காணுவதெல்லாம் நடக்க இயலாத ஒன்று என எண்ணி வருந்தினான்.
அச்சமயம் அங்கு வந்த நாரத மஹரிஷி, நளனின் வாட்டத்தைப் போக்க எண்ணி, சிதம்பரத்தில் பஞ்ச க்ருத்ய பரமானந்த நடனம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) புரியும் நடராஜப் பெருமானின் திருவருளால், அவரின் திரோதானம் எனும் மறைத்தல் (invisible) செய்கைக்கு உரிய சக்தி தேவதைக்கு உரிய திரஸ்கரிணி எனும் மந்திரத்தை நளனுக்கு உபதேசித்தார்.
நளனும் அந்த மந்திர வித்தையை இடைவிடாது ஜபித்து, எவர் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்துலாவும் தன்மையை சிறிது நேரத்திற்கு பயன்படுத்தும் திறமை கொண்டான்.
அத்திறமை கொண்டு, தமயந்தியை தனியே காண பயன்படுத்திக் கொண்டான்.
அவளை மறைந்துலாவும் நிலையிலேயே கண்டுவிட்டு, தக்க நேரம் வந்தவுடன் அவளிடமிருந்து விலகிவிடுவான்.
தமயந்தி தினமும் மாலை (evening) வேளையில் ஒரு மாலை தொடுத்து, தன் காதல் மணாளனாகிய நளனை எண்ணிக் கொண்டு, தன் எதிரே நளன் நிற்பது போல பா(ba)வித்துக் கொண்டு மாலையைப் போடுவாள். அந்த மாலை கீழே விழுந்தது கண்டு, தன் நிலையை எண்ணி வெட்கி நகர்வாள்.
இது போன்ற செயல் தினமும் நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள், தினமும் செய்வது போல, தமயந்தி மாலை எடுத்து வருகின்றாள். அச்சமயம் திரஸ்கரிணியின் உதவியால் நளன் தமயந்தியின் எதிரே வருகின்றான்.
என்றும் நடப்பது போல, தமயந்தி மாலையை, எதிரில் தான் நிற்கின்றான் என்று எண்ணி மாலையைப் போட்டாள். அந்த மாலை எவர் கண்ணுக்கும் தெரியாமல் நின்ற நளன் தோள் மீது விழுகின்றது.
தினமும் நடப்பது போலல்லாமல் அந்த மாலை அந்தரத்தில் நிற்பது கண்டு மயங்கி விழுகின்றாள்.
நளன் தமயந்தியைக் காண, திரஸ்கரிணி எனும் மந்திரத்தை சிதம்பர §க்ஷத்ர மந்திரங்களில் இருந்து நாரதரிடம் கற்றுக்கொண்டதால், நன்றி மறவாத நளன், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு ஒரு அழகிய பதக்கம் சாற்றி வழிபட்டான். (உமாபதி சிவம் எழுதிய குஞ்சிதாங்கிரிஸ்தவம் - பாடல் எண் - 187 - நளன் திரஸ்கரிணி கற்றதைக் குறிக்கின்றது)

அந்த அழகிய பதக்கம் இன்றளவும் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்திலும், மார்கழி ஆருத்ரா தரிசன உத்ஸவத்திலும் "நள சக்கரவர்த்தி பதக்கம்" எனப் போற்றப்பட்டு, ஸ்ரீமன் ஆனந்த நடராஜ மூர்த்திக்குச் சாற்றப்படுகிறது.
மிக அழகிய வேலைப்பாடுகளும், கண்களைக் கவரும் கற்கள் கொண்டும், மிக மிக அற்புதமாக இருக்கும் நள சக்கரவர்த்தி பதக்கம்.
அந்தப் பதக்கம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு சாற்றப்பட்டவுடன், மேலும் அப்பதக்கம் அழகுபெறும்.


மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5) (மோட்ச தீபம்)

ஆன்மீகம். ஆன்மாவை ஒருமுகப்படுத்தி இறைவனை நாடிடும் ஒரு அற்புதமான பாதை. ஆன்மீகப் பாதை அறப்பாதை. ஆன்மீகம் காட்டும் வழிகள் அனைத்தும் நல்வழிகளே.
பயிர் செழித்தால் நாடு செழிக்கும் என்பது போல ஆன்மீகம் செழித்தால், மக்கள் நலம் செழிக்கும். ஒற்றுமை உண்டாகும்.
ஆன்மீகப் பாதையில் இறைவனை வணங்கிடும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை இறைவனை வழிபட்டு பேறு பெற ஆன்மீகத்தின் பாதைகள் வழிகாட்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல்கள் இருந்தாலும், ஒரு ஆன்மீகவாதியின் இறுதியான வேண்டுதல் என்னவாக இருக்க வேண்டும்?
அது மோட்சம் மட்டுமே. மோட்சம் அல்லது முக்தி என்பது மீண்டும் பிறவாத வரம் கேட்பதுதான் இறைவனிடம் வேண்டப்படும் கடைசி வேண்டுதல்.
தர்ம, அர்த்த, காம்ய, மோக்ஷ - அறம், பொருள், இன்பம், வீடுபேறு (முக்தி) - இந்த வார்த்தைகள் தான் எந்தவொரு ஆன்மீக வேண்டுதலிலும் அமையும்.
மனிதன் தான் செய்யும் கர்மாக்களுக்குத் தகுந்தாற்போல அடுத்தடுத்த பிறவிகள் அமையும் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்கின்றது.
ஒரு ஆன்மா, ஜீவாத்மாவாக - உயிர் கொண்டு பிறவி எடுத்தால், அது மீண்டும் இறைவனாகிய பரமாத்மாவிடம் கலப்பது தான் மோட்ச நிலை.

ஜீவாத்மா => பல பிறப்புகள் => பரமாத்மாவிடம் ஒன்று சேர்தல்.

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் போன்ற ஆன்மீகக் கொள்கைகள் பல வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டாலும், மேற்கண்ட வாக்கியத்தையே உறுதிப்படுத்துகின்றன.

கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்புகளின் எண்ணிக்கை மாறுபடும். (ஏழுகடல்களின் மணல்களைக் கூட எண்ணிவிடலாம். ஆனால், என் பிறப்புகளின் எண்ணிக்கையை அளவிட முடியாது என்கிறார் அருணகிரிநாதர்)
உள்ளத் தூய்மையுடன், உண்மையான பக்தியுடன், ஆன்மீகம் காட்டும் தூய அறப்பாதையில் இறைவழிபாட்டைச் செய்தால் பிறவாநிலை கிடைக்கும் என்கின்றன புராணங்கள் (பெரியபுராணம் - 63வர் வரலாறு)
உயர்ந்த பக்தியே உன்னத முக்திக்கு உண்டான வழி.

கலிகாலத்தில் வாழும் நாம் மோட்சத்தை அடைய என்னதான் வழி? பக்திநிலையை சரியாக பின்பற்ற முடியுமா? மோட்சத்தை அடைய எளிய வழி எது ?
இக்கேள்விகளுக்கும் ஆன்மீகம் விடைதருகின்றது.
க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம் போன்ற காலங்களில் எங்கும் கோயில்கள் கிடையாது. (துவாபர யுகத்தில் நடைபெற்ற பாகவதத்தில் சில கோயில்கள் இருந்ததாக (ருக்மி, ருக்மிணி, கிருஷ்ணன் - திருமணம்) - கூறப்படுகிறது.)
அப்பொழுதெல்லாம் கடும் தவம், பெரும் வேள்விகள், வடக்கிருத்தல் போன்றவையே மோட்சத்தைத் தரக் கூடியனவாக இருந்தன.
அந்த யுகங்கள் இறைவனே நேரில் நின்ற காலம்.

ஆனால், கலியுகம் - இறைவனை ஆலயங்களில் தரிசித்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது.
நமது ஆன்றோர்கள் சில ஆலயங்களை முக்தி தரும் ஆலயங்களாக வகுத்துள்ளார்கள். (சிவ மஹா புராணம்)

திருவாரூரில் பிறந்தால் முக்தி கிடைக்கும்.
காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி கிடைக்கும்.
காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும்.
திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி கிடைக்கும்.
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்.


திருவாரூரிலே பிறத்தலும், காஞ்சியிலே வாழ்வதும், காசியில் இறப்பதும் அனைவருக்கும் கிடைப்பது அரிது.

சிதம்பரத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.

சிதம்பரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் நடேச தண்டகம் எனும் நூல் "சிதம்பரம்" என்று சொன்னாலே (நாம உச்சாரண மாத்ராத் முக்தி ப்ரதே - 19வது ஸ்லோகம்) முக்தி கிடைக்கும் என்கிறது.
மேற்கண்ட ஸ்தலங்களின் பெருமை அளவிடற்கரியது.

ஆயினும், தரிசித்தால் முக்தி என்பதை எப்படி சிதம்பரம் அளிக்கின்றது என்பதைக் காண்போம்.

சிதம்பரம் - ஆனந்தமாக நடராஜர் நடமிடும் ஸ்தலம்.
இந்த ஸ்தலத்தின் பூஜை பிரயோகங்களை வகுத்தவர் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி மஹரிஷி.
ஆயிரம் தலைகளில் உள்ள ஆயிரம் நாக்குகளால் கூட சிதம்பரத்தின் பெருமைகளை சொல்லிமுடிக்க முடியவில்லை என்கிறார் ஆதிசேஷன்.

அப்படிப்பட்ட சிதம்பர க்ஷேத்ரம், நாம் வாழும் கால வெள்ளத்தின் கணக்குப் படியும், உடல் கணித படியும் அமைந்து தரிசித்தாலே முக்தியைத் தரவல்லது.

ஒரு சிறு காலக் கணக்கு :
நான்கு பொழுதுகள் = 1 நாள் (காலை, மதியம், சாயங்காலம், இரவு)
ஏழு நாட்கள் = ஒரு வாரம்
52 வாரங்கள் = ஒரு வருடம்
365 நாட்கள் = ஒரு வருடம்


சிதம்பரத்திற்கு நான்கு கோபுரங்கள் உண்டு. நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகள்.

ஒவ்வொரு கோபுரமும் ஏழு நிலைகளைக் (ஏழு மாடிகள் அல்லது ஏழு அடுக்குகள்)கொண்டது. ஏழு நிலைகளும் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கின்றன.

கோபுரத்தின் மேலே பதின்மூன்று கலசங்கள் உள்ளன.
நான்கு கோபுரங்களிலும் 4 X 13 = 52 கலசங்கள்.
இந்த 4 X 13 = 52 கலசங்களும் ஒரு வருடத்திற்குரிய 52 வாரங்களைக் குறிக்கின்றன.

நான்கு கோபுரங்களின் உச்சியில் 365 விளக்குகள் ஏற்ற வசதியாக பெரும் அகல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த 365ம் ஒரு வருடத்திலுள்ள நாட்களைக் குறிக்கின்றன.

மோக்ஷ தீபம் :
ஒருவர் இறந்துவிட்டால் அவர் மோக்ஷம் செல்ல வசதியாக வெளிச்சம் வேண்டும் என வேண்டிக்கொண்டு அவருக்காக அவருடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ ஏற்றக் கூடியது மோக்ஷ தீபம்.

இந்த மோட்ச தீபம் மிகவும் புனிதமானது. ஆத்மாவுக்கு ஒரு நல்வழியைக் காட்டக் கூடியது.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்களும், இறந்துவிட்ட முன்னோர்கள் நல்லபடியாக மோட்சம் அடைய வேண்டியும், முன்னோர்களுக்கு நற்கதி ஏற்பட வேண்டியும் ஏற்றப்படும் மோட்ச தீபம் மிகவும் பலனளிக்கக் கூடியது.

இறந்துவிட்ட முன்னோர்களுக்கான தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் போன்ற செயல்கள் செய்ய முடியாதவர்கள், அந்த ஆத்மா திருப்தி அடைய மோட்ச தீபம் ஏற்றப்படுகின்றது.

இதுவரை, கோயிலின் வெளிச்சுற்றில் அமைந்த கோபுரங்கள் காலக் கணக்கின் அடிப்படையைக் கொண்டது எனக் கண்டோம்.

அடுத்து உள் செல்வோம். இனி மனித உடல் கூறு கணிதம் இடம்பெறுகின்றது.

நமது உடல் பஞ்ச கோசங்களாகப் பகுப்பட்டிருக்கின்றது. (யோக சாஸ்திரம்).
அவை 1. அன்னமய கோசம், 2. பிராணமய கோசம், 3. மனோமய கோசம், 4. விஞ்ஞான மய கோசம், 5. ஆனந்தமய கோசம்.
1. அன்னமயகோசம் - உணவினால் வலுப்பெறும் உடல்
2. பிராணமயகோசம் - மூச்சுக் காற்றினால் வலுப்பெறும் உடல்
3. மனோமய கோசம் - பேச்சு, உணர்வுகள் கொண்ட உடல்
4. விஞ்ஞானமயகோசம் - புத்திக் கூர்மை (மூளை)
5. ஆனந்தமய கோசம் - இதுவே உயிர்நிலை. இதயத் துடிப்பு

மேற்கண்ட ஒவ்வொன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புகொண்டது.

1.உணவு எனும் சாப்பாடு நின்று போனால் வெளி உடல் இயக்கம் நின்றுபோகும். சுவாசம் குறையும்.
2.மூச்சுக்காற்று குறையும் போது உடலின் செயல்பாடுகள் குறையத் தொடங்கும்.
3.மூச்சு குறைந்தால் தொடுதல் போன்ற உணர்வுகள் மங்கும்.
4. உணர்வுகள் குறைந்தால் மூளை செயலிழக்கும்.
5. இறுதியாக, இதயத் துடிப்பு - இது நின்றால் உடலில் இருந்து உயிர் பிரிந்து ஆன்மாவாக மாறும்.

(உலகத்தின் இதயத் துடிப்பாக சிதம்பரம் விளங்குகின்றது. ஆகையால் சிதம்பரம் இருதய க்ஷேத்ரம் என்று கூறப்படுகின்றது. உலகிற்கு உண்டான ஆதாரத் துடிப்பு (dynamic) சிதம்பரம். அதுவே ஆனந்த நடனம். அதுவே உலகத்தையே செயலாற்றல் புரியவைக்கும் ஆதார விசை.

ஐந்து கோசங்களின் செயல்பாடுகள் குறைவதால், படிப்படியாக உயிர் பிரிகின்றது.

இதையே தலைகீழாகப் பார்த்தோமானால், உயிர் உருவாகி, மூளைத் திறன் அதிகரித்து, உணர்வுகள் பெற்று, நல் சுவாசம் கொண்டு, நல்ல உணவும் எடுத்துக்கொண்டால் தான் பூத உடல் வலுவாகின்றது.

மேற்கண்ட பஞ்ச கோசங்களே ஐந்து பிரகாரங்களாக சிதம்பரத்தில் அமைந்துள்ளது.
ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சித்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.
இந்த சித்ஸபையும் உடல் கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது.


பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை.
இந்த தங்க ஓடுகள் 72,000 தங்க ஆணிகள் கொண்டு இணைக்கப் பட்டுள்ளன. இந்த தங்க ஆணிகள் மனித உடலில் உள்ள நாடி நரம்புகளைக் குறிக்கக்கூடியது.
ஒன்பது கலசங்கள் பொற்கூரையின் மேல் உள்ளது.
இந்த ஒன்பது கலசங்களும் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களைக் குறிக்கின்றது.

கால வெள்ளத்தின் நடுவே வாழ்கின்ற (காலக் கணக்கின்படி அமைந்த கோபுரங்களுக்கு உள்ளே நுழைந்து),
பஞ்சகோசங்களால் பகுக்கப்பட்ட (ஐந்து பிரகாரங்களையும் கடந்து)
உடல் - உயிர் கொண்ட ஆன்மா (சித்ஸபையில் நடமிடக்கூடிய) நடராஜப் பெருமானைக் காண்பதே மோட்சம் தரும் காட்சியாகும்.

சித்சபையில் மேலேற ஐந்தெழுத்தான நமசிவய எனும் மந்திரங்களே ஐந்து படிகளாக அமைந்துள்ளது.

அங்கிருந்து பார்த்தோமானால், இயற்கையான ஒளி வெள்ளத்தில், ஜ்வாஜ்ஜல்யமான காட்சி புலனாகின்றது.
24 தீ ஜ்வாலைகள் கொண்ட திருவாசி.
அந்தத் திருவாசியின் நடுவே நடராஜப் பெருமானின் ஆனந்த நடனக் கோலத்தைக் காண்கின்றோம்.


பனியால் நனைந்த ஜடை. கயிலை மலையிலிருந்து நேராக வந்தாரல்லவா? அந்தப் பனி இன்னும் காயக் கூட இல்லை. நனைந்தே இருப்பதால் பறக்கும் நடன இயக்கத்திலும் விரியாத செஞ்சடை கொண்டிருக்கின்றார்.
சடையில் கங்கையும், சந்திரகலாபரணமும் அலங்கரிக்கின்றார்கள்.
சந்திரனைப் பழிக்கும் வகையில் அமைந்த நெற்றி. அதன் நடுவே நெற்றிக்கண். பூவின் நடுவில் ஒரு பூப்பூத்தது போன்ற மலர்ந்த முகம். நன்றாக நாணேற்றப்பட்ட வில் போன்ற அழகுற அமைந்த புருவங்கள். செழுமையான கன்னங்கள். தரிசனம் செய்வோரைத் தனிப்பட்ட முறையில் பார்க்கின்றாரோ, நம்மை மட்டும்தான் பார்க்கின்றாரோ என்று எண்ணக் கூடிய வகையில் சற்றே சாய்ந்த தலை. புன்சிரிப்பு கொண்ட உதடுகள். உடுக்கை கொண்ட கையிலிருந்து தான் சத்தம் எழுகின்றதோ என உணரவைக்கும் வலக்கை. இடக்கையிலிருக்கும் தீயின் ஒளி மேலும் சித்சபையை பிரகாசமாக்குகின்றதோ என ஐயுறவைக்கும் தோற்றம். அழகான ஆபரணங்கள் அம்பலவாணனுக்குச் சாற்றப்பட்டதால் மேலும் அவை அழகுபெறுகின்றன. அதிலிருக்கும் பிரம்ம கபால மாலை எழில் கொஞ்சுகின்றது.
(இந்த பிரம்ம கபால மாலை - நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் தலைப் பாகம் மட்டுமே இருக்கும். மொத்தம் 32 முகங்கள் இருக்கும். புராணங்கள் கூற்றுப்படி, 32 பிரம்மாக்களே ஒவ்வொரு கல்பத்திலும் (காலக் கணக்கு) மீண்டும் மீண்டும் உயிர்பெறுவார்கள். நடராஜரின் தலையில் உள்ள சந்திரனிலிருந்து அமிர்த தாரை (அமுத நீர்த்துளி) பட்டு, ஒவ்வொரு பிரம்மாவாக உயிர்ப்பிக்கின்றது. ஒரு பிரம்மா இறக்க, அடுத்திருக்கும் பிரம்மா அமிர்த தாரையால் உயிர் பெற்று படைப்பைத் தொடங்குகிறார். இதுவே சுழற்சி முறையில் இயங்குகின்றது. - குஞ்சிதாங்கிரிஸ்தவம் - 130வது ஸ்லோகம்)
சூர்யனின் ஒளியையும் மிஞ்சும் தாடங்கம், காதுகளில் தோடுகள். (பக்தர்களின் வேண்டுதல்களைக் காது கொடுத்துக் கேட்பதால் அவர் தோடுடைய செவியன்)
மார்பகம் முழுக்க மறைக்கும்படியான சிவசிவ பதக்கம். நமசிவய பதக்கம். தங்க மேனியை விலை மதிப்பில்லா கற்கள் கொண்ட பதக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு அலங்கரிக்கின்றன.
முயலகன் எனும் அரக்கன் மேல் ஊன்றிய திருப்பாதம் நிலைகொள்கின்றது. வலிமை வாய்ந்த கால்களில் வீரகண்டாமணி எனும் அணி அழகு செய்கின்றது. அந்த அரக்கனும் ஆட்டத்தைக் காண முயல்கின்றானோ என்றே தோன்றுகிறது.
தூக்கிய திருவடி. குஞ்சிதபாதம். என்னே மென்மையான பாதம். வளைந்து நெளிந்து ஒரு குழைந்தையின் மென்மையான பாத ஸ்பரிசத்தை அத்திருப்பாதத்திலிருந்து கண்டு உணரமுடிகின்றது. தூக்கிய திருவடியில் அழகிய வைரங்களால் இழைக்கப்பட்ட மணி ஒன்று உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.
ஆஹா !
கண்டோம் காட்சியை ! பெற்றோம் மோட்சத்தை !!

பக்தியால் மெய்மறக்க, கண்கள் பணிக்க, உள்ளம் துள்ள, கைகள் பணிய, எந்த ஜென்மத்தில் செய்த பெரும் புண்ணியமோ, இந்த ஜன்மத்தில் நடராஜரைக் காண முடிந்தது !

ஆனந்த நடனமிடும் நடராஜப் பெருமானைக் காண்போம் !
ஆனந்த வாழ்வு பெற்றிடுவோம் !!
மீண்டும் பிறவாத நிலையான முக்தி எனும் மோட்ச நிலையைப் பெற்றிடுவோம் !!!

வேறு சில கூற்றுக்களின் படி,
நான்கு கோபுரங்களும் நான்கு யுகங்களாக அமைந்திருக்கின்றன.
கோபுரத்தின் ஏழு நிலைகளும் ஏழு பிறவிகளைக் குறிப்பன.
ஒரு ஆன்மா ஏழு பிறப்புகளுக்குப் பிறகுதான் மோட்சம் சென்றடையும் என்று புராணங்கள் கூறுகின்றன.
முதலாவது அல்லது மூன்றாவது என்று எந்தப் பிறப்பில் இருந்தாலும் சிதம்பரத்தை தரிசனம் செய்வதால் மீதம் இருக்கும் பிறப்புகள் பிறக்காமல் நேராக மோட்சத்தை அடையமுடியும்.

தமிழ் நால்வரில் ஒருவரான அப்பர் சுவாமிகள், சிதம்பரம் வந்து தரிசித்தால் மோட்சம் கிடைத்துவிடும் ஆகையால், நடராஜரின் திருவடி தரிசனத்தைக் காண வேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் என்றே மன்றாடுகின்றார். (குனித்த புருவமும் .... மனித்தப் பிறவியும் வேண்டுவனே இம் மாநிலத்தே)

நடராஜப் பெருமானின் திருமுகம் மட்டுமே, விருந்தோம்பும் குணத்தோடு "என்று வந்தாய் எனும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே" - என்று வந்தாய், எப்படி இருக்கின்றாய் என்று உள்ளம் குழைய கேட்பது போல உள்ளது என்கின்றார்.
மோட்சம் தரும் காட்சியைக் கண்டு முக்தி நிலை பெறுவோம்.

- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572
- yanthralaya@yahoo.co.in

எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.

தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?), கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை), கலிதோஷத்தினை நீக்கிய கணிதம் (கால கணிதம் - 4), மோட்சம் தரும் காட்சி (கால கணிதம் - 5 - மோட்ச தீபம்)

12 comments:

Geetha Sambasivam said...

எல்லாப் பதிவுகளையும் ஒண்ணாக்கி இருப்பது சரியா இல்லைனு தோன்றுகிறது. படிச்சு மனசில் வாங்கிக்க முடியலை. நான் ஏற்கெனவே கணக்கில் வீக். மறுபடி வரேன். இன்னும் ஆழ்ந்து படிச்சு மனசில் வாங்கிக்கணும். நேரம் எடுக்கும்! :(

Geetha Sambasivam said...

தொடர

Geetha Sambasivam said...

கமெண்ட்ஸ் கொடுக்கும்போதே ஃபாலோ அப்புக்கான ஆப்ஷனும் வந்தால் நல்லா இருக்கும்,. ஒரு கமெண்டைக் கொடுத்ததும் தான் மறுபடியும் கொடுத்து ஃபாலோ அப் செய்ய முடிகிறது. :(

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

இப்போ முழுப்பக்கக் கமெண்ட் பக்கமா மாறி இருக்கு. இதிலே follow up option தன்னாலே வந்துடும். கமெண்ட் பாக்ஸ் னால் அதிலே செலக்ட் பண்ணிக் கொடுத்ததும் தான் அடுத்த கமெண்டுக்கு follow up வருது. இப்போச் சரியாய் இருக்குனு நினைக்கிறேன்.

R.DEVARAJAN said...

அருமையான தொகுப்பு;
தெளிவான விளக்கம்
நன்றி

தேவ்

Anonymous said...

அடா அடா அடா,என்ன அருமையான விளக்கங்கள்.என்னுடைய வியப்பு இன்னும் நீங்கவில்லை.உங்களுக்கு என் நமஸ்காரங்கள்.

raja8 said...

உங்களுக்கு என் நமஸ்காரங்கள். ungal katturai padithavudan manadhu santhoshamaga irukkirathu. ennai vazhthungal. nandri

manikandan said...

I read your article in Imaya Geetham and i searched for you in internet. Thank God, i have found your blog. Please continue the good work.

T.K. Ganesan said...

wonderful article. please continue your good work.

Namaskarngaludan,

T.K. Ganesan

senthilkumar said...

its very very good job sir. Keep it up. Om Namasivaaya....

Unknown said...

உங்களின் இந்த முயற்சிக்கு மிக மிக நன்றி அய்யா

Chidambaram Venkatesa Deekshithar said...

இதில் சொல்லப் பட்ட செய்திகள் மிக மிக அற்புதமாக விளக்கப் பட்டுள்ளது.