Thursday, April 22, 2010

கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)


கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
இந்தப் பதிவைப் படிக்கும் முன்பு சற்றே ஒரு முறை இதற்கு முந்தைய இரு பதிவுகளையும் படிப்பது உத்தமம்.
கால கணிதம் - 1 (எதிர்காலத்தை எழுதினோம்)
இந்தப் பதிவில் எதிர்வரும் நாட்களை மிகத் துல்லியமாக கணித்திட உதவும் ஒரு சமன்பாட்டினைக் கண்டோம். ("எதிர்காலத்தை எழுதினோம்" - future & past கலந்த கலவையை கவனியுங்கள்)
கடந்த காலத்துக்குச் செல்ல கணித வகையின் கூற்றினைப் பார்த்தோம். தற்போதைக்குச் சாத்தியமில்லை எனினும் கணிதக் கூறு உண்மைதான். ("கடந்த காலத்துக்குப் போவோமா" - past & future tense கொண்ட முரண்பட்ட வாக்கியத்தைக் கவனியுங்கள்)
கால கணிதம் - 3 (நிகழ்காலத்தின் நிலை)
கடந்த காலம் கடந்தே போனது. எதிர்காலம் எப்படியோ? இரண்டும் கடவுள் ஒருவர் மட்டுமே அறிய முடிந்தவை. ஆயினும், மானுட ஜன்மத்தில் நிகழ்காலத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தக் கணத்தை உணர முடிகின்றது. நிகழ்காலமே நிதர்சனம்.
நிகழ்காலத்தில், நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியிலும், நாம் செய்கின்ற அனைத்து செயல்களிலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவே செய்ய உறுதி மேற்கொள்வோம்.
ஆன்மீகம் காட்டும் பாதை அறப்பாதை. அந்த ஆன்மீக வழியில் நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அன்பு செலுத்தி நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.
ஆன்மீக பிரார்த்தனைகள், க்ரியைகள் எனும் செயல்கள், பூஜைகள் மற்றும் பிற காரியங்கள் அனைத்திற்கும் ஸங்கல்பம் எனும் ஸ்லோகம் முதலாவதாகச் சொல்லியே செய்யப்படுகின்றது.
அந்த ஸ்லோகம் நிகழ்கால நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது.
உதாரணமாக, ஒருவர் கணபதி ஹோமம் செய்ய இருக்கின்றார் என்றால், அந்த செயலின் முதல் பூஜையாக ஸங்கல்பம் என்பது அமையும். ஸங்கல்பம் என்பது இறைவனிடம் இந்த கணபதி ஹோமம் வாயிலாக பலனை அடையக் கேட்கப்படும் மந்திரமாக அமைகின்றது.
அந்த மந்திரம், விக்னங்கள் எனும் வினைகளை நீக்கும் விநாயகரை வழிபடும் ஸ்லோகமாகிய "ஓம் சுக்லாம் பரதம் ..... சாந்தயே" என்ற மந்திரத்தோடு ஆரம்பித்து,
"சுபாப்யாம் சுபேசோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண:த்வீதிய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்த்ரே அஷ்டாசாவிகும்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்புத்வீபே பாரத வருஷே பரத கண்டே மேரோ: தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவகாரிகே பிரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ¢ண) அயனே (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ...... மாஸே (சுக்ல/ கிருஷ்ண) ப§க்ஷ ......சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் ....... நக்ஷத்ர ஸம்யுக்தாயாம் சுப நக்ஷத்ர சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"
என்று முடிந்து, யார் இந்த கணபதி ஹோமத்தைச் செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு, அந்த ஹோமத்தினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.

மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.

பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு. பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்.
நாம் வாழும் காலத்தைத் தொடங்கிய பிரம்மாவிற்கு முன் பல பிரம்மாக்கள் தங்கள் படைத்தல் - முடித்தல் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்.
மஹா கல்ப காலத்தில் ஒரு பிரம்ம காலம் என்பது நூறு பிரம்ம வருடங்கள். அதில் பாதி (அர்த்தம்) ஐம்பது பிரம்ம வருடங்கள். (பிரம்ம வருடங்களைக் கணக்கிட முந்தைய பதிவைக் காணவும்.) ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்). இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன. இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.

வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
14 மன்வந்திரங்களாவன : 1.ஸ்வாயம்புவ மன்வந்திரம், 2.ஸ்வரோசிஷ மன்வந்திரம், 3.உத்தம மன்வந்திரம், 4.தாமச மன்வந்திரம், 5.ரைவத மன்வந்திரம், 6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம், 7.வைவஸ்வத மன்வந்திரம், 8.சாவர்ணிக மன்வந்திரம், 9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம், 10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம், 12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம், 13.தேவ சாவர்ணிக மன்வந்திரம், 14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம். வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள். இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான். ஏழு தீவுகள் உள்ளன. (1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது - நீரால் சூழப்பட்டுள்ளது), 2. பிலக்ஷ த்வீபம், 3. சான்மலி த்வீபம், 4. குச த்வீபம், 5. க்ரௌஞ்ச த்வீபம், 6. சாக த்வீபம், 7. புஷ்கர த்வீபம்)

பாரத வர்ஷே - த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம். (1. பாரத வர்ஷம், 2.ஹேமகூட வர்ஷம், 3. நைஷத வர்ஷத்ம், 4.இளாவ்ருத வர்ஷம், 5. ரம்ய வர்ஷம், 6. ச்வேத வர்ஷம், 7. குரு வர்ஷம், 8. பத்ராச்வ வர்ஷம், 9.கந்தமாதன வர்ஷம்)

பரத கண்டே - பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 1.பரதகண்டம், 2. கிம்புருகண்டம், 3. அரிவருடகண்டம், 4. இளாவிரதகண்டம், 5. இரமியகண்டம், 6. இரணியகண்டம், 7. குருகண்டம், 8. கேதுமாலகண்டம், 9.பத்திராசுவகண்டம இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

மேரோர் தக்ஷ¢ணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.

மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி, பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும், ஹோமத்தை செய்யும் கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில், தற்காலம் விக்ருதி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில், உத்தராயணம் அல்லது தக்ஷ¢ணாயனம் எனும் இரு அயன காலத்தில் உத்தராயண காலத்தில், ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாதத்தில், வளர்பிறை சதுர்த்தி தினத்தில், ஞாயிறு கிழமை, ரோகிணி நக்ஷத்ரம் (18.04.2010) இணைந்த சுபமுஹ¥ர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் கணபதி ஹோமம், கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு, அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது.

எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.

அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்!

ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.
இந்த கணித வகையை அறிந்து கொண்டதால் என்ன பலன்? (கலிதோஷம் நீங்கிய நாயகனின் காவியம்)
கால கணித வகைப் படி அமைந்த ஆலயத்தை தரிசனம் செய்வதால் கிடைக்கும் பயன் (மோக்ஷம் தரும் ஆலயம்)
மேற்கண்ட இரண்டையும் அடுத்த பதிவுகளில் காண்போம்.
- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்
94434 79572.
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1, கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

Thursday, April 15, 2010

கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

கால கணிதம் - 2 (கடந்த காலத்துக்குப் போவோமா?)

காலத்தை நமது ஆன்றோர்கள் மிகக் குறைந்த நேரம் முதற்கொண்டு மிகப் பெரும் அளவுள்ள நேரம் வரை பகுத்திருக்கின்றார்கள்.
காலக் கோட்பாட்டினை இரு விதமாக விஞ்ஞானிகள் பகுக்கின்றனர்.
ஒன்று சுழற்சி முறை (WHEEL OF TIME). (சூர்யனை கோள்கள் சுழலும் காலம் கொண்டு கணிப்பது. பூமி 365.25 நாட்களில் ஒரு முறை சூர்யனைச் சுற்றிவருகின்றது. இதே போல் மற்ற கிரஹங்களுக்கும் சூர்யனைச் சுற்றி வரக் கூடிய காலத்தைக் கணித்திருக்கின்றார்கள்.)
மற்றொன்று அம்பு முறை (ARROW OF TIME). அதாவது சூர்யனிடமிருந்து ஒரு அம்பு புறப்பட்டால் எப்படி முடிவின்றி பயணிக்குமோ அதைப் போல ஒரு கணித முறை. ஐன்ஸ்டீனின் E = MC2 ஒத்தது. அதாவது பிரபஞ்சம் நீண்டுகொண்டே இருக்கின்றது.
காலம் என்று சொல்லும் போதே நமக்கு மூன்று காலங்கள் புலப்படுகின்றது. கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.
கடந்த காலத்துக்குப் போவோமா?
எந்த வித மந்திர தந்திரங்களும், தவப் பயனும் இன்றி கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது இயற்பியலாளர்களின் கணிப்பு.
குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க கி.மீ./மணி என்பது நம் வழக்கத்தில் உள்ளது. உதாரணமாக நெய்வேலியிலிருந்து சென்னைக்கு 200 கி.மீ. செல்ல 5 மணி நேரம் ஆகும் என்பது.
மிக நீண்ட பயணத்தை கணக்கிட ஒளி ஆண்டு என்பார்கள். அதாவது ஒளி (LIGHT) ஒரு ஆண்டு பயணித்தால் ஆகும் தூரமே ஒரு ஒளி ஆண்டு.
(ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,000 KILOMETERS)

ஒரு தோராயமான கணக்கு : இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களில் ஒருவர் 30 வயதில் பூமியிலிருந்து குறிப்பிட்ட ஒளி ஆண்டு வேகத்தில் யுரேனசுக்குச் செல்கின்றார் எனில், அவர் 35 வது வயதில் யுரேனசை அடைந்து, திரும்ப அவர் 40 வயதில் பூமியை வந்தடைந்தார் என்றால், அவருடனே பிறந்த சகோதரனுக்கு 45 வயதாகியிருக்கும். (இங்கே குறிப்பிட்ட எண்ணிக்கைகள் அனைத்தும் எடுத்துக்காட்டிற்காக மட்டுமே. மிகத் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனின் பதிவு மேலும் நீளும்.)
இது விஞ்ஞானக் கோட்பாட்டின்படி சரிதான்.
இதையே வேறுவிதமாக உபயோகித்தால் கடந்த காலத்துக்குச் செல்ல முடியும் என்பது விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்ட கோட்பாடு.
பூமியின் காலம் வேறு (சுழற்சி முறை). பூமியிலிருந்து அம்பு போல வேறொரு கிரஹம் செல்லும் காலம் வேறு. ஆனால் பயணிக்கும் காலம் மிக முக்கியம். ஒளி வேகம் அல்லது அதைத் தாண்டிய வேகம் இருப்பின் கடந்த காலம் செல்ல முடியும். (மேலும் விளக்கம் வேண்டுமெனில் ஒரு இயற்பியல் அறிஞரிடம் அறிந்து கொள்ளுங்கள். அல்லது ஃபோட்டான், சிங்குலாரிட்டி தத்துவம், பெருவெடிப்பு (BIG BANG), ஐன்ஸ்டீன் விதி, பிரபஞ்ச ஆரம்ப கணங்கள், 1D, 2D, 3D, 4D பற்றிய விபரங்களை நான் அறிந்த வரையில் அறிவிக்க வேண்டுமெனில் மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தவரை விளக்கம் தருகின்றேன்.)
ஆனால், இன்றைய நடைமுறையில் இது சாத்தியமில்லைதான். ஏனெனில் மனிதன் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் (900 கிமீ/மணி) பயணிக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பம் தற்போது நம்மிடம் இல்லை.
அறிவியல் வழியில் காலத்தைப் பார்த்தோம்.
ஆன்மீக வழியில் பார்ப்போம். ஆன்மீகத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் குறித்து அனேக குறிப்புகள் உள்ளன. எதிர்காலத்தைக் கணக்கிட ஜோதிடவியல் உள்ளது. கடந்த காலத்தைக் கணிக்க ரிஷிகள் எழுதிய ஓலைகள் (நாடி ஜோதிடம்) உள்ளன. நிகழ்காலத்தில் தான் நாம் வாழ்கின்றோம்.
இந்த மூன்றிலும் பயணிப்பவர்கள் மஹரிஷிகள்.
திரிலோக சஞ்சாரி என்றும் திரிகால ஞானி என்றும் நாரதரை அழைப்பார்கள். அவர் முக்காலங்களிலும் பயணிக்க வல்லவர் என்று நாரத புராணம் கூறுகின்றது.
கால சக்ர ப்ரவர்த்திகா, கால நேமி, கால நேதா போன்ற நாமாவளிகள் தெய்வங்கள் காலம் எனும் சக்கரத்தைச் சுழற்றுவதாகக் கூறுகின்றன. அதாவது காலம் இறைவன் கையில் என்கின்றன.
தெய்வத்திற்கு மூன்று கண்கள் உண்டு என்கின்றன ஆன்மீகம்.
மூன்றாவது கண் தான் நான்காவது பரிமாணமாகிய காலத்தின் ஊடே பயணத்தைக் காண வல்லது.
ஒரு கண் இருந்தால் இரு பரிமாணங்களைப் பார்க்க இயலும். இரு கண்கள் இருந்தால் மூன்றாவது பரிமாணத்தைப் பார்க்க முடியும். மூன்றாவது கண் இருந்தால் நான்காவது பரிமாணமாகிய காலத்தைப் பார்க்க முடியும்.
ஒரு பரிமாணம் என்பது ஒரு பொருளின் நீளம். இரு பரிமாணம் என்பது அந்தப் பொருளில் அகலம்.
ஒரு காலண்டரை நாம் பார்க்கின்றபோது அதன் நீளம் மற்றும் அகலம் புலனாகின்றது.
உதாரணமாக, தொலைக் காட்சியிலோ அல்லது சினிமாவிலோ நாம் காணும் காட்சிகள் இரு பரிமாணம் கொண்டவை. அக்காட்சியின் நீளம் மற்றும் அகலம் மட்டுமே காணமுடியும்.
நம் எதிரில் ஒரு கார் நிற்கின்றது. அதன் நீளம் & அகலம் தெரிகின்றது. கூடுதலாக மூன்றாவது பரிமாணமாகிய கனபரிமாணம் அதாவது அதன் உயரம், கொள்ளளவு என்பது நமக்குத் தெரிகின்றது.
ஆக, இரு கண்கள் உள்ள நாம் மூன்று பரிமாணங்களைப் பார்க்க முடிகின்றது. அதைக் கையாள முடிகின்றது. நீள அகல உயரங்களிடையே நாம் செல்ல முடிகின்றது.
ரயிலில் பயணிக்கின்றோம். காலை 6 மணிக்குக் கிளம்புகின்றோம். 9 மணிக்கு பயணத்தை முடிக்கின்றோம். அந்த ரயில் 6, 7, 8, 9வது மணியில் எங்கெல்லாம் இருந்தது என்று சொல்ல முடிகின்றது.
அந்த பயண காலத்தை நம்மால் உபயோகப் படுத்த முடிவதில்லை. அதாவது, நாம் கிளம்பிய பிறகு ஒரு மணி நேரம் சென்று, திரும்பவும் கிளம்பிய நேரத்திற்குச் செல்ல முடிவதில்லை. அதாவது காலத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை.மூன்றாவது கண் இருந்தால் மட்டுமே நான்காவது பரிமாணத்தின் ஊடே பயணிக்க முடியும்.
ஆகையால் தான் ஆன்மீகம், தெய்வங்கள் மனிதர்களை விட மேம்பட்ட குணத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.
காலக் கணிதத்தினை எப்படியெல்லாம் நம் ஆன்றோர்கள் பகுத்திருக்கின்றார்கள் என்று பார்ப்போம்.

புராணங்களின் கூற்றுப்படி கீழ்க்கண்ட கணக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
தமிழின் தொல்லிய நூலாகிய கணக்கதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரம்:
கண்ணிமை 2 = 1 கைந் நொடி
கைந் நொடி 2 = 1 மாத்திரை
மாத்திரை 2 = 1 குரு
குரு 2 = 1 உயிர்
உயிர் 9 = 1 க்ஷணிகம்
க்ஷணிகம் 12 = 1 விநாடி
விநாடி 60 = 1 நாழிகை
நாழிகை 7.5 = 1 சாமம்
சாமம் 4 = 1 பொழுது
பொழுது 2 = 1 நாள்
நாள் 30 = 1 மாதம்
மாதம் 12 = 1 வருடம் (1728000 வருடம் = கிருத யுகம், 129600 வருடம் = திரேதா யுகம், 8,64,00 வருடம் = துவாபரம் யுகம், 4,32,000 வருடம் = கலியுகம், இந்த நான்கும் சேர்த்து 43,20,000 வருடங்கள்)
43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
74 மனு = 1 இந்திர ராஜ்ய காலம்
270 இந்திர ராஜ்ய காலம் = 1 பிரம்ம நாள் (பிரம்மாவுக்கு ஒரு நாள்)
365X100 பிரம்ம நாள் = 1 பிரம்ம காலம் பூர்த்தி
360 பிரம்ம கால பூர்த்தி = 1 ஆதி பிரம்ம பிரளயம்
100 ஆதி பிரம்ம பிரளயம் = 1 விஷ்ணு கற்பம்
100 விஷ்ணு கற்பம் = ரோம ரிஷியின் 1 ரோம காலம் (உடலெல்லாம் ரோமங்கள் கொண்ட ஒரு மஹரிஷி. அவரின் உடலில் ஒரு ரோமம் உதிரும் காலமே 1 ரோம காலம்)
10 கோடி ரோம காலம் = மீனசமக ருஷியின் 1 செதில் காலம் (மீனைப் போன்ற செதில்களைக் கொண்டவர் மீனசமக ருஷி. அவரின் உடலில் ஒரு செதில் உதிரும் காலமே 1 செதில் காலம்)
1 கோடி செதில் காலம் = பரத்வாஜருக்கு 1 நிமிடம்
30 கோடி பரத்வாஜ நிமிடம் = 1 சக்தி காலம்
780 கோடி சக்தி காலம் = மகாசக்திக்கு 1 நிமிஷம்
மேற்கண்ட இரு கால அளவுகள் பற்றியும், ஸங்கல்பம் எனும் வேண்டுதல் நிகழ்ச்சியில் சொல்லக்கூடிய ஸ்லோகத்தின் அமையும் கால அளவைகள் பற்றியும் அடுத்த பதிவில் (கால கணிதம் - 3 ) காணவிருக்கின்றோம்.
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
- 94434 79572-

ி.கு. : இந்தப் பதிவு மிக விரிவாக எழுத நினைத்து, ஆன்றோர்கள் கூறுவது போல 'விரிவஞ்சி விடுத்தனம்'. என்றாலும் காலத்தின் கோலத்தை மிக விரிவாக பிறிதொரு காலத்தில் கணக்கிடுவோம்.
எனது முந்தைய பதிவுகள் : தலைப்பின் மீது க்ளிக் செய்தால் விபரம் விரியும்.
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை, கதம்பம், கால கணிதம் - 1

Saturday, April 3, 2010

கதம்பம்

கதம்பம்
ஆன்மீகம். ஆன்மாவை ஏகப்படுத்துவது. ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் ஒரு அற்புதமான முறை. ஆன்மீகத்திற்கான பாதை எல்லாம் வல்ல இறைவனை அடைவது தான். இறைவனை அடைய பல வழிகள் இந்து மதத்தில் உள்ளது. ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது.
நதிகள் எப்படி பல்வேறு இடங்களில் தோன்றி, பல்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் கடலைச் சென்றடைகிறதோ அது போல, ஒவ்வொரு ஆன்மீகப் பாதையும் இறுதியில் இறைவனைச் சென்றடைவதாகவே இருக்கின்றது.
இந்த ப்ளாக் ஆன்மீகத்தின் பல பாதைகளிலும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே எழுதப்படுகின்றது. அரும்புகள் ஒன்று சேர்ந்து மாலையாவது போல இந்த ப்ளாக் பதிவுகள் அரும்புகளாக அமைந்து ஆரமாக (மாலையாக) இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வுடன் எழுதப்படுகின்றது.
இந்த பதிவு மணக்க பலரும் துணை நின்றுள்ளார்கள். முதற்கண் ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவரின் தக்க வழிகாட்டுதலில் இந்த ப்ளாக் மேலும் மணம் வீசுகின்றது.
பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் பலரும் தொடர்புகொண்டு அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களின் கேள்விகள் பல புதிய பரிமாணங்களைத் தேடச் செய்தது. பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இதுவரை வெளிவந்த பதிவுகளின் தலைப்புகள் (hyperlink) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளின் தலைப்புகளை க்ளிக் செய்தால் விபரம் அறிய முடியும். அந்தப் பதிவுகளின் மேலதிகத் தகவல்கள் சில கொடுக்கப்பட்டுள்ளன.
இனி வாரம் ஒரு முறை (இயன்றவரை) ஒரு பதிவு என வெளிவர உள்ளது. ஆதரித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தொடர்பு கொண்டு பதிவுகள் சிறக்கக் கோருகின்றேன்.

எனது முந்தைய பதிவுகள் :
தைப் பூச நடனம்,
தைப் பூசம் - வடலூரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. வாடிய பயரைக் கண்டபோதெல்லாம் வாடிய சிதம்பரம் ராமலிங்கம் எனும் வள்ளலார் இறையொளியில் கலந்த நாள். தான் கையொப்பம் இடும்போதெல்லாம் சிதம்பரம் ராமலிங்கம் என்றே எழுதியிருக்கின்றார். வருவான் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே என்று பாடியவர், இறை வழிபாட்டை நெறிப்படுத்தியவர் வள்ளலார். தீராப் பிணியாகிய பசி போக்க அரும்பாடு பட்டவர். தைப்பூசத்தன்று வடலூரில் மிகப் பெரிய அளவில் அன்னதானம் நடைபெறுகின்றது. தைப் பூசம் முருகப் பெருமானுக்கும் உகந்த நன்னாள். தைப் பூச அன்னதானத்தில் பங்கு பெறுவது தீரா துன்பத்தை நீக்கவல்லது.
வியதீபாத தரிசனம்,
வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இறைவனும் இறைவியும் இரண்டறக் கலந்த நன்னாளில் மனம் ஒன்றுபட்டு சிவபெருமானை வழிபடுவது நல் இல்லற வாழ்வை நல்கும்.
மார்கழி மஹோத்ஸவம்,
மார்கழி உத்ஸவத்தின் ஒவ்வொரு நாளிலும் தெய்வங்கள் வீதியுலா வருவது குறித்து ஒரு தனித்த தாத்பர்யமே உள்ளது. அது உலக பரிமாண வளர்ச்சியைக் குறிக்கக் கூடியது. மார்கழி ஆருத்ரா தரிசனம் மாபெரும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனந்த நடனப் பெருமானின் ஆனந்த நடனக் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் இருந்தால் கூட போதாது.
காசி யாத்திரை,
காசி க்ஷேத்திரம் - மிக புனிதமான க்ஷேத்ரம். தன்னுள் பல அமானுஷ்யங்களைக் கொண்டது. பிறப்பறுக்கும் பெம்மானை காசியில் தரிசித்தால் பிறவிப் பயன் பெறுவதோடு, மறுபிறவி இல்லா மோக்ஷம் அளிக்க வல்லது. இந்தப் பதிவின் பின்னூட்டங்களை (comments) கள்ளபிரான் எழுதியவற்றையே ஒரு தனிப் பதிவாகவே எழுதலாம். அவ்வளவு விஷயங்களை எழுதியிருக்கின்றார்.
ஆழ்வார்கள் அருளிய அமுதம்,
ஸ்ரீ வைஷ்ணவம் எனப் போற்றப்படும் விஷ்ணுவை பெரும் தெய்வமாகக் கொண்டாடும் வழிபாட்டு முறையில் எண்ணற்றப் பெரியோர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் எழுதிய தமிழ், இடைக்காலத்தில் சற்றே தாழ்ந்திருந்த தமிழின் நிலையை மென்மேலும் தூக்கி நிறுத்தியது.
தியாகராஜர் ஆராதனை,
தியாகராஜர் தமிழ் நாட்டில்தான் வாழ்ந்தார் என்றாலும் தெலுங்கில் தான் பாடல்கள் இயற்றினார். பலரின் கேள்வி தமிழ்நாட்டில் வாழ்ந்து ஏன் அவர் தமிழில் பாடவில்லை என்பது. இது பற்றி பல தமிழ்ப் பெரியோர்களே (ராஜாஜி முதற்கொண்டு) பதிலிறுத்துள்ளார்கள். தியாகராஜர் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் அவரின் தாய் மொழி தெலுங்குதான். அவருணர்ந்த தாய் மொழியில் பாடியது தான் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். இந்திய தேசிய கீதத்தை ரபீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் தான் எழுதினார். ஏன் அவர் புலமை பெற்ற ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ எழுதவில்லை? தேசிய கீதம் கீதாஞ்சலி எனும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. (தாகூர் தேசிய கீதத்தை 1919ல் morning song of india என்று மொழிபெயர்த்திருக்கின்றார். இருப்பினும் எங்கும் பாடப்படுவது ஜனகனமண தான்.) இங்கு தேசிய ஒற்றுமைதான் முன்னிற்கிறதே தவிர மொழி அல்ல. அதுபோல தியாகராஜரின் பாடல்கள் பக்திபா(ba)வம் தான் வெளிப்படுகிறது.
சாளக்ராம வழிபாடு,
சாளக்ராமங்கள் சாபங்களைப் போக்கக் கூடியவை. நல்ல நிபுணர் துணைகொண்டு பெற்று பூஜிப்பது நல்லது. சாளக்ராமத்திற்கு பால் அபிஷேகம் செய்து அதை பிரஸாதமாக உட்கொள்வது பல்வேறு உடல் உபாதைகளை நீக்கக் கூடியது.
கூடாரைவல்லி,
ஆண்டாள் இயற்றிய பாடல்களைப் பற்றி பலரும் அலசியிருக்கிறார்கள். அவளின் பெண்மை சார்ந்த பாடல்கள் அனைவரையும் மயக்கக் கூடியவை. lateral thinking வகையைச் சேர்ந்தவை ஆண்டாளின் பாடல்கள்.
திருப்பாவையின் முதல் பாடல் "மார்கழித் திங்கள்... கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ... பாரோர் புகழ படிந்தேலோ ரெம்பாவாய்".
ஒவ்வொரு வார்த்தைக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளன.
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்" - ஆயர்குலத் தலைவராகிய நந்தகோபர் மிகவும் சாதுவாக விளங்கியவர். அவரை ஏன் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று ஆண்டாள் சொல்லவேண்டும்?
நந்தகோபர் ஒரு எறும்பைக் கண்டால் கூட அதற்கு இம்சை தராமல் இருக்க விருப்பப்படுவாராம். அந்த பரமசாதுவான நந்தகோபர் கண்ணனைத் தூளியில் வைத்து ஆட்டும்போது, தந்தைப் பாசம் மிக்கவராய், ஒரு எறும்பு கூட கண்ணனைத் துன்புறுத்தக் கூடாது என நினைப்பாராம்.
அதுவும் எப்படி, தூளியின் கீழே ஒரு எறும்பைக் கண்டால் கூட, அதை, சிங்கத்தை எதிர்க்கவல்ல கொடும் நுனியுள்ள கூரான வேல் கொண்டு, அந்த எறும்பை, தன்னை எதிர்க்க வரும் சிங்கத்துடன் எப்படிப் போராட முனைவாரோ அது போல எறும்பினை தாக்க விழைவாராம். எப்படிப்பட்ட கற்பனை?
நால்வர் காட்டிய நல்வழி,
நால்வர் பாடிய பாடல்கள் தமிழகத்தைச் செம்மைப்படுத்தின. பல அற்புதங்களை நிகழ்த்தின. தேவாரம், திருவாசகம் பாடல்பெற்ற தலங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நால்வரின் பாடல்கள் நன்கு பயன்பட்டது.
சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர்,
சைவ வைணவ ஒற்றுமையை உணர்த்துவது சங்கர நாராயணர் வடிவம். இடைக்காலத்தில் ஏற்பட்டிருந்த சைவ வைணவப் போரை மட்டுப்படுத்தியது இந்த தெய்வீக வடிவங்கள். இதன் ஒரு அடையாளச் சின்னம் தான் சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர் அதிசய அரிய சிற்பம்.
கவிக்கோ(ர்) காளமேகம்,
காளமேகமும் இரட்டைப் புலவர்களும் சமகாலத்தவர்கள். இரட்டைப் புலவர்கள் காளமேகத்தைக் காண ஆவலாயிருந்தனர். ஒரு சமயம் திருவாரூரில் இருக்கும்போது "நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்" என்பதோடு நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேலே அவர்களால் எழுத இயலவில்லை. அதை அப்படியே கோயில் சுவரில் எழுதிச் சென்றார்கள்.
பிறகு பல ஊர்களுக்குச் சென்று திரும்பியபோது பாடல் "மண்தின்ற பாணமே - தாணுவே சீரார் மேவும் சிவனே நீர் எப்படியோ நேரார் புரம் எரித்த தேர்" என்று சந்தம் மாறாமல் முடிக்கப்பட்டிருந்தது. அதை எழுதியது காளமேகம் தான் என்று அறிந்து, அவரைக் காண விரைகிறார்கள்.
பாடலின் அர்த்தம் : சிவபெருமான் முப்புரம் எரிக்க பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களை சக்கரமாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி எனும் பாம்பை வில்லின் நாண் ஆகவும், விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு சென்றார் என்று சிவபுராணங்கள் பகரும்.
இதை எப்படி சிலேடையாக அமைக்கின்றார்.
நாண் - முப்புரம் எரிக்க எடுத்துச் சென்ற நாண் நஞ்சிருக்கின்றது. நைந்து இருக்கின்றது. மக்கியிருக்கின்றது. வில்லோ கல் போல (கற்சாபம்) கனமாக இருக்கின்றது. கல் வில்லை எப்படி வளைத்து அம்பெய்ய முடியும்? அம்போ மண் தின்ற பாணம். மண்ணால் அரிக்கப்பட்ட அம்பு. சிவபெருமானே, இவையெல்லாம் கொண்டு எப்படித்தான் முப்புரம் எரித்தீர்களோ என்று கேட்பது போல மேலோட்டமான அர்த்தம்.
உள்ளார்ந்து பார்த்தால், நஞ்சு எனும் விஷம் இருக்கும் வாசுகி எனும் பாம்பை நாணாகக் கொண்டும், நற்சாபம் கற்சாபம் - மேரு மலையே வில்லாகவும், மண் தின்ற பாணம் - கண்ணன் சிறு வயதில் மண் தின்றார். அந்த கண்ணணாகிய விஷ்ணுவை அம்பாகவும் கொண்டு முப்புரம் எரித்தார் என்று அர்த்தம் கிடைக்கின்றது. எப்படி அற்புதமாக எழுதியிருக்கின்றார்கள்.
அதிசய அற்புத பாடல்கள்,
பல்வேறு அதிசயப் பாடல்கள் கண்டோம். ஸ்ரீ ரமேஷ் என்பவர் அதிசயமான அற்புதப் பாடல் ஒன்றை மாணிக்க பந்தம் எனும் பாடலை அனுப்பியுள்ளார். மிக அழகாக அமைந்த பாடல். இதை இயற்றியவர் ஒரு முஸ்லிம் பெரியவர்.





பாம்பு இயற்றிய பாடல்,
ஆதிசேஷனின் வடிவாகிய பதஞ்சலி தன் சொந்த வழிபாட்டிற்காக உருவாக்கிய லிங்கம் சிதம்பரத்தின் மேற்கு திசையில் அமைந்த நாகசேரியில் (அனந்தீஸ்வரன் கோயில்) அமைந்துள்ளது. அது அனந்தேசுரம் என்றும் அழைக்கப்படுகிறது. (அனந்தன் - ஆதிசேஷனுக்கு மற்றும் ஒரு பெயர்)
நடராஜ பத்து,
பிற்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய நடராஜர் பத்து பாடல்கள் மனதைக் கொள்ளைக் கொள்ளக் கூடியவை.
திருப்பல்லாண்டு,
திருவிசைப்பா எழுதியது ஜெயந்தன் என்ற பெயர் கொண்ட சேந்தன் என்பது சில தமிழறிஞர்களின் கூற்று. திருப்பல்லாண்டு பாடியவர் களி படைத்த சேந்தனார். பல மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் பக்தி சுவை மிகுந்த பாடல்களாக அமைந்தவை.
மஹா சிவராத்திரி,
இந்த வருடம் மட்டும் மிக அதிகமாக பேசப்பட்டது சிவராத்திரி நன்னாள். எந்த மாதத்தில் கொண்டாடவேண்டும் என்பது சிவத் தொண்டர்களுக்கு ஒரு பெரும் சந்தேகமே இருந்தது. இது பற்றி தனியே நீண்டதொரு விளக்கம் எழுத வேண்டியிருக்கின்றது. அதைப் பிறகு சமயம் கிடைக்கும்போது எழுதுகின்றேன். சிவனை இரவில் சிந்தையில் நிறுத்தும் எந்த நாளும் சிவராத்திரிதான்.
வசந்த நவராத்திரி,
வசந்த காலம் என்பது மகிழ்வைத் தருவது. உலகம் தன்னத் தானே புதுப்பித்துக் கொள்ளும் காலம். விவசாயம் செழித்து, அதன் வாயிலாக செல்வம் நிறைந்த காலம். அம்பிகைக்கு உரிய பூக்கள் பூத்துக் குலுங்கும் காலம். குதூகலம் பொங்கும் இந்த வசந்த காலத்தில் வரும் வசந்த நவராத்திரியில் அம்பிகையை வழிபடுவது வாழ்வில் வசந்தத்தை வீசச்செய்யக்கூடியது.
நவாவரண பூஜை,
நவாவரண பூஜை - பல்வேறு உள்ளர்த்தங்களைக் கொண்டது. உடலை மந்திரவயப்படுத்தி, உடலின் உள்ள ஆறு சக்கரங்களையும் உயிர்ப்பித்து, தூண்டி செய்யப்படக்கூடிய அற்புதமான பூஜை. மேலும் இதற்கான விளக்கங்கள் ஒரு தனி பதிவில் காண்போம்.
- நி.த. நடராஜ் தீக்ஷிதர்
- 94434 79572
- yanthralaya@yahoo.co.in
2010ம் வருடத் தொகுப்பு இங்கே க்ளிக் செய்யுங்கள்.