Thursday, May 26, 2011

ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்










ஸஹஸ்ரநாம ஸம்மேளனம்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.

இதற்கு முந்தைய கட்டுரையாகிய லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் எனும் பதிவைப் படித்து, பிறகு இந்தப் பதிவைப் படிக்கக் கோருகின்றேன். (இங்கே க்ளிக் செய்து படிக்கவும்)

இந்தப் பதிவில் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும் அமைந்திருக்கும் ஒற்றுமைகளைக் கலந்து (MIXTURE – ஸம்மேளனம்) காண்போம்.








ப்ரஹ்மஸ்ரீ க. பரமேஸ்வர தீக்ஷிதரின் ரம்யமான குரலில் அமைந்த ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினை மேலே உள்ள Barல் Play Button அழுத்திக் கேட்கலாம்.

உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம்.
அந்த இந்து மதத்தின் மிகப் பழமையான வழிபாடு சிவ வழிபாடு.
ஹரப்பா & மொகஞ்சதாரோ நாகரீக உலக அகழ்வாய்வில் சிவ லிங்கத்தின் வழிபாட்டிற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
அது தவிர, உலகமெங்கும் சிவ வழிபாட்டிற்கானச் சின்னங்களைக் கண்டறிந்திருக்கின்றார்கள்.

சிவம் – நிலைத்த சக்தி (STATIC ENERGY).
சக்தி – இயங்கு சக்தி. (DYNAMIC ENERGY)
ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
இந்த இரண்டும் இணைந்ததினால் மட்டுமே உலகம் உயிர்பெற்றது. அதன் ஆயுள் நீண்டு கொண்டே இருக்கின்றது. (E = MC2) அதாவது, இந்த பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

ஒரு அணைக்கட்டில் தேங்கி இருக்கும் நீர் – சிவம் (நிலையானது).
அதே நீர் அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்பட்டால், பெருக்கெட்டுது வரும் நீர் - அந்த இயக்கம் - சக்தி.
ஆக, சிவசக்தி இணைவு மட்டுமே பேராற்றலைத் தரக்கூடியது.

சற்று நேரம் அமைதியாக - நிலைத்து இருக்கச் சொல்லும் வகையில் அமைந்த சொல்லாடல் : ‘சற்று நேரம் சிவமாக இரு’.
இதில் வரும் ‘சிவமாக’ எனும் வார்த்தையே நாளடைவில் ‘சும்மா’ என்று அர்த்தமற்ற வார்த்தையாகத் திரிந்தது. (‘சற்று நேரம் சும்மா இரு’)

இறைவழிபாட்டிலும் பெரும் அருட்சக்தியைத் தரக்கூடியது சிவசக்தி வழிபாடு.
முன்னர் சொன்னது போல, மிகப் பழமையான வழிபாடாகிய, சிவலிங்க வழிபாடு அதாவது சிவசக்தி வழிபாடு மிகப் பெரும் பேரருளைத் தரக்கூடியது.

(ஒரு சமயம், ராவணன் புஷ்பக விமானம் கொண்டு வரும் வழியில் கைலாய மலை எதிர்ப்பட, அதைத் தன் பாதையிலிருந்து அகற்ற - அகந்தையுடன் கைலயாத்தைப் பெயர்க்க முற்பட, ராவணனின் முயற்சியால் நடுங்கிய கைலாயத்திலிருந்த பார்வதி தேவி அச்சத்துடன் சிவபெருமானை ஆலிங்கனம் செய்ய, எதிர்பாராத தருணத்தில் அம்பிகை தழுவியதால் ஆனந்தம் அடைந்த சிவன், பார்வதியை நோக்கி அஞ்சவேண்டாம் என்று கூறி, தனது கால் கட்டை விரலால் மலையை அழுத்த, அந்த நேரம் ராவணனின் கைகள் மலைக்கும், பூமிக்கும் இடைப்பட்டு நசுங்க, அலறியழுத ராவணன் சாமகானம் மீட்ட, இறைவன் பார்வதி தேவியின் ஆலிங்கனத்திற்குக் காரணமாக இருந்த ராவணனுக்கு, சிவசக்தி ரூபமாய் விளங்கி – அவன் கேட்காமலேயே மூன்று கோடி நாள் ஆயுள், மிகுந்த பராக்கிரமம், வைரம் பாய்ந்த உடல், சந்திரஹாசம் எனும் வாள் என வரங்களை வாரி வாரி வழங்கியருளினார். ராவணன் சிவசக்தி ரூபத்தை போற்றியதால் மட்டுமே (அவன் எதுவும் கேட்காமலேயே) பற்பல வரங்களைப் பெற்றான்.)

சிவலிங்கத்தின் மேல் பாகம் - லிங்க பாகம் சிவமாகவும்,
கீழ்பாகம் – ஆவுடையார் பாகம் – சக்தியாகவும் விளங்குவதை லிங்கபுராணம் கூறும்.

சிவனையும், சக்தியையும் ஒருங்கே அல்லது ஸம்மேளனமாக (கலந்து) தரிசனம் செய்ய வழி செய்யும் இறைவடிவம் சிவலிங்க வடிவம்.

சிதம்பரம் – பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாச தலமாக விளங்குவது. சிதம்பர ரகசியம் விளங்கும் ஸ்தலம்.
சிதம்பர ரகசியத்தின் பல விளக்கங்களில் முக்கியமான ஒன்று :
சிதம்பர ரகசியம் அமைந்த அந்த அற்புதமான இடத்தில், சிவ யந்திர சக்ரமும், சக்தி யந்திர சக்கரமும் ஒருங்கே (ஸம்மேளனமாக) இணைந்துள்ளது.
ஆகாயம் எல்லையற்று விளங்குவதைக் குறிப்பது, இறைவனின் சக்தி எல்லையற்றது என்பதை தெளிவுபடுத்துவது, ஆகாயத்தின் முழுமை நம் கண்களுக்கு புலப்படாதது என்பதை உணர்த்துவது சிதம்பர ரகசிய தத்துவம். (யந்திர சக்கரம் – தெய்வத்திற்கான உயிர் போன்றது. உயிர் எப்படி நம் கண்களுக்குப் புலப்படுவது இல்லையோ அது போல யந்திர சக்கரங்கள் நம் கண்களுக்குப் புலப்படாமல் அமைக்கப்பட்டிருக்கும்.)

ஆக, சிதம்பர ரகசியத்தின் மிக முக்கிய கோட்பாடு – சிவசக்தி (ஸம்மேளனம்) இணைவே.

சிதம்பரத்தின் சித்ஸபையில் கண்களுக்குப் புலப்படாமல், சிவசக்தி இணைவு இருக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகவே தங்க வில்வ மாலைகள் அந்த புனித இடத்தின் மேல் சாற்றப்பட்டிருக்கின்றன. அதனை தரிசனம் செய்வதே சிதம்பர ரகசிய தரிசனம். மிகப் புண்ணியம் தருவதும், மேலான வரங்களை உடனடியாக நல்குவதும் ஆகியது சிதம்பர ரகசிய தரிசனம்.

கண்ணுக்குப் புலப்படாத அந்த சிவசக்தி இணைவை, சிதம்பர ரகசிய தரிசனம் செய்து நகர்ந்தால், பொன்னம்பலத்தில், அதே சிவசக்தி – ஸ்ரீ நடராஜ மூர்த்தியாகவும், ஸ்ரீ சிவகாம சுந்தரியாகவும் நம் கண்களுக்கு அருள்தரும் காட்சியாக அமையும்.

சிதம்பர ஸ்தலத்தின், மிக முக்கியமான, மேன்மை பொருந்திய வழிபாட்டில் ஒன்றினை சிதம்பர ரகசிய கல்பம் விவரிக்கின்றது. அது ஸம்மேளன அர்ச்சனை.

ஸ்ரீ நடராஜ மூர்த்தியையும், சிவகாம சுந்தரியையும் ஒருங்கே வழிபாடு செய்வது ஸம்மேளன அர்ச்சனை. ஒரே நேரத்தில் இரு தெய்வங்களுக்கும் செய்யப்படும் அர்ச்சனை வழிபாடு. மிகவும் மேன்மையானது.

ஸ்ரீ ஆனந்த தாண்டவாயை நம: என்று முதலில் அம்பிகையையும்,
ஸ்ரீ ஆனந்த தாண்டவாய நம: என்று அடுத்து, நடராஜ மூர்த்தியையும் ஒரே நேரத்தில், ஒரே நாமாவளியை ஆண்பால் & பெண்பாலாகக் கொண்டு, அர்ச்சனை செய்யப்படுவது ஸம்மேளன அர்ச்சனை என்று போற்றப்படுகின்றது.
(பொதுவாக ஸம்மேளன அர்ச்சனை, குடும்ப நன்மை, தம்பதிகளிடையே ஒற்றுமை ஓங்குவதற்கு, விரைவில் திருமண பாக்கியம் கிடைப்பதற்கு, வம்ச அபிவிருத்தி – நற்குழந்தைப் பேறு போன்ற பொதுவான வேண்டுதல்களுக்கும், மேலான ஞான அருள் கிடைக்கவும் செய்யப்படும்.)

ஸம்மேளனம் என்றால் கலந்தது என்று பொருள்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பரமனைப் போற்றும் நாமாவளிகள் உள்ளன. ‘காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தரா’ – பரமேஸ்வரரால் கட்டப்பட்ட திருமாங்கல்ய கயிற்றினைக் கொண்டவள்.
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிணி – சிவனும் சக்தியும் இணைந்த ரூபத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் போற்றுகின்றது.
லலிதா ஸஹஸ்ரத்தைக் கொண்டு அர்ச்சித்தால் சிவ சக்தி இருவரையும் அர்ச்சித்த பலன் கிடைக்கின்றது.
அது போல நடராஜ ஸஹஸ்ரத்தை அர்ச்சித்தாலும் சிவசக்தி அருள் கிடைக்கும் என்கின்றது அதன் பலச்ருதி. (பார்வதியின் பார்வையால் மகிழ்வு கொள்பவர் சிவன்- சிச்சக்தி லோசனானந்த கந்தள:).

லலிதா ஸஹஸ்ரநாமம் சாக்தத்தின் உச்சநிலைக் கடவுளான லலிதா தேவிக்குரிய அர்ச்சனையாக அமைந்தது போல்,
சைவத்தின் மிக உச்ச நிலையில் அமைந்தவரும், உலக இயக்கத்திற்குக் காரணமாக விளங்குபவரும் ஆகிய ஸ்ரீ நடராஜ மூர்த்தியின் ஸஹஸ்ரநாமம் அமைந்திருக்கின்றது. ஆகவே, இது ‘ஸ்ரீ நடராஜ ராஜ ஸஹஸ்ரநாமம்’ என்றே போற்றபடுகின்றது.

இனி நடராஜ ஸஹஸ்ரநாமத்தைக் காண்போம்.

ஒரு சமயம், பார்வதி தேவியானவள் சிவனை நோக்கி தங்களை அர்ச்சித்து பாக்கியம் பெற ஸ்தோத்திரம் சொல்லியருளுங்கள் என வினவினாள்.
அப்பொழுது சிவபெருமான், ‘லக்ஷ்மி தேவியுடன் கூடிய மஹாவிஷ்ணு பன்னெடுங்காலம் காலம் சிவ பூஜை செய்ய, அவர்கள் வேண்டியதற்கு இணங்க, என்னால் சொல்லப்பட்ட ஸ்தோத்திரத்தை இப்பொழுது உனக்கு உபதேசிக்கின்றேன்’ என்றார். (கைலாஸ சிகரே ரம்யே – பூர்வ பாகம்)

லலிதா ஸஹஸ்ரநாமம் எப்படி அம்பிகையின் வாக்கினால் சொல்லப்பட்டதோ அதே போல, பரமேஸ்வரனே சொல்லி அருளியது நடராஜ ஸஹஸ்ரநாமம்.

நடராஜ ஸஹஸ்ரநாமம், சிவ ரஹஸ்யம் எனும் பேரிதிகாசத்தில் அமைந்த, ஆகாச பைரவ கல்பம் எனும் பெருந்தொகுப்பில், சிவ சக்தியினுடைய ஸம்பாஷணை (உரையாடல்) வடிவில் அமைந்த, உடனடியாக அருள் தரக் கூடிய பகுதியாகிய, சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து ஐந்தைந்து ரூபங்கள் தோன்றிய மாகேசுவர வடிவங்களாகிய 25 மூர்த்தங்களைப் பற்றிச் சொல்லக்கூடிய பகுதியில், 59வது அத்தியாத்தில் அமைந்தது.

நடராஜ ஸஹஸ்ரநாமம் – அரும்பொருளை உள்ளடக்கியது. கன கம்பீரமானது. வேத வாக்கியங்களும் இடம்பெறுவதால் வேதங்களுக்கு இணையான தோத்திரமாக விளங்குவது.

வேதங்கள் போன்றே, நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் பொருளை பரமேஸ்வரன் மட்டுமே அறிய முடியும். ஒவ்வொரு நாமாவளிக்கும் அனேக அர்த்தங்கள் உண்டு.
இதற்கான விளக்கத்தினை, சிந்தாமணி எனும் நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம் எடுத்துரைக்கின்றது.

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்,
‘ஸ்ரீ சிவ: ஸ்ரீ சிவா நாத: ஸ்ரீமாந் ஸ்ரீபதி பூஜித:’ என்று தொடங்கி
‘சிதேக ரஸ ஸம்பூர்ண ஸ்ரீ சிவ: ஸ்ரீ மஹேச்வர:’ என்று பூர்ணமாகின்றது.

ஸ்ரீ சிவ என்ற நாமாவளி தொடங்கி ஸ்ரீ சிவ ஸ்ரீ மஹேஸ்வர: என்று முடிவதால் சிவபெருமானின் பரிபூரணமான அருளைத் தரவல்லதாக அமைகின்றது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரத்தில் அமைந்த
ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத்ஸிம்ஹாஸனேச்வரீ – முதல் வரி போல்,
ஸ்ரீசிவ ஸ்ரீசிவாநாத ஸ்ரீமாந்ஸ்ரீபதிபூஜித: - ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் முதல் வரியில், லக்ஷ்மி தேவிக்குரிய ஸ்ரீம் எனும் எழுத்தில் பொருந்தி அமைவது, இவற்றைப் பாராயணம் செய்பவர்களுக்கு கடன் தொல்லைகள் யாவும் நீங்கப் பெற்று, பெரும் செல்வம் அடையும் என்கின்றது இரண்டினுடைய விளக்கவுரைகளும்.

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும், எந்த ஒரு வார்த்தையும் மறு முறை வருவதில்லை. அதே போல அர்த்தமற்ற அசைச் சொற்களும் இடம்பெறவில்லை. முழுமையான இலக்கணப்படி அமைந்தது ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம்.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டது.
அதே போல நடராஜ ஸஹஸ்ரநாமமும் ஒவ்வொரு ஸ்லோக வரியும் பதினாறு எழுத்துக்களையேக் கொண்டுள்ளது – சிவ சக்தி – இருவரும் வேறல்ல என்பதை நிச்சயிக்கின்றது.

ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸி ம்ஹா ச னே ஸ்வ ரீ – 16 எழுத்துக்கள்

ஸ்ரீ சி வ: ஸ்ரீ சி வா நா த ஸ்ரீ மாந் ஸ்ரீ ப தி பூ ஜி த: - 16 எழுத்துக்கள்

ஒரு ஸ்லோகம் இரு வரிகளைக் கொண்டது. லலிதா & ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம் இரண்டிலும் ஒரு ஸ்லோகமானது 32 எழுத்துக்களைக் கொண்டே தொடர்ந்து அமைகின்றது.

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்திலும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்திலும் ஒரே மாதிரியான நாமாவளிகள் 85 இடம்பெறுகின்றன.
இந்த 85 நாமாவளிகளும் ஒரே மாதிரியான எழுத்துக்களின் எண்ணிக்கையை கொண்டுள்ளன.
இவை, நடராஜ ஸஹஸ்ரநாமத்தில் ஆண் பாலாகவும், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பெண்பாலாகவும் அமைந்திருக்கின்றன.

அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
1.ஸ்ரீ சிவ: - ஸ்ரீ சிவா
2.சிவங்கர: - சிவங்கரீ
3.காலஹந்தா – காலஹந்த்ரீ
4.காந்த: - காந்தா
5.காலகண்ட: - காலகண்டீ
6.க்ருதக்ஞா: - க்ருதக்ஞா
.
.
.
82.ஸர்வாதீத: - ஸர்வாதீதா
83. ஸர்வமய: - ஸர்வமயீ
84. கேவல: - கேவலா
85. ஸ்வப்ரகாச: - ஸ்வப்ரகாசா


ஒரே அர்த்தம் தரும் நாமாவளிகள் 336 அமைந்துள்ளன. பதங்கள் வேறாகியிருந்தாலும் பொருள் ஒன்றே.







ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
1. ஸ்ரீமான் - ஸ்ரீகரி (மாட்சிமை தாங்கியவர்கள்)
2. ஸ்ரீபதி பூஜித: - கமலாக்ஷ நிஷேவிதா (லக்ஷ்மீபதியாகிய, தாமரைக்கண் கொண்ட விஷ்ணுவால் போற்றப்பட்டவர்கள்)
3. பரமானந்த தாண்டவ: - லாஸ்யப்ரியா (ஆண்கள் ஆடும் நாட்டியம் – தாண்டவம், பெண்கள் ஆடுவது லாஸ்யம் – இருவருமே நடனத்தில் பிரியமுள்ளவர்கள்)
.
.
336. ஸ்ரீ மகேஸ்வர: - மஹேஸ்வரி (உயர்ந்த நிலையான பரப்ரம்ம நிலையை அருளுபவர்கள்)

ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் உத்தர பாகத்தில், இதனை பாராயணம் செய்வதாலும், அர்ச்சிக்கச் செய்வதாலும் கிடைக்கும் நன்மைகள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. (விரிவஞ்சி விடுத்தனம்)

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முதல் பகுதியிலேயே ஹயக்ரீவர் பற்றிய விவரம் வருகின்றது. (அச்வாநந மஹாபுத்தே.. – அச்வாநநர் - ஹயக்ரீவர்)
ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தின் இறுதி பகுதியாகிய பலச்ருதி பாகத்தின் இறுதியில், ஸ்ரீ ஹயக்ரீவர் போன்றவர்கள், நடராஜ ஸஹஸ்ரநாமத்தினைப் போற்றி, அற்புதமான பேறுகளைப் பெற்றார்கள் என்று அமைகின்றது. (யதிதம் முனயஸ்ஸர்வே ஹயக்ரீவாதய: புரா)

இரு ஸஹஸ்ரநாமங்களையும் கொண்டு, பாராயணம் செய்வது அல்லது செய்யச் செய்வது அல்லது அர்ச்சிக்கச் செய்வது – ஈடு இணையற்ற பெரும் புண்ணியங்களையும், வேண்டும் விருப்பங்கள் அனைத்தையும் மிக விரைவில் நல்க வல்லது.

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் & ஸஹஸ்ரநாம ஸம்மேளனம் எனும் இரு கட்டுரைகளும்,
ஸ்ரீ கணேசய்யர் அவர்களால் எழுதப்பட்ட ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம உரையிலிருந்தும்,
பண்டித ப்ரவர ஸ்ரீ க.மீ. ராஜகணேச தீக்ஷிதர் அவர்கள் அருளிய ‘சிந்தாமணி’ எனும் ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யத்திலிருந்தும்,
அனேக விபரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.


ஸ்ரீ சிதம்பர ஸர்வஸ்வ மந்த்ர குருவர, சதுர்தச சாஸ்த்ர நிதர்சனாகர, கீர்வாண கவி ஸார்வபெளம, பண்டித ப்ரவர ப்ரஹ்மஸ்ரீ
க.மீ. ராஜ கணேச தீக்ஷிதர் (14.11.1902 – 08.10.1984):
தீக்ஷிதர் குலத் தென்றல். ராஜகுரு. தம் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீ நடராஜ ஸ்மரணையிலேயே திளைத்தவர். மஹா ஞானி. அவர்களிடமிருந்து ஞானவித்யை பெற்றவர்கள் பலர். பற்பல அரிய கிரந்தங்களை வெளியுலகுக்குக் கொணர்ந்தவர். பல ஆன்மீக சாதனைகளைச் செய்தவர். இவரைப் பற்றி எழுதப் போனால் ஒரு தனிப் பெருங்கட்டுரையே எழுத வேண்டியிருக்கும்.
இவரால் எழுதப்பட்ட ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாம பாஷ்யம் – ஒரு அருள் பொக்கிஷம். ஞானக் கடல். விஷய ஸாகரம்.
இதுவரை எவரும் செய்யாத வகையில், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமங்களுக்கான உரையினை - வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்தல புராணங்கள், வியாகரணங்கள், கோசங்கள் இவற்றிலிருந்து மேற்கோள்களைக் கையாண்டு, தமக்கேயுரிய தனி நடையில் அதி அற்புதமாக அளித்தவர் ஸ்ரீ க.மீ.ராஜ கணேச தீக்ஷிதர்.
பாஸ்கர ராயர், தான் எழுதிய லலிதா ஸஹஸ்ரநாமத்தினை தனது பெயருக்கு ஏற்றார்போல் (முந்தைய பதிவைக் காணவும்) 12 பகுதிகளாகப் பிரித்து எழுதினாரோ அது போல,
க. மீ. ரா ஜ க ணே ச தீ க்ஷி தர், தனது பெயரிலுள்ள பத்து எழுத்துக்களுக்குத் தக்க வகையில், நடராஜ ஸஹஸ்ரநாம அர்ச்சனைக்கான உரையை பத்து சதகங்களாகப் (10X100) பிரித்து எழுதி அருளியுள்ளார்கள்.
இந்த ஸஹஸ்ரநாம பாஷ்யம் எனும் பெருங்கடலினுள் பல அரிய முத்துக்கள் பொதிந்திருக்கின்றன.
பஞ்ச பூதங்களுக்குமான ஸ்தலங்கள் போல், மஹேஸ்வரனுக்கு உரிய ஈசான, தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுக்குமான க்ஷேத்ரங்கள் பற்றிய குறிப்புகள்,
இருதயம், சிரசு, கவசம், நேத்ரம், அஸ்த்ரம் ஆகிய அங்கதேவதைகளுக்கான ஸ்தலங்கள் பற்றிய குறிப்புகள்,
சிதம்பரத்தின் சித்ஸபையாகிய பொற்சபையில் அமைந்துள்ள, ஒரு காலத்தில் பொன்னை வாரிவழங்கிய ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ ஸ்வாமியை எழுந்தருளச் செய்தவரின் விபரம்,
என அனேக விவரங்கள் விரவியிருக்கின்றன.
(வடமொழியில் அமைந்த சிந்தாமணி எனும் அரிய பொக்கிஷம் கிடைக்குமிடம் N.T. கணபதி தீக்ஷிதர், 17, கிழக்கு சன்னதி, சிதம்பரம் – 608 001. ஃபோன் : 04144 225215)

தச ஸஹஸ்ரநாமம் :
சிதம்பரத்தில் நடம்புரியும் ஆடல்வல்லானுக்கு ஆயிரம் அழுகுப் பெயர்கள் அமைந்ததைக் கண்டோம். தில்லையம்பலவாணன் – ஸ்ரீ நடராஜ ராஜர் என்று போற்றப்படுகின்றார். அவர் நடராஜ ராஜ சக்ரவர்த்தி அல்லவா?
அவருக்கு என்றே ஒரு அரிய, வேறு எந்த தெய்வத்திற்கும் அமைந்திராத வகையிலான ஒரு ஸ்தோத்திர நாமாவளி அமைந்திருக்கின்றது.
அது – ஸ்ரீ நடராஜ ராஜ தச ஸஹஸ்ரநாமம்.
பத்தாயிரம் (10,000) நாமாவளிகள் கொண்டு ஸ்ரீ நடராஜ ராஜரைத் துதிப்பதாக அமைந்தது.
அதன் நாமாவளிகள் ‘அ’ எனும் எழுத்தில் தொடங்கி, வடமொழியின் கடைசி எழுத்தாகிய ‘க்ஷ’ எனும் எழுத்தில் தொடங்கும் நாமாவளியோடு முடிகின்றது.
ஏன் 10,000 நாமாவளிகள் கொண்டு போற்றப்படவேண்டும் ?
இங்கும் ஸம்மேளன தத்துவமே அமைகின்றது.
மஹேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள் உண்டு எனப் பார்த்தோம். அந்த ஒவ்வொரு முகத்திற்கும் மற்றும் அதற்கு உரிய சக்தி தேவியைச் (ஈசான மூர்த்தி & ஈசான சக்தி...) சேர்த்து (5X2=10) ஸஹஸ்ரநாமாவளிகளாகக் கோர்த்தால், அது 10,000 நாமாவளிகாள அமையும். இதுவரை புத்தகமாக வெளிவராதது. உன்னதமானது.
இந்த தச ஸஹஸ்ரநாமாவளியை மேற்கண்ட பதிப்பகத்தாரே வெளியிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றார்கள்.

கலியுகத்தில் நேரும் கஷ்டங்களைக் களைய ஒரே வழி – நாம ஸங்கீர்த்தனம் மட்டுமே.

தெய்வ நாமாவளிகளைப் போற்றி - கஷ்டங்கள் களைந்து, நஷ்டங்கள் நீங்கி, செல்வங்கள் சேர்ந்து, வாழ்வாங்கு வாழ்வோம் !








- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
- Mobile : 94434 796572 & 93626 09299
- Mail : yanthralaya@yahoo.co.in & yanthralaya@gmail.com
- Pl. visit also www.facebook.com/deekshidhar

Monday, May 2, 2011

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்

லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் 1. லகு 2. லலிதம் 3. லக்ஷணம் 4. லட்சியம் 5. லயம் உலகத்தின் மிகப் பழமையான மதம் இந்து மதம். இந்து மதம் காட்டும் வாழ்க்கைப் பாதை அறப்பாதை. ஆன்மீகப் பாதை. மக்களை வழிமுறைப்படுத்தி வாழ்வாங்கு வாழ வைக்கும் உன்னதமான மதம். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்ற இந்து மதத்தின் கிளைகள் மக்களின் நல்வாழ்வுக்கு நல்வழிகாட்டுகின்றன. அந்த இந்து சனாதன தர்ம மதம் – ஆறு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சைவம், வைஷ்ணவம், சாக்தம், ஸௌரம், காணாபத்தியம், கௌமாரம். இதனுள் சாக்தம் என்பது, கடவுளை பெண்பால் வடிவத்தில் சக்தியாக வழிபடச்செய்வது. அன்னைதான் உயிருக்குக் காரணியாக இருப்பது போல, அன்னை வடிவத்திலிருக்கும் தெய்வம் தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக விளங்குகின்றது என்பதை உணரவைப்பது சாக்தம் எனும் பிரிவு. அன்னையை ஆதிபராசக்தியை வழிபாடு செய்ய வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் பல வழிகளைக் காட்டுகின்றன. அதில் மிகவும் மேன்மையானது, அன்னையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற லலிதா ஸஹஸ்ரநாமம் ஆகும். 1.லகு : இந்து தர்ம சாஸ்திரங்கள் சில மந்திரங்களை ஆண்கள் மட்டும், சில மந்திரங்களை பெண்கள் மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற நியதிகளை வகுக்கின்றன. ஆனால், லலிதா ஸஹஸ்ரநாமத்தினை ஆண், பெண் - எந்த நிலையிலிருந்தாலும் சொல்லப்படலாம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன சாஸ்திரங்கள். (ஸ்ரீ ஹயக்ரீவரிடமிருந்து அகஸ்தியர் லலிதா ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டறிந்தார். அகஸ்தியரின் மனைவி லோபாமுத்திரை – அம்பாள் உபாஸகர்களில் மிக முதன்மையானவர். ஹாதி வித்யா என்ற ஸ்ரீ வித்யா உபாஸனையை மேற்கொண்டவர். கணவன் மனைவியாகிய அகஸ்தியரும் லோபாமுத்திரையும் தான் உலகத்திற்கு முதன் முதலில் ஸ்ரீ வித்யா உபாஸனை என்கின்ற அம்பாளின் மிக மேன்மையான மந்திரங்களைக் கேட்டறிந்தவர்கள். ஆகவே ஆண் & பெண் இருபாலாரும் மிக நிச்சயமாக இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தைச் சொல்லி பேறு பெறலாம்.) மிக எளிமையான வார்த்தைகள். அருமையான சொல்லாடல்கள். ஆழ்ந்த கருத்துக்கள். சிறந்த ஓசை நயம். இவையனைத்தையும் கொண்டது இந்த ஸஹஸ்ரநாமம். மிகவும் எளிமையாக இருப்பதால் லகுவான ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக அமைகின்றது. பத்து ஸஹஸ்ரநாமங்களை சாக்த சாஸ்திரங்கள் மேலானவை என்கின்றன. அவை, கங்கா, காயத்ரீ, ச்யாமளா, லக்ஷ்மீ, காளீ, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, ஸரஸ்வதி, பவானீ. அவற்றிலும் மேலான மேன்மை கொண்டது லலிதா ஸஹஸ்ரநாமம். 2. லலிதம் : லலிதம் எனும் வார்த்தைக்கு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது என்று அர்த்தம். இதைப் பாராயணம் செய்வதால் மனம் லகுவாக, லேசாக, கனமற்றுப் போவதாலும், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதாலும், சந்தோஷம் பெருகும் என்பதாலேயே லலிதா என்ற பெயர் வந்தது. லலிதா எனும் பதத்திற்கு கொஞ்சி விளையாடுவது என்றும் அர்த்தம். அம்பிகையானவள் அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைகளையும் ஒரு சிறு குழந்தை விளையாடுவது போல மிக எளிதாகச் செய்பவள் என்ற அர்த்தமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதைப் பாராயணம் செய்யும் போது, அம்பிகையை பாலையாக, வாலைக் குமரியாக, பாலா திரிபுரசுந்தரியாக மனதில் தியானித்தால் - சிறு குழந்தைகளிடம் விளையாடும் போது, அந்தக் குழந்தைகளின் வயதுடையவராகவே நாமும் மாறுவது போல - அம்பிகையின் அருளாடல்களை எளிதில் உணரமுடியும். 3. லக்ஷணம் : அம்பிகையின் அனைத்து லீலைகளையும் பகர்கின்ற இந்த லலிதா ஸஹஸ்ரநாமம், பதினெட்டு புராணங்களின் ஒன்றானதும், இறுதியானதும் ஆகிய பிரம்மாண்ட புராணத்தினுள், ஸ்ரீ ஹயக்ரீவர் மற்றும் அகஸ்தியர் இருவருக்கிடையேயான ஸம்வாதம் (உரையாடல்) எனும் ஸம்பாஷணை வடிவிலான லலிதோபாக்கியானம் எனும் பகுதியில் அடங்கியுள்ளது. லலிதோபாக்கியானம் – மந்த்ர கண்டம், நியாஸ கண்டம், பூஜா கண்டம், புரஸ்சரண கண்டம், ஹோம கண்டம், ரஹஸ்ய கண்டம், ஸ்தோத்திர கண்டம் எனும் பல்வேறு பிரிவுகளை உடையது. இதில் ஸ்தோத்திர கண்டத்தினுள் அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம். வேதங்கள் – பரமேஸ்வரனுடைய உச்வாசம், நிச்வாசம் எனும் மூச்சுக் காற்றிலிருந்து தோன்றியவை. மிகவும் புனிதமானவை. இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் அம்பிகையின் வாக்கிலிருந்து தோன்றியவை. வைகரீ, மத்யமா, பச்யந்தி ஆகிய அம்பிகையின் வாக்கு (சொற்களுக்கு உரிய) தேவதைகளால் சொல்லப்பட்டவை. அம்பிகையின் ஆணைப் படி வாக்கு தேவதைகளால் சொல்லப்பட்டவை. (வைகரீ முதலான வாக் வசினி தேவதைகள் எட்டு பேர். ஒவ்வொருவரும் ஒரு ஸ்வரத்திற்கு அதிபதியானவர்கள். ஸ ரி க ம ப த நி என்ற ஏழு ஸ்வரங்களுக்கு ஏழு பேரும், அதற்கும் மேலான (அனு) ஸ்வர நிலையைக் கொண்ட (மனிதனின் கேட்கும் திறனான 50 Hz – 50000 Hz எல்லைகளுக்கு அப்பாற்பட்ட) சப்தத்திற்கு ஒருவரும் என எட்டு பேரும் சொல்லியருளியது. இந்த லலிதா ஸஹஸ்ரநாமம் ஒரு தனிப்பட்ட நபர் எழுதியது அல்ல. தெய்வமே அனுக்ரஹித்தது. வாக்கு தேவதைகள் அனுக்ரஹித்ததால் இது ரஹஸ்யநாம ஸஹஸ்ரம் என்றே கொண்டாடப்படுகின்றது. ரஹஸ்யம் என்றால் உள்ளுக்குள் புதைந்திருப்பது என்றும் அர்த்தம். அள்ளக் அள்ளக் குறையாத அற்புதப் புதையல் போன்றது லலிதா ஸஹஸ்ரநாமம். வற்றாத ஜீவ நதி போன்று, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகப் படிப்பது போன்று தோன்றச் செய்யும். அம்பிகையின் வாக்கிலிருந்து வந்ததால், இது வேதத்திற்கு சமமாக மதிக்கப்படுகின்றது. வேதங்களுக்கு அர்த்தம் அந்த வேதபிதாவான பரமேஸ்வரனுக்கு மட்டுமே அறியப்பட்டது. அதேபோல லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முழுமையான அர்த்தம் ஜகன்மாதாவாகிய அம்பிகை மட்டுமே அறிந்தது. இதற்கான விளக்கங்களை பற்பல ஆன்றோர்களும், அறிஞர்களும் அளித்திருக்கின்றார்கள். அவர்கள் கூட இதன் முழுமையான விளக்கத்தைத் தர முடியவில்லை என்றே கூறியிருக்கின்றனர். உதாரணமாக, அபர்ணா என்ற ஒரு பெயர் கொண்டு அம்பிகை போற்றப்படுகின்றாள். அபர்ணா என்றால் கடன் இல்லாதவள் என்று அர்த்தம். பக்தர்கள் கேட்கும் கோரிக்கையை நாளை அல்லது அடுத்த நாள் அல்லது வேறொரு நாளில் வரம் தந்து, பக்தர்களின் கோரிக்கையைக் கடனாகக் கொள்ளாதவள் அதாவது பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக அருளுபவள் என்று பொருள். அபர்ணா என்றால், அம்பிகை ஒரு சமயம் பரமேஸ்வரனைத் திருமணம் செய்து கொள்ளத் தவமாய்த் தவமிருந்தாள். தவம் செய்யும் போது, ரிஷிகள் போன்றோர் காட்டில் கிடைக்கக் கூடிய கிழங்குகள் அல்லது பழங்களை உணவாகக் கொள்வது வழக்கம். ஆனால், அம்பிகை இலையைக் கூட உண்ணாமல் (அதாவது உபவாசம் இருந்து – பட்டினியாய்க் கிடந்து) ஊசி மேல் தவம் இருந்ததாக புராணங்கள் கூறும். அபர்ணா என்றால் விழி மூடாதவள் (பர்ணம் – விழுதல். இமையைக் கூட விழாமல் – அதாவது கண்ணிமைக்காதவள்) விழி மூடும் சமயம் பக்தன் வந்து விட்டால், வரம் கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ணி, பக்தர்களுக்காக இமைக்காமல் இருப்பவள் என்று அர்த்தம். இது போன்று பல அர்த்தங்களை ஆன்றோர்கள் அமைக்கின்றார்கள். ஆகையினால், இதற்கான அர்த்தங்களை பிறிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம். (லலிதா ஸஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி மற்றும் ஸௌந்தர்ய லஹரி – இந்த மூன்றையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி எழுத எண்ணம் கொண்டிருக்கின்றேன். அம்பிகையின் அருளால் விரைவில் கைகூட பிரார்த்தனை செய்கின்றேன்) லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம் : லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம். ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்). அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் செய்யும் மந்திரங்கள். பொதுவாக, ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு வேத பாஷ்யங்கள் – எண்ணற்றது என்று அர்த்தம் தருகின்றன. (ஸஹ்ஸ்ரசீர்ஷா புருஷ: .. ஸஹஸ்ரபாத் – யஜுர் வேதம் - புருஷ ஸூக்தம் – இங்கு ஸஹஸ்ரம் என்ற வார்த்தைக்கு எண்ணிக்கையற்றது என்றே பொருள்.) அதேபோல் ஸஹஸ்ரநாமம் என்றால் அம்பிகை எண்ணற்ற நாமங்களை, பெயர்களைக் கொண்டவள் என்று பொருள். நாமாவளி என்றால் பெயர்களை வரிசையாக அமைத்தல் என்று அர்த்தம். (தீபாவளி – தீபங்களை வரிசையாக அமைத்தல்) ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம் (1000) என்றும் அர்த்தம் உண்டு. ஆகவே, அம்பிகைக்குரிய ஆயிரம் பெயர்களை வரிசையாக அமைத்து வழிபடும் பிரார்த்தனைக்கு ஸஹஸ்ரநாமாவளி என்று பெயர். ஸஹஸ்ரநாமம் என்றால் எப்படியெல்லாம் அமையவேண்டும் என்று இலக்கண சூத்திரங்கள் (formula) அறுதியிடுகின்றன. சலாக்ஷ்ர சூத்திரம் என்பது வடமொழி இலக்கணத்தில் மிக முக்கியமான ஒன்று. அது, ஸஹஸ்ரநாமம் எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நியதிப்படுத்துகின்றன. அந்த வகையில் எல்லா விதங்களிலும் பரிபூரணமாக, மிகப் பொருத்தமாக அமைந்தது லலிதா ஸஹஸ்ரநாமம். எளிமையாகவும் (லகு), இனிமையாகவும் (லலிதம்), இலக்கணத்தின் முழுமை பெற்ற (லக்ஷணம்) வடிவமாகவும் லலிதா ஸஹஸ்ரநாமம் அமைந்திருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது. லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணங்கள் பல உண்டு. அவற்றில், சிலவற்றை மட்டும் காண்போம். ஸஹஸ்ரநாமம் அமைய வேண்டும் என்றால் ஆயிரம் பெயர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அவை அந்த தெய்வத்தின் புகழைக் கூறவேண்டும். அவற்றை இலக்கணப்படி ஸ்தோத்திரமாக்க வேண்டும். அப்படி ஸ்தோத்திரமாக ஆனது, சந்தஸ் எனும் சந்தம் அல்லது செய்யுள் தன்மை மாறாமல் அமைய வேண்டும். உதாரணமாக, 1. ஸ்ரீ மாத்ரே நம: (அன்னை வடிவான அம்பிகையை வணங்குகின்றோம்) 2. ஸ்ரீ மஹாராக்ஞ்யை நம: (அகில உலகிற்கும் மஹாராணியை வணங்குகின்றோம்.) 3. ஸ்ரீமத் ஸிம்ஹாஸநேஸ்வர்யை நம: மேற்கண்ட மூன்று நாமாக்களையும் ஸ்தோத்திரமாக மாற்ற முடியவேண்டும். அது, ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீமத் ஸிம்ஹாசனேஸ்வரீ இப்படி ஸ்தோத்திரமாக மாற்றப்பட்டது எவ்விதத்திலும் சந்தங்களில் மாறாமல் அமைய வேண்டும். அதே போல மாற்றப்பட்ட ஸ்தோத்திரத்திலிருந்து நாமாவளிகாக மறுபடியும் பிரிக்க ஏதுவாக இருக்க வேண்டும். சில ஸஹஸ்ரநாமங்களில் ஸ்தோத்திரத்துனுள், சந்தங்களுக்கு, செய்யுள் தன்மைக்கு ஏற்ப அமைய வேண்டி, சில அர்த்தமற்ற சப்தங்கள் அமைந்துவிடும். அவை, நாமாவளிகாக மாற்ற வேண்டிவரும்போது, அர்த்தமற்ற சப்தங்கள் (ஸ்தோத்திரத்தில் இருப்பவை) நாமாவளிகளில் வராது.
இது போன்று எந்தவொரு அர்த்தமற்ற சப்தங்களும் இந்த ஸஹஸ்ரநாமத்தில் கிடையாது. சொற்குற்றம், பொருட்குற்றம் இவையில்லாத, அப்பழுக்கற்றதாக லலிதா ஸஹஸ்ரநாமம் திகழ்கின்றது. ஸஹஸ்ரநாமம் அமைவதில் மிக முக்கியமான மற்றொரு நிபந்தனை உண்டு. ஸஹஸ்ரநாமத்தில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், மறுபடியும் அந்த வார்த்தை வேறு எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது. லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இடம்பெறும் எந்தவொரு வார்த்தையும் மறுபடியும் அதனுள் வருவதில்லை. சில வார்த்தைகள் இருமுறை வருவது போல தோன்றக்கூடும். உதாரணமாக, வரதா வாமநயனா ... விச்வகர்பா ஸ்வர்ணகர்பா வரதா வாகதீஸ்வரி ... மேற்கண்ட வரதா எனும் வார்த்தை, மறுபடியும் ஒரு இடத்தில் வருவதைக் காண்கின்றோம். அதை எப்படி அர்த்தம் கொள்வது என்பதை அறிஞர்கள் பகுத்தாய்கின்றார்கள். முதலில் வருவது வரதா, பின்னால் அமைவது அவரதா எனக் கொள்ளவேண்டும். ஸுமுகீ நளினீ ஸுப்ரு: சோபனா ஸுரநாயிகா ... ஸுவாஸின்யர்ச்சனப்ரீதா சோபானா சுத்தமானஸா இங்கு சோபனா எனும் வார்த்தை இரண்டாவது வரியில் அமைவதை, ப்ரீதா (ஆ)சோபனா எனக் கொள்ளவேண்டும். கடபயாதி சங்க்யை : வடமொழி இலக்கணத்திற்கு மிகப் பெரும் பங்காற்றிய வரருசி என்பவர் கடபயாதி ஸங்க்யை என்ற நியதியை வகுத்தார். அது, க, ட, ப, ய என்ற எழுத்துக்களுக்கும், அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்களுக்கும் எண்ணிக்கை மதிப்பைக் கொடுத்தார். ஆகவே அது க ட ப ய – என்னும் எழுத்துக்களை ஆதியாக, தொடக்கமாகக் கொண்ட ஒரு கணக்கு வழி – அதுவே கடபயாதி ஸங்க்யை. க - 1, க(kha) – 2, க(ga) – 3, க(gha) – 4, ங – 5, ச - 6, ச(cha) – 7, ஜ – 8, ஜ(jha) – 9, ஞ - 0 ட – 1, ட(tta) – 2, ட(da) – 3, ட(dda) – 4, ண – 5, த – 6, த(ttha) – 7, த(dha) – 8, த(ddha) – 9, ந - 0 ப – 1, ப(pha) – 2, ப(ba) – 3, ப(bha) – 4, ம – 5, ய – 1, ர – 2, ல – 3, வ – 4, ச – 5, ஷ – 6, ஸ – 7, ஹ - 8 எந்தெந்த எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் (பெயர்கள்) அமையவேண்டும் என்பதை கடபயாதி ஸங்க்யை அறுதியிடுகின்றது.
உதாரணமாக, அருண எனத் தொடங்கும் பெயர்கள்.
கடபயாதி ஸங்க்யை படி அருண எனும் வார்த்தைக்கு 12 எனும் மதிப்பு வருகின்றது. (கடபயாதி ஸங்க்யை – சற்றே கடினமான சூத்திரங்களைக் கொண்டது. எளிதில் புரிபடாதது. தகுந்த ஆசிரியர் கொண்டு கற்க வேண்டும்)
அருணன் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் ஒரு வருடத்தில் 12 மாதங்களைக் கடந்து வருகின்றார்.
சூரியனுக்கு 12 பெயர்கள் உள்ளதாக ஸ்ம்ருதிகள் கூறுகின்றன. (மித்ரன், ரவி, சூர்யன், பானு, ககன், பூஷன், ஹிரண்யகர்ப்பன், மரீசி, ஆதித்யன், ஸவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்) அதே போல மற்றொரு பன்னிரண்டு பெயர்களையும் புராணங்கள் கூறுகின்றன. (1.தபினீ, 2.தாபினீ, 3.தூம்ரா, 4.மரீசி, 5.ஜ்வாலினி, 6.ருசி, 7.ஸுக்ஷும்னா, 8.யோகதா, 9.விச்வா, 10.போதிணீ, 11.தாரிணீ, 12. க்ஷமா) அருண எனும் பதத்திற்கு 12 எனும் மதிப்புடையதால், லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அருண எனும் தொடங்கும் பெயர்கள் 12 தான் அமைந்திருக்கின்றன. இதே போல பல நாமாக்களுக்கு கடபயாதி ஸங்க்யைபடி - எண்ணிக்கையின் மதிப்பும், அதனைச் சார்ந்த நாமாவளிகளின் எண்ணிக்கையும் ஒன்றாகவே அமைவது பெரும் ஆச்சர்யத்தைத் தருகின்றது. மேலே சொன்னது போல, மற்றும் ஒரு வகையில் லலிதா ஸஹஸ்ரநாமம் பகுக்கமுடிகின்றது. அது, 3 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள், 8 எழுத்துக்களில் எத்தனை நாமாக்கள் என்றும் பகுக்கப்படமுடிகின்றது. சந்திரனை ஒப்பிடாத எந்தவொரு அழகியல் இலக்கியமும் இல்லை. அதன்படி, சந்திரனை வர்ணித்து லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பல பெயர்கள் அமைந்துள்ளன. அம்பிகையின் நெற்றியானது – அஷ்டமீ சந்த்ர விப்ராஜ... என்ற நாமத்தின் படி, எட்டாவது தினத்திய சந்திரனைப் போன்று அழகுற விளங்குகின்றது என்று லலிதா ஸஹஸ்ரநாமம் கூறுகின்றது. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை 15 கலைகள் உள்ளன. அதில் எட்டாவது நாள் சந்திரன் – அரை சந்திர (7 1/2க்கும் அதிகமாக) வடிவத்திற்கும் சற்றே கூடுதலாக – விளங்கும். அந்த அர்த்தசந்திர வடிவம் அம்பிகையின் நுதலாக, நெற்றியாக விளங்குகின்றதாம். அப்படி தலையின் மேல் பாகமாகிய நெற்றி அரைச் சந்திர வடிவமும், கீழ் பாகம் அம்பிகையினுடைய சுயமான ஒளி பொருந்திய வடிவத்தினால் மற்றும் ஒரு அரை சந்திரன் வடிவமாகவும் திகழ்கின்றதாம். அப்படியானால், முகம் – இரு அரை சந்திர வடிவங்களும் இணைந்த – பௌர்ணமி நிலவு போல் என்றும் பிரகாசிக்கின்றதாம். (ஆகையினால் தான் அபிராம பட்டருக்கு அமாவாசையிலும் பௌர்ணமியை அம்பிகைத் தோன்றச் செய்தாள்.) எட்டு என்ற எண்ணிக்கை அம்பிகைக்கு மிகவும் உகந்தது. அஷ்டமியில் செய்யப்படும் ஸஹஸ்ரநாம பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தது என்று இதன் பலச்ருதி விளக்குகின்றது. வேதங்களும் அம்பிகையின் புகழை எட்டு என்ற எண்ணிக்கை கொண்டு போற்றுகின்றன. (கௌரிமிமாய ஸலிலானி ... அஷ்டாபதி ... ) அம்பாள் வீற்றிருக்கும் ஸ்ரீ நகரத்தின் முதல் வாயிலில், அஷ்ட தேவதைகள் வீற்றிருப்பதாக ஸ்ரீ வித்யா பூஜை கூறுகின்றது. எட்டின் மடங்கில் உள்ள எண்ணிக்கையை லலிதா ஸஹஸ்ரநாமம் பெரிதும் முக்கியத்துவமாகக் கொண்டுள்ளது. (மஹா சதுசஷ்டி கோடி யோஹினி ... 8X8 = 64 கோடி எண்ணிக்கை கொண்ட யோகினி எனும் தேவதைகளால் துதிக்கப்படுபவள்) அம்பிகையின் நெற்றி - எட்டாவது நாளின் சந்திரனின் வடிவத்தினுடைய காந்தியைக் கொண்டுள்ளது என்றும், கீழ் முகம் மற்றும் ஒரு எட்டாவது சந்திரனுடைய ஒளியைக் கொண்டுள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன. (அதாவது 8 + 8 = 16 – பெளர்ணமி தினத்தை விட மேலான ஒரு ஒளியைக் கொண்டுள்ளவள் அம்பிகை) 16 என்னும் எண்ணிக்கையும், சாக்த உபாஸனையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஷோடச (16) அக்ஷரம் (எழுத்துக்கள்) – சோடஷாக்ஷரீ எனும் (16 எழுத்துக்களைக் கொண்ட) ஸ்ரீ வித்யா மந்திரமே அம்பிகையை வழிபட உகந்த மிக மிக மேன்மையான உபாஸனா மந்திரம் என்று சாக்த சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. அந்த 16ன் அம்சம் லலிதா ஸஹஸ்ரநாமம் முழுக்க விரவியிருப்பதைக் காணும்போது வியக்கத்தக்கதாக உள்ளது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் ஒவ்வொரு வரியும் 16 எழுத்துக்களைக் கொண்டுள்ளன. ஸ்ரீ மா தா ஸ்ரீ ம ஹா ரா க்ஞீ ஸ்ரீ மத் ஸிம் ஹா ச னே ச்வ ரீ – இது லலிதா ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரத்தின் முதல் வரி. இந்த வரியிலுள்ள எழுத்துக்களை எண்ணிவந்தால் 16 எழுத்துக்களில் அமையும். (புள்ளி வைத்த ஒற்றெழுத்துக்கள் இலக்கண விதிப்படி கணக்கில் வராது) அது மட்டுமல்ல ஒவ்வொரு வரியுமே 16 எழுத்துக்களைக் கொண்டு தான் அமைகின்றது. இரண்டாவது வரி, சி தக் னி கு ண்ட ஸம் பூ தா தே வ கா ர்ய ஸ முத் ய தா – 16 எழுத்துக்கள். (ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தினைச் சொல்லிவந்தால் எண்ணற்ற முறை ஸ்ரீ வித்யா மந்திரத்தினை சொன்ன பலன் கிடைக்கும் என்பது உபாஸகர்களின் மேலான கருத்து) இரண்டு வரிகள் சேர்ந்தது ஒரு ஸ்லோகம். ஸ்ரீ மாதா ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத் ஸிம்ஹாசனேஸ்வரி சிதக்னி குண்ட ஸம்பூதா தேவ கார்ய ஸமுத்யதா இரு வரிகளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 16+16 = 32. வடமொழியில் உள்ள எழுத்துக்கள் 51. (அ முதல் க்ஷ வரை) இதில்,
அ எனும் எழுத்தில் தொடங்கும் அம்பிகையின் பெயர்கள் – 40 (அகாந்தா, அகுலா, அக்ஷமாலாதிதரா, அக்ரகண்யா...)
அதே போல, மற்ற எழுத்துக்களில் தொடங்கும் நாமாவளிகளைக் கீழே காணலாம்.

அ எனும் எழுத்தில் 40 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆ எனும் எழுத்தில் 11 இ – 3 ஈ – 2 உ – 5 ஊ – 5 ஏ – 1 ஓ – 2 அம் – 4 க – 81 க(2) – 1 க(3) – 24 ச – 29 ச(2) – 1 ஜ – 18 ட(3) – 2 த – 46 த(3) – 37 த(4) – 14 ந – 75 ப – 81 ப(3) – 24 ப(4) – 37 ம – 112 ய – 13 ர – 38 ல – 14 வ – 79 ச – 59 ஷ – 5 ஸ – 122 ஹ – 11 க்ஷ – 9 நாமாவளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. (ஆக மொத்தம் ஆயிரம் நாமாவளிகள்) வடமொழியின் 51 எழுத்துக்களில் நாமாவளிகள் ஆரம்பிக்காத எழுத்துக்கள்: ஊ, ரு, ரூ, லு, லூ, ஐ, ஔ, அ:, க(4), ங, ஜ(4), ஞ, ட, ட(2), ட(4), ண, த(2), ப(2), ள – ஆகிய 19 எழுத்துக்களில் அம்பிகையின் பெயர்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆக, 51-19 = 32 எழுத்துக்களில் மட்டுமே நாமாவளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தின் ஒரு ஸ்லோகத்தின் உள்ள எழுத்துக்களும் 32 எண்ணிக்கையே. லலிதா ஸஹஸ்ரநாமம் மூன்று பகுதிகள் உடையது. 1. பூர்வ பாகம் 2. நாமார்ச்சனா பாகம் 3. பலச்ருதி பாகம் பூர்வ பாகம் – 51 ஸ்லோகங்களும், நாமார்ச்சனா பாகம் – 182 1/2 ஸ்லோகங்களும், பலச்ருதி – 86 1/2 ஸ்லோகங்களும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. ஆக, மொத்த ஸ்லோகங்கள் = 320 (32ன் பத்தின் மடங்காக அமைவதைக் காணுங்கள்) ஆதியந்தம் : லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஆதி (முதல்) பதம் (வார்த்தை) – ஸ்ரீ மாதா ஆயிரமாவது நாமாவளி – லலிதாம்பிகா ஆதி அன்னையாக விளங்குபவள் லலிதா அம்பிகை என்பதையும், முதலும் முடிவுமாக உள்ளதையும் லலிதா ஸஹஸ்ரநாமம் உணர்த்துகின்றது. 4. லட்சியம் : அம்பிகையிடம் - வேண்டுதலை மனதில் நினைந்து, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை, மனமார பிரார்த்தனை செய்து, இத்தனை முறை சொல்ல வேண்டும் என்று லட்சியம் கொண்டு, பாராயணம் செய்து வந்தால், அம்பிகை அந்த பிரார்த்தனையை மிக நிச்சயமாக நிறைவேற்றுவாள் என்பது ஸத்யபூர்வமான உண்மை. அம்பிகை க்ஷிப்ர ப்ரஸாதினியாக விளங்குபவள். அதாவது எளிமையான பக்தியால் கூட விரைவில் திருப்தி அடைந்து விடுபவள். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் பலச்ருதி மிக அருமையாக பல விளக்கங்களைத் தருகின்றது. சிவ, விஷ்ணு ரூபிணியாக விளங்குவதால், அம்பிகையை, துளசி, தாமரை, வில்வம் கொண்டு ஸஹஸ்ரநாமத்தினால் அர்ச்சிப்பது ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களை அகற்றக்கூடியது. பூக்களைக் கொண்டு அர்ச்சிக்கும் விதத்தை பாஸ்கர ராயர் அருமையாக விளக்குகின்றார். ஆயிரம் நாமாக்களையும் ஒரே வகை பூ கொண்டு அர்ச்சிப்பது பெரும் பேறு அளிக்கும். பல வகை மலர்கள் இருந்தால் தனித் தனி வகையாக அர்ச்சிப்பது மனதால் வேண்டுவதை அருளக்கூடியதாக இருக்கும். மலரின் மலர்ந்த தன்மை மாறாமல் அர்ச்சிக்க வேண்டும். மலர் எப்படி செடி கொடியில் மலர்கின்றதோ அந்த வகையிலேயே அர்ச்சிக்க வேண்டும். உதாரணமாக, செம்பருத்திப் பூ. அர்ச்சனை செய்யும் போது கையில் காம்பு கீழிருக்க, பூ மேலிருக்க அர்ச்சிக்க வேண்டும். இவ்வகை செய்வதால் வாழ்வாங்கு வாழலாம். பலவிதமான புஷ்பங்கள் கலந்திருந்தால், அவற்றை எடுத்து, புஷ்பாஞ்சலியாக நினைந்து (காம்பு கீழ் மேலாக இருந்தாலும் தோஷமில்லை) அர்சிப்பது கோடி கோடி புண்யத்தினை நல்கக் கூடியது. பழங்களைக் கொண்டு நிவேதனம் செய்யும் போது, பழங்கள் எப்படி மரத்தில் பழுத்திருக்கின்றதோ அதைப் போலவே தாம்பாளத்தில் அமைத்து நிவேதனம் செய்ய வேண்டும். உதாரணம் மாம்பழம் – மாம்பழத்தின் காம்பு மேலிருக்க, பழத்தின் நுனி கீழிருக்க நிவேதனம் செய்வது அனைத்து விதமான பாபங்களையும் நீக்கக் கூடியது. மேலும் பற்பல பலன்களை பலச்ருதி கூறுகின்றது. ஸகல விதமான நோய்கள் நீங்கும், வம்சம் விருத்தியடையும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்த பலன் முதலானவற்றை அடுக்கிக்கொண்டே போகின்றது. மிக விசேஷமாக பௌளர்ணமி அன்று இரவில், பௌர்ணமி நிலவை அம்பிகையாக மனதில் தியானித்து, ஐந்து வகையான உபசாரங்களோடு ஸஹஸ்ர நாமத்தினைக் கொண்டு அர்ச்சிப்பது மிக மேன்மையான பலனைத் தரக்கூடியது. பௌளர்ணமி பூஜையை மந்த்ர மூர்த்தி தீக்ஷிதர் முதலான பெரியோர்களும், தவ ஞானியரும் பௌர்ணமி பூஜையை மிக விசேஷமாகச் செய்திருக்கின்றனர். தவக்கனல், அருட்புனல், கனகாபிஷேகம் கண்ட காஞ்சி அருள்வள்ளல் ஸ்ரீ மஹா பெரியவர் பௌர்ணமி பூஜையை மிகவும் விருப்பமுடன் செய்தவர். இப்படிச் செய்வது பெரும் ஞானம் கிடைக்க வழி செய்யும் என்றவர். லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது, பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ணியம் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று தந்த்ரராஜம் கூறுகின்றது. அனைத்து விதங்களிலும் பூரணமாக அமைந்த, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்வதால் அம்பிகையின் பரிபூரண அருள் கிடைத்திடும்.

5 .லயம் : லலிதா ஸஹஸ்ரநாமத்தினுள் பல்வேறு அம்சங்கள் அமைந்துள்ளன. உடலில் உள்ள ஆறாதாரங்களை உயிர்ப்பித்து, ஆறாதாரங்களுக்கு உரிய தெய்வங்களை பஹிர்நியாஸமாக அமைத்துக்கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்தினை பாராயணம் செய்வது, ஸாரூபம், ஸாமீபம், ஸாயுஜ்யம், ஸாலோக்யம், கைவல்யம் எனும் ஐந்து விதமான முக்தி நிலைகளையும் தருவதோடு, அம்பிகையோடு லயமாகிவிடும் (ஐக்கியமாகிவிடும்) மேலான வழிமுறையை லலிதா ஸஹஸ்ரநாமம் காட்டுகின்றது. இதில் உள்ள அம்சங்கள் எத்தனை எத்தனை ? அம்பிகைக்குரிய புஷ்பங்கள், நிவேதனங்கள், அம்பிகை உறையும் ஸ்ரீ நகரத்தின் விவரணை, தேவர்களைக் காத்திட்ட பாங்கு, தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வ நிலை, சிவ, விஷ்ணு, அம்பிகை – மூவரும் ஒன்று தான் என்னும் விளக்கம், யோக சாஸ்திர நிலைகள், ஞானம் அருளும் ஞானாம்பிகையாக, வேண்டுதல் அனைத்தையும் வரமளிக்கும் காமேஸ்வரியாக, புவனம் காக்கும் புவனேஸ்வரியாக அருள்பாலிக்கும் அம்பிகையைப் போற்றிச் சொல்லுகின்றது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். லலிதா ஸஹஸ்ரநாமம் கொண்டு அம்பிகையை என்றும் போற்றிடுவோம் ! அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவோம். *** லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதியவர்கள் பலர் இருக்கின்றார்கள். ஆனால், பாஸ்கர ராயர் எழுதிய பாஷ்யம் மிகவும் பிரபலமானது. பாஸ்கர ராயர் தனது பெயருக்கு ஏற்ப, முன்னர் கண்டது போல, பாஸ்கர எனும் சூரியனின் 12 பெயர்களைத் தலைப்புகளாகக் கொண்டு, லலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பாஷ்யம் அமைத்துள்ளது பெரும் பாராட்டுதலுக்கு உரியதாகின்றது. பாஸ்கரராயரின் பாஷ்யம், அம்பாளிடம் அவருக்கு இருந்த பக்தி, அந்த பக்தியால் அவர் செய்த சாதனைகள் (மஹா சதுசஷ்டி கோடி யோகினிக்கான விளக்கம் அளித்தது, ஒரு சன்யாசியின் கர்வத்தை அடக்கியது முதலான விபரங்களையும், அவர் வாழ்வில் நடந்த அதிசயங்களையும், அவர் மகள் லீலாவதி (இவர் ஒரு பெரிய கணித இயல் பேரறிஞர், பல கணித சூத்திரங்களை எழுதியவர்) பற்றிய விபரங்கள் போன்றவற்றையும் பிறிதொரு பதிவில் காண்போம். அதுமட்டுமல்லாமல், சிதம்பரம் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலயத்தில் அமைந்திருக்கும் சுகர் ரிஷியால் நிறுவப்பட்டதும், ஆதி சங்கரரால் வழிபாடு செய்யப்பட்டதும், மந்திர மூர்த்தி தீக்ஷிதரால் பூஜிக்கப்பட்டதும் ஆகிய மிகச் சிறப்பு வாய்ந்த ஸ்ரீசக்ரம் பற்றியும், அந்த ஆலயத்தின் விதானத்தில் (மேற்கூரையின் கீழ்பரப்பில்) லலிதா ஸஹஸ்ரநாமத்தின் படி அமைந்த அருமையான வரைபடங்கள் பற்றியும் விபரமாகப் பிறகு காண்போம். அடுத்த பதிவு, ஸஹஸ்ரநாம ஸம்மேளனம். லலிதா ஸஹஸ்ர நாமத்தினையும், ஸ்ரீ நடராஜ ஸஹஸ்ரநாமத்தினையும் ஒருங்கே காண்போம். இரண்டிலும் உள்ள ஒற்றுமைகளையும், சிதம்பர ரஹஸ்ய தந்த்ரத்தின் மேலான பூஜை முறைகளில் ஒன்றான ஸம்மேளன முறையையும் காண்போம்.
(லலிதா ஸஹஸ்ரநாமத்தினைக் கேட்க கடந்த 2010ல் எழுதப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் இங்கே க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். க்ளிக் செய்யுங்கள்)- நி.த. நடராஜ தீக்ஷிதர் - சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை - Mail : yanthralaya@yahoo.co.in, yanthralaya@gmail.com - www.facebook.com/deekshidhar - Cell : 94434 79572 & 93626 09299.