Thursday, July 22, 2010

அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ! ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி !!

அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி !
ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி !!


நெய்வேலி, ஸத்சங்கம் - மணித்வீபம், ஸ்ரீ மாதா புவனேஸ்வரி அம்பிகை ஆலயத்தில் - உலக நன்மை கருதியும், அனைவருடைய வாழ்விலும் வளங்கள் யாவும் பெருகவும், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து விவசாயம் மேன்மை அடையவும் , ஆஷாட நவராத்திரி (24.06.17 - 02.07.17) வைபவம், மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

சாக்த வழிபாட்டில் கூறப்பட்டிருக்கும் நான்கு நவராத்திரி வகைகள் :
1. சாரதா நவராத்திரி (புரட்டாசி மாதம்)
2. வசந்த நவராத்திரி (பங்குனி மாதம்)
3. ஆஷாட நவராத்திரி (ஆனி மாதம்)
4. சியாமளா நவராத்திரி (தை மாதம்)
மேற்கண்ட நான்கு நவராத்திரிகளும் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ ராஜசியாமளா தேவி ஆகிய தெய்வங்களுக்கு முறையே கொண்டாடப்படுவது.
ஆஷாட நவராத்திரி உலக வளமைக்காகவும், தானியங்கள் செழிக்கவும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகையை பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது.
ஆஷாட நவராத்திரியின் பிரதான தெய்வம் ஸ்ரீ வாராஹி தேவி.
ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள். தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள்.
கால கணிதப்படி - வெள்ளைப் பன்றி உருக்கொண்டு இந்த பூவுலகை அரக்கர்களிடமிருந்து மீட்ட - ஸ்வேத வராஹ கல்பத்தில், வராஹி தேவி வழிபாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
சாந்திரமான கால கணித முறைப்படி ஆஷாட மாதத்தில் வரும் பஞ்சமி திதி ஸ்ரீ வாராஹி தேவியை வழிபட உகந்தது. ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களின் மத்தியில் அமையும் ஒரு நாள் - நடு நாள் - ஐந்தாம் நாள் - பஞ்சமி திதி - ஸ்ரீ வாராஹி தேவியை வழிபாடு செய்வது வளங்கள் அனைத்தையும் தந்திடும். (ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாய நம:)
நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி.
























ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள்.
1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும்.

பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது.
சாரதா (புரட்டாசி) நவராத்திரி என்றால் கொலு எனும் சிறப்பு அமைப்பு கொண்டு அம்பிகையை வழிபடுவது போல, ஆஷாட நவராத்திரியில் தானியங்கள் கொண்டு பூமியில் கோலங்கள் (ரங்கோலி) இட்டு வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

கோலம் போடுவது என்பது அம்பிகையை (லக்ஷ்மியை) மனமார வரவேற்கும் வடிவம். லக்ஷ்மியின் வருகை தினமும் நம் நிகழ வேண்டும், நித்யம் வீட்டில் வாசம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது மரபாக இருந்து வருகின்றது. கோலமிட்ட வீட்டில் அம்பிகை கொலுவிருப்பாள் என்பது ஆன்றோர் வாக்கு.
ஸத்சங்கம் மணித்வீபத்தில், ஸ்ரீ மாதா புவனேஸ்வரிக்கு ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும், ஒன்பது விதமான அலங்காரங்கள் (ஐந்த்ரீ, ப்ராஹ்மி, வைஷ்ணவி, சாமுண்டா, கௌமாரி, மாஹேஸ்வரி, சாகம்பரி, வாராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி) கொண்டு கண்கொள்ளாக் காட்சி நல்கினாள்.
ஆஷாட நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் தானியங்கள் (நெல், அரிசி, கோதுமை, துவரை, பயறு, கொண்டைக் கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு, கம்பு, கேழ்வரகு, தினை ஆகியன) கொண்டு தானிய வண்ணக் கோலங்கள் போடப்பட்டன. ஒன்பதாம் நாளாகிய பூர்த்தி தினத்தில் அம்பிகை உறையும் ஸ்ரீ சக்ரமே தானிய கோலமாக இடப்பட்டது.
ஒவ்வொரு நாளும் அம்பிகையின் அலங்காரத்திற்கு ஏற்ப ஆலய வாசல் நுழைவாயிலில் அந்தந்த அம்பிகைக்குரிய அம்சங்களையும் (வாகனம்) தானிய வண்ணக் கோலங்கள் அலங்கரித்தன.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. கட்கமாலா ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டன.
மாலையில் தேவிக்குரிய ஸ்ரீ நவாவரண பூஜையும், ஆஷாட நவராத்திரி நாயகியான ஸ்ரீ வாராஹி தேவிக்குரிய சக்தி வாய்ந்த, பலன்களை உடனடியாக அளிக்கக் கூடிய வகையில் அமைந்த ஸ்ரீ வாராஹி ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், வேதார்ப்பணமும், கானார்பணமும் இனிதே நடந்தேறியது.
பூஜையின் ஸங்கல்பத்தில் சொல்லப்பட்டது போல (ஆஷாட நவராத்ரி ... கர்த்ரூணாம், காரயித்ரூணாம்..... அனுமோதகானாம்........) பூஜைகளைக் கண்ணுறுபவர்கள், பங்கேற்பவர்கள், பூஜைகளைப் பற்றி கேள்விப்படுபவர்கள், இந்த பூஜையை மனதாலேயே நினைத்தவர்கள், உலக மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று, வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான தானியங்கள் நிறைவாகக் கிடைக்கப்பெற்று, வாழ்வாங்கு வாழ பிரார்த்தனை செய்துகொண்டு ஆஷாட நவராத்திரி வைபவம் நிகழ்த்தப்பட்டது.
ஆஷாட நவராத்திரி அனைவருக்கும் என்றும் நெஞ்சை விட்டு நீங்காத, உள்ளம் கனிந்த உவகையை நிலைநிறுத்தியது.
அனைவருக்கும் அம்பிகை ஆனந்தத்தை நல்கினாள்.

- "ஸ்ரீவித்யா உபாஸக"- நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
cell : 94434 79572.
Pl. visit to : www.facebook.com/deekshidhar


Saturday, July 10, 2010

ஆஷாட நவராத்திரி

ஆஷாட நவராத்திரி 
(20.06.2020 - 29.06.2020)

அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறை சாக்த வழிபாடு. சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான்.

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமி வரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியனதான்.
12 மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள்.
அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு நவராத்திரிகள்.

நான்கு விதமான நவராத்திரிகள் :
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி .(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
வசந்த நவராத்திரி யை கடந்த பதிவுகளில் கண்டோம்.
இங்கு ஆஷாட நவராத்திரி பற்றிக் காண்போம்.

வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.

ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம்.
பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.
விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம்.
இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது.
வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது.
தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

வராஹி தேவி, தேவீ புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம்.

வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.




























ஆஷாட நவராத்திரியில் அம்பிகையை வழிபாடு செய்து, ஆனந்தமான நல்வாழ்வு வாழ பிரார்த்திப்போம்.



- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி &; பூஜை
செல் : 94434 79572, 93626 09299
www.facebook.com/deekshidhar
http://natarajadeekshidhar.blogspot.com

Thursday, July 1, 2010

காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2)

காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2)
கோவிந்தன் கேட்ட கீதம்
(கீத கோவிந்தம் (அ) ஜெயதேவரின் அஷ்டபதி)

காளிதாசன், காளியின் கருணையினால் அளவற்ற அறிவாற்றல் பெற்று, மொழியின் மீது தம் ஆளுமையைச் செலுத்தி, பல அற்புதமான காவியங்களை இயற்றினார்.அவை ஒவ்வொன்றும் தன்னிகரில்லாதவை. வடமொழி அன்னைக்கு கவிரத்ன காளிதாசன் இயற்றியவை விலைமதிப்பில்லாத ரத்தின ஆபரணங்களாக அமைந்தன.
குமாரசம்பவம், மாளவிகாக்னிமித்ரம், மேக தூதம் போன்ற காவியங்கள் காளிதாசனால் இயற்றப்பட்டன.
ஒரு சமயம், போஜராஜன் 'அறிவிற்சிறந்த புலவர் யாவர், விரல் மடக்குங்கள் பார்க்கலாம்' எனக் கேட்டார். அப்பொழுது அனைவரும் கையின் சுண்டுவிரலை மடக்கி, காளிதாசன் என்றனர். அடுத்த விரலை மடக்கி மற்றொருவரின் பெயர் சொல்ல எவருக்கும் தெரியவில்லை. எல்லோரும் காளிதாசன்...... என்று இழுத்து, அடுத்த பெயர் தெரிவிக்க முடியவில்லையே என்றனர்.
அதனால் தான், மோதிர விரலுக்கு "அநாமிகா" என்ற பெயர் வந்தது. (கட்டை விரல் - அங்குஷ்டம், ஆட்காட்டி விரல் - தர்ஜனீ, நடுவிரல் - மத்யமம், மோதிர விரல் - அநாமிகம், சுண்டுவிரல் - கனிஷ்டிகம்) அந்த அளவிற்கு காளிதாசன் அறிவிற்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
காளிதாசன், சாகுந்தலம் என்னும் அற்புத காவியத்தை அமைத்தார். அக்காவியம் துஷ்யந்தன் - சகுந்தலை - பரதன் - விஸ்வாமித்திரர் என்ற பாத்திரங்களோடு அமையும்.
இக்காவியம் பற்பல சிறப்பம்சங்களைக் கொண்டது. உபமா காளிதாஸஸ்ய என்றபடி, உவமைகளின் மேன்மைகளால் சாகுந்தலத்தை உருவாக்கியிருக்கின்றார்.
தனது மேதமைத் தன்மை அனைத்தையும் சாகுந்தலத்தில் வார்த்திருப்பார். அக்காவியத்தில் ஒரு வார்த்தையை எடுத்து மறு வார்த்தையை செருக முடியாதபடி அமைத்திருப்பார்.
(ஒரு சிறு அருமையான உதாரணம் : சகுந்தலையைப் பார்த்த கணத்தில், துஷ்யந்தன் சொல்கிறான், 'மான் வேட்டையாட வந்தேன், மான் (சகுந்தலை) கண்ணில் பட்டது, அந்த மான் விரித்த கண்ணியில் (வலை) சிக்கிக்கொண்டு, மீள முடியாமல் இருக்கின்றேன்.')
சாகுந்தலம் எனும் அற்புதக் காவியத்தை போஜ ராஜன் அரசவையில் காளிதாசன் அரங்கேற்றினார். அவையிலிருந்த ஒவ்வொருவரும் அற்புத காவியமான சாகுந்தலத்தைப் போற்றினர். காளிதாசனின் மேதமைத் தன்மையை வியந்தனர்.
களைப்புடனும், அனைவரும் வாழ்த்தியதால் ஏற்பட்ட சற்றே கர்வத்துடனும் இரவு இல்லம் வந்து சேர்ந்தார். ஓய்வு எடுக்கும் நேரத்தில் இளம் வயதை ஒத்த ஒருவன் காளிதாசன் இல்லம் வந்தான். வந்தவன், காளிதாசனையும், சாகுந்தலத்தையும் போற்றிப் புகழ்ந்தான். 'அவையில் தான் அனைவரும் புகழ்ந்தனரே, ஏன் அப்பொழுதே இப்புகழ்ச்சியை சொல்லவில்லை' எனக் கேட்டார் காளிதாசன். 'வயதில் சிறியவனான என்னை உங்களை வாழ்த்த அனுமதிப்பார்களா என்பதால் அரசவையில் சொல்ல இயலவில்லை. ஆகையாலே இங்கு வந்தேன்'.
சரி, மேலே என்ன சொல்லப் போகிறான் என்ற எண்ணத்தில் காளிதாசன் வந்தவனை நோக்க, அவன் 'சாகுந்தலம் அற்புத காவியம் தான். ஆனால், தாங்கள் இயற்றிய குமாரசம்பவம் போன்றெல்லாம் சாகுந்தலம் அமையவில்லை, அதிலே குறை இருக்கின்றது' என்று சொல்ல காளிதாசன் பெரும் அதிர்ச்சியும் கோபமும் கொண்டார்.
அறிவிற்சிறந்த நவரத்தினங்கள் அடங்கிய புலவர் குழுவே எந்தக் குறையும் சொல்லவில்லை. இந்தச் சிறியவன் குறை சொல்கிறானே என்று கோபம் கொண்டார்.
அவனை நோக்கி காளிதாசன் எந்த விதத்தில் குற்றம் கண்டுபிடித்தாய் எனக் கேட்க, இளைஞன் 'சாகுந்தலம் அற்புதமான காதல் காவியம் தான். ஆனால், தங்கள் குமாரசம்பவம் காவியத்தில், இந்த ஸ்லோகம் சொன்னால் இந்த பலன் உண்டு என்பது போன்று பலஸ்துதிகள் அமைந்திருந்தன. ஆனால் சாகுந்தலத்தில் அப்படியொரு அருமையான பகுதி இல்லாமல் போய்விட்டது. சாகுந்தலத்தைப் படித்ததால் கிடைக்கக் கூடிய தெய்வ பலன் என்ன' என்று கேட்க, மேலும் அதிர்ந்து அமைதியானார்.
வந்தவன் சொன்னதில் உண்மை இருக்கின்றது என்று அறிந்து அவன் அறிவிற்சிறந்தவன் என்று தெரிந்துகொண்டு, காளிதாசன் 'இதற்கு மேல் நான் என்ன செய்யவேண்டும்' என்று கேட்டார்.
அதற்கு வந்தவனோ, மயக்கும் சிரிப்புடன் 'இதுவரை பல தெய்வங்களைப் போற்றி காவியங்கள் எழுதிவிட்டீர்கள். ஆனால், கிருஷ்ணரைப் போற்றி எதுவும் தாங்கள் இயற்றவில்லை. ஆகையால், சாகுந்தலத்திற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணரைப் பற்றி ஏதேனும் எழுதுங்கள்' என்றான்.
அதற்கு காளிதாசன், 'சாகுந்தலத்திற்காக என் அனைத்து திறமைகளையும் கொட்டிவிட்டேன். என்னால் இப்பொழுது எதையும் சிந்திக்க இயலவில்லை. கிருஷ்ணரைப் பற்றி நீ சொல்லிய காரணத்தினால், கிருஷ்ணரைப் பற்றி எழுத நீயே ஒரு அடியெடுத்துக் கொடு, அதற்கு மேல் நான் எழுதுகின்றேன்' என்று கேட்டார்.
அதன்படியே, வந்தவன் ஒரு அடியெடுத்துக் கொடுத்தான். காளிதாசனை மறுபடியும் போற்றிவிட்டு கிளம்பிவிட்டான்.
காளிதாசன், இரவு முழுதும், அந்த வரியைத் தவிர மேற்கொண்டு எதுவும் எழுத முடியாமல், அதிகாலைப் பொழுதில் வந்தவனைத் தேட, அவன் தண்டி எனும் புலவர் குடிலில் இருப்பதாக அறிந்து, தண்டியின் ஆசிரமத்திற்குச் செல்ல, தண்டி தூங்கிக் கொண்டிருக்க, அவரின் கால்களைப் பிடித்து பணிவிடைகள் செய்து கொண்டிருந்தவன் தான் நேற்று இரவு தன்னிடம் வந்தவன் என அறிந்து மகிழ்வு கொண்டார்.
காளிதாசன் வருகையை உணர்ந்த தண்டி எழுந்து வரவேற்றார். தண்டியிடம் முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் காளிதாசன் சொன்னார். தண்டி, தன் அருகிருந்த இளைஞனைச் சுட்டிக்காட்டி, 'என் சிஷ்யன் என்னை விட்டு நேற்று மாலை முதல் பிரியவில்லையே. நேற்று மாலை முதல் எனக்கல்லவா பணிவிடைகள் செய்தான்' என்றும் தன் சிஷ்யனை நோக்கி 'நீ காளிதாசனின் இல்லம் சென்றாயா' என்று கேட்க, இளைஞன் 'இல்லை. குருவாகிய தங்களுக்கு பணிவிடை செய்வதே என் லட்சியம். நேற்று மாலை முதல் நான் வழிபடும் கிருஷ்ணர் மீது ஆணையாக, உங்களை விட்டு நான் பிரியவேயில்லை' என்று கூறினான்.
தண்டி, 'என் சிஷ்யன் மிகச் சிறந்த பக்திமான். பொய் சொல்லமாட்டான், கிருஷ்ணர் மேல் அளவற்ற பக்தி கொண்டவன்' என்று உரைக்க காளிதாசன் மேலும் குழப்பம் அடைந்தார்.
அப்போழுது அருகிலிருந்த கிருஷ்ணர் கோயில் மணி எழும்ப, காளிதாசனின் முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது.

நேற்று இரவு தன்னிடம் வந்தது, தண்டியின் சிஷ்யன் வடிவில் கிருஷ்ணனே வந்தான் என்று அறிந்து புளகாங்கிதம் கொண்டார்.எந்தளவுக்கு கிருஷ்ணன் மீது அந்த இளைஞன் பக்தி கொண்டிருப்பான், ஆகையாலேயே அவன் வடிவாகவே தன்னிடம் கிருஷ்ணன் வந்தான், எனவே நேற்று இரவு கண்ணன் வடிவில் வந்த இளைஞன் எடுத்துக் கொடுத்த அடியை (வாக்கியத்தை) தண்டியின் சிஷ்யனிடமே கொடுத்து, நீயே இந்த அடியைத் தொடர்ந்து ஒரு அற்புத காவியம் இயற்றவேண்டும் என்று வாழ்த்திச் சென்றார்.
அந்த சிஷ்யனும் கண்களில் கண்ணீர் மல்க, கிருஷ்ணன் அடியெடுத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து ஒரு அற்புதக் காவியம் செய்தான்.
அதுவே, ஸ்ரீ ராதா மாதவ கல்யாணம், பஜனைகள் போன்றவற்றில் முதன்மையாகப் பாடப்படும் "அஷ்டபதி" அல்லது "கீத கோவிந்தம்" (இக்கட்டுரையின் தலைப்பைக் காணுங்கள்) என போற்றப்படுகின்றது.
அந்த இளைஞன் தான் கிருஷ்ணபக்தியில் சிறந்த ஜெயதேவர்.
ஜெயதேவரின் 'அஷ்டபதி' அல்லது 'கீத கோவிந்தம்' சிருங்கார ரசம் ததும்பும் வடமொழிப் பாடல்கள். நாயகன், நாயகி பாவனையில் அற்புதமாக புனையப்பட்டது. கண்ணனை அடைய நாயகியானவள் சொல்வது போல அமைந்தவை. மிக அருமையான அர்த்தங்கள் கொண்டவை.
(கண்ணனை நினைந்து ஏங்குகின்றாள் ராதை, ஏங்கியதால் இடை மெலிந்தாள் பேதை, இடையில் அணிந்த அணிகலன் கனம் கூட தாங்காமல் மயங்கினாள் கோதை)
தமிழில் கோதை ஆண்டாள் இயற்றியவையும், ஜெயதேவர் வடமொழியில் இயற்றிய அஷ்டபதியும் மொழி ஆய்வாளர்கள் ஒப்புற நோக்க விரும்புகின்றார்கள்.
இரண்டிலும் கண்ணனை அடையும் வழியை ஒரு பெண் எனும் கோணத்தில் நின்று சொல்லப்பட்டவை. (ஆண்டாளைப் பற்றி மேலும் அறிய கூடாரைவல்லி எனும் அடியேன் எழுதிய பதிவைக் காணவும்.)

சரி, இனி காளிதாசனிடம் வருவோம்.

காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரிக்கும் நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புத உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள். இருவரும் மேதமை படைத்தவர்கள்.
ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துவிடும். அச்சமயங்களில் காளிதாசர் போஜனை விட்டுப் பிரிந்து எங்கேயேனும் சென்றுவிடுவார். தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்வார்.
பிரிவுத் துயர் தாங்கமாட்டாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய கேள்வியை மக்களிடம் பறைசாற்றச் சொல்லி, மக்களில் எவரேனும் பதில் சொன்னால் பரிசுகள் உண்டு என அறிவிப்பான். (காளிதாசனை சிலர் மட்டுமே அறிவார்கள். படை வீரர்கள் அனைவரும் அவரை அறிந்திருக்க முடியாது) பதில் மிக நிச்சயமாக காளிதாசன் மட்டுமே அறிவார். இருவரின் மனோ நிலை சரிசமமாக இருந்தது. பதில் கூறியவரை (காளிதாசனை) வீரர்கள் போஜனிடம் அழைத்துச் செல்வார்கள். காளிதாசனும் பரிசுகள் பெற்று வாழ்ந்து வந்தார்.
ஒரு சமயம் வழக்கம் போல போஜனுக்கும், காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிகின்றனர்.
காளிதாசன் போஜனின் நாட்டிலுள்ள கிராமத்தில் தாசி ஒருத்தியின் வீட்டில், தான் ஒரு சாதாரண புலவர் என சொல்லிக் கொண்டு வசித்துவருகின்றார்.
போஜராஜன் வழக்கம்போல, ஒரு கேள்வியை, மக்களிடம் பறை சாற்றச் சொன்னான்.
பறை சாற்றுபவனும் கேள்வியைச் சொல்லி, இதற்கு பதில் அளிப்போருக்கு மன்னர் பெரு வெகுமதி அளிக்க இருக்கின்றார் என்று சொல்கின்றான்.
அச்சமயம், தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, 'நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றாள்.
காளிதாசனும் உடனடியாக, பதிலை ஸ்லோக வடிவில் சொல்கின்றார். தாசி நன்றாகக் கேட்டுக்கொள்கிறாள்.
தாசி தான் அரசனிடம் சொல்வதற்குள், இந்தப் புலவன் (காளிதாசன்) சென்று மன்னனிடம் வெகுமதி வாங்கிவிடக் கூடாது என எண்ணி, ஒரு கொடும் பாதகச் செயல் புரிகின்றாள்.
எவருக்கும் தெரியாமல், நயவஞ்சகமாக, காளிதாசன் கழுத்தை வெட்டிவிடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.
தாசியும் அரசவை வந்து போஜனிடம் காளிதாசன் சொன்ன இரு வரிகளைச் சொல்கின்றாள். மன்னன் அதிர்ந்தே போகின்றான். போஜன் தாசியிடம் வேறு எதுவும் கேட்காமல் 'இந்த பதிலைச் சொன்னவனை உயிருடன் வைத்திருக்கின்றாயா அல்லது கொன்றுவிட்டாயா?' என்று கேட்கிறான். தாசி உண்மையை உரைக்கின்றாள்.
{அந்த கேள்வியும், பதிலும் : போஜன் கேட்டது : “குஸுமே குஸுமோத்பத்தி. ச்ரூயதே நச த்ருச்யதே(பூவின் மேல் பூ மலரும் என்பார்கள். ஆனால் பார்த்ததில்லையே? - பூவின் மேல் பூ மலர்ந்ததை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா?)
காளிதாசன் இதற்கு மறுமொழியாக அந்த தாசியின் முகம் பார்த்து, "பாலே தவ முகாம்போஜத்ருஷ்டம் இந்தீவரத்வயம்" (பெண்ணே! உன் முகம் எனும் தாமரைப் பூவின் மேல் இரண்டு நீலோத்பலம் (இரண்டு நீல விழிகள்) பூத்திருக்கின்றதே - பூவின் மேல் பூப்பூத்திருபதைப் பார்க்கின்றேனே உன் முகத்தின் வடிவத்தில்)

தாசியோ கல்வியறிவு இல்லாதவள். காளிதாசன் சொன்னதை, அப்படியே போஜராஜனைப் பார்த்து, "பெண்ணே! உன் முகம் எனும் தாமரையில் இரண்டு நீலோத்பலம் பூத்ததைப் போல இரு விழிகள் இருக்கின்றன" என்று சொன்னால், போஜன் நடந்ததைப் புரிந்துகொள்ளாமல் இருப்பானோ?}

போஜன், நெஞ்சமெல்லாம் கனக்க விரைந்து காளிதாசன் இருக்கும் இடம் வருகின்றான். போஜனிடம் ஒரு வரம் உண்டு. ஒரே ஒரு முறை இறந்தவர் ஒருவரை ஒரு முகூர்த்த நேரம் பிழைக்க வைக்க முடியும். அந்த வரத்தை காளிதாசனிடம் செயல்படுத்துகின்றான்.
காளிதாசனும் பிழைத்து, கவி நெஞ்சத்தோடு, 'நமக்கோ நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய 'ரகுவம்சம்' முடிக்கப்படாமல் இருக்கின்றது. அதற்கான குறிப்புகளைத் தருகின்றேன். அறிவில் வல்ல போஜனாகிய நீ, ரகுவம்சத்தை முடிப்பாயாக' என்று கூறி, குறிப்புகள் தந்து மடிகின்றார்.
கண்களில் நீர்வழிய, செயல்மறந்து, தம் உயிர்நண்பனை பிரிந்த துக்கத்தோடு திரும்புகின்றான்.
போஜராஜன், ரகுவம்சத்தின் பின் பகுதியை எழுதி முடிக்கின்றான். அதுவே போஜசம்பு என்றாகின்றது. (ரகுவம்சம் - ராமர் கதையோடு மட்டுமல்லாமல், ராமரின் முன்னோனாகிய ரகு என்பவரின் சரிதமும் கொண்டு, ராமருக்கு பின் வரும், ரகு வம்சத்தின் கடைசி (26வது) அரசனாகிய, அக்னிவர்ணன் என்பவனின் கதையோடு முடிகின்றது.)
உவமைக்கு ஒரு காளிதாசன் என்று ஏன் போற்றப்படுகிறான் என்பதற்கு ரகுவம்சத்தில் வரும் ஒரு பாடலில் உள்ள வசந்தகால வர்ணனையைப் பாருங்கள்.
மாமரத்தில் இளம் இலைகள் தோன்றி, வசந்தகால காற்றில் ஆடுவது, மரக்கிளை தனது இளம் இலைகள் எனும் விரல்களை அசைத்து காற்றை வரவேற்பதாகத் தோன்றுகின்றது. குயில்களின் இனிமையான குரல், வெட்கத்தால் இளம்பெண்கள் தம் காதலரிடம் மென்று விழுங்கிப் பேசுவது போல் இருக்கின்றது. மரங்களில் உள்ள மலர்களிடம் வண்டு வந்து ரீங்காரமிட்டு தேனை உறிஞ்சுகின்றது. இந்த ரீங்காரத்திற்கு தகுந்தாற்போல் காற்றில் மரங்கள் நடனம் புரிகின்றன.
காளிதாசனின் உவமைகளைப் பின்னாட்களில் பலரும் கையாண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

காளிதாசன் வாழ்ந்த காலம் என்பது தெளிவுறத் தெரியாமல் போனாலும், அவரின் காவியங்கள் காலம் கடந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
- நி. த. நடராஜ தீக்ஷ¢தர்-
cell : 94434 79572-