Tuesday, March 17, 2015

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக பத்திரிகை



ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமன் ஆனந்த நடராஜராஜ மூர்த்தி ஸஹாயம்
திருச்சிற்றம்பலம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் ஆலய மஹா ஸம்ப்ரோக்ஷண
மஹா கும்பாபிஷேக பத்திரிகை

நாள் : ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம், சித்திரை மாதம் 18ம் தேதி, 01.05.2015, வெள்ளிக் கிழமை
நேரம் : காலை 07.00 முதல் 08.30 வரை ரிஷப லக்னம்

न॑म॒: शंक॒रा॑य॒ च मयस्क॒रा॒य च॒ न॑म॒: शि॒वा॑य॒ च शि॒व॑त॒राय च ॥
ग॑छ॒ त्वै भ॑गवा॒न पु॑न॒रा॑ग॒मनाय पु॑न॒र्दर्सनाय॒ स॑ह॒देव्याय॒ स॑ह॒वृषाय॒ स॑ह॒गनाय॒  स॑ह॒पार्ष॒दा॑य॒ य॑था॒हुताय॒ न॑मो॒नमाय॒ न॑म॒: शिवाय॒  न॑म॒स्ते अस्तु॒ मा॑ मा॒ हिँसी: ।।
- சுக்ல யஜுர் வேத மைத்ராயிணி சாகை ஸ்ரீ ருத்ரம்

ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்சுகடகம்
பதஞ்சலி த்ருகஞ்சஞ்சமசஞ்சலபதம் ஜனன பஞ்சன கரம் கதம்பருசிமம் பரவஸம் பரமமம்புத கதம்பக விடம்பககலம்
சிதம்புதி மணிம்புத ஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||
- பதஞ்சலி ரிஷி

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
-         சேக்கிழார்

அன்புடையீர்,
கோயில் என்றாலே பொருள்படும் சிதம்பரத்தில் அனுதினமும் ஆடல்காட்சியை நல்கி ஆனந்தத்தை அளித்திடும் ஆடல்வல்லப் பெருமானாகிய ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்திக்கு மஹா ஸம்ப்ரோக்‌ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் மேற்கண்ட தேதியில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புற்ற தலம் - சிதம்பரம். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த தலம். உலக புருஷனின் இதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்),  தரிசிக்க முக்தி தரும், சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த,  பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த, வேண்டுவதை உடன் அருளும், மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பர ரகசிய ஸ்தானம் அமைந்த புண்யதலம். காலத்தால் மிக முந்தைய சிவத்தலம். தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என சுந்தர மூர்த்தி சுவாமிகளால் புகழப்பெற்ற தில்லை மூவாயிரவர் எனப் போற்றப்படும் தீக்‌ஷிதர்களால் வேதவழி பூஜைகள் சிறப்புற நடைபெறும் அருட்தலம். ஆன்மீகத்தின் அனைத்து கலைகளிலும் முன்னோடியாக திகழும் திருத்தலம். பற்பல அருளாளர்களால் பாடப் பெற்ற சைவத்தலம். தமிழ் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட தவத்தலம்.
சிவகங்கை எனும் தீர்த்தம் (குளம்) கோயிலினுள் அமைந்து கங்கைக்கு மேலான பலன்களை வழங்குகின்றது.

ஸ்ரீ நடராஜ ராஜர் - அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியயும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர். வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.

சித்ஸபை எனும் பொன்னம்பலத்தில் நடமிடும் நடராஜர் கருவறையில் ஒளிரும் தீப ஒளிக்கு மேலும் ஒளிதரும் அருள்முகம், திருமேனியில் அணிவிப்பதால் நகைகள் அழகுபெறும் திருக்கோலம், முகத்தில் என்றும் பூத்திருக்கும் புன்னகை, அருகிலிருக்கும் அம்பிகையை சற்றே திரும்பிப் பார்க்கும் பதிமுகம், அப்பர் சுவாமிகள் சொல்வது போல வருவோரைத் தனிப்பட்ட முறையில் கவனிப்பது போன்ற கருணை முகம், அண்டிவரும் அனைவரையும் அஞ்சல் வேண்டாம் எனக்கூறி அபயம் எனும் அருள்தரும் வலக்கை, இம்மையிலும், மறுமையிலும் வரம் தரும் தூக்கிய இடது திருவடி (குஞ்சிதபாதம்), பாபங்களைக் களையும் முயலகன் எனும் அரக்கனின் மேல் ஊன்றிய வலது திருவடி, தரிசனம் செய்தோர் திரும்பவும் தரிசிக்க ஈர்க்கும் காந்த வடிவம் கொண்டு - அன்பர்களுக்கு  என்றும் அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீ சிவகாம சுந்தரி ஸமேதராக விளங்கும் ஸ்ரீ நடராஜ ராஜ மூர்த்தி வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனே வரமளித்து, நற்குழந்தைப் பேறு, வம்ச அபிவிருத்தி, குழந்தைகளின் கல்வியில் மேன்மை, கற்ற கல்வியினால் நல்வேலை வாய்ப்பு, பதவிகளில் மென்மேலும் உயர்வு, நல்ல இல்லறத் துணை, எதிரிகளால் ஏற்படும் அனைத்து இடர்ப்பாடுகளையும் களைந்து நோய்கள் இல்லாத நீடித்த ஆனந்தமான நல்வாழ்வு என அனைத்தையும் அருளக்கூடியவர்.

உலக மக்கள் உய்யும் பொருட்டு, ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலத்தில் நாம் காண உள்ள மிகப் பெரும் பிரம்மாண்டமான வைபவமாகவும், புண்ணியங்களை ஒரு சேர நல்கும் நிகழ்வாகவும், பனிரண்டு கால யாக பூஜைகளுடனும், முப்பத்திரண்டு யாக குண்டங்களுடனும், பதஞ்சலி மஹரிஷி வகுத்த பூஜா ஸூக்தங்களின்படி, சதுர்வேத பாராயணங்களுடன், ஸூக்ஷ்ம வழிபாடுகளுடன், திருமுறை முற்றோதல்களுடன், தில்லை மூவாயிரவர் எனும் த்ரிஸஹஸ்ர முனீஸ்வரர்கள் என்றும் வைதீக வழியில் பூஜைகள் நடத்தும் - பொது தீக்‌ஷிதர்களால் - மஹா மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது.

யாகசாலை நிகழ்ச்சி நிரல்

22.04.2015, புதன் கிழமை, காலை கூஷ்மாண்ட ஹோமம், மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்
23.04.2015 வியாழன் - காலை நாந்தி பூஜை, அனுக்ஞை, தன பூஜை, மாலை வாஸ்து சாந்தி ஹோமம்
24.04.2015 வெள்ளி - காலை ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரம், ப்ரதிஸரம், மதுபர்க்கம், ரக்‌ஷாபந்தனம்
25.04.2015 சனி - காலை மந்தரஜபம், கலாகர்ஷணம், கும்பஸ்தாபனம், விசேஷ ந்யாஸ அர்ச்சனை, தீபாராதனை.
மாலை முதல் கால யாக பூஜை
26.04.2015 ஞாயிறு - காலை & மாலை - இரண்டாம் & மூன்றாம் கால பூஜை
27.04.2015 திங்கள் - காலை & மாலை நான்காம் & ஐந்தாம் கால பூஜை
28.04.2015 செவ்வாய் - காலை & மாலை ஆறாம் & ஏழாம் கால பூஜை
29.04.2015 புதன் - காலை & மாலை எட்டாம் & ஒன்பதாம் கால பூஜை
30.04.2015 வியாழன் - காலை, மாலை & இரவு பத்தாம், பதினொன்றாம் & பனிரண்டாம் கால பூஜை
01.05.2015 வெள்ளிக் கிழமை காலை தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, ஸுவாசினி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அச்வ பூஜை, கும்பங்களின் யாத்ரா தானம்.

காலை மணி 07.00 மணிக்கு மேல் 08.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில்,
சிதம்பரம் ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் எனும் ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீ மன் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி சித்ஸபா ஸம்ப்ரோக்‌ஷண சித்விலாஸ மஹா கும்பாபிஷேகமும், அதே நேரத்தில் ராஜ ஸபை எனும் ஆயிரங்கால் மண்டபத்திற்கும், நான்கு ராஜ கோபுரங்களுக்கும்  மஹா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறும்.


01.05.2015 ஸகோபுரம் எனும் சப்பரம் எனும் தெருவடைச்சானில் பஞ்சமூர்த்தி வீதியுலா.  





02.05.2015 சனிக்கிழமை காலை சித்ஸபையிலிருந்து தேருக்கு எழுந்தருள யாத்ராதானம், ரதோத்ஸவம் எனும் (மஹா கும்பாபிஷேகத்திற்கான பிரத்யேகமான) தேர்த் திருவிழா. இரவு ராஜ ஸபை எனும்ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லக்‌ஷார்ச்சனை







03.05.2015 ஞாயிறு அதிகாலை மஹாபிஷேகம்
மதியம் ராஜஸபையிலிருந்து சித்ஸபைக்கு அருளாடலுடன் எழுந்தருளும் ஞானாகாச சித்ஸபா ப்ரவேசம் எனும் மஹா மஹா தரிசனக் காட்சி.

04.05.2015 திங்கள் இரவு பஞ்சமூர்த்திகள் விசேஷ முத்துப் பல்லக்கில் வீதியுலா.

மஹா கும்பாபிஷேக யாகசாலை காலங்களின் பொழுது, வேத விற்பன்னர்களைக் கொண்டு ரிக், யஜுர், ஸாமம் & அதர்வண வேத பாராயணங்கள், தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு   நாதஸ்வர இன்னிசை, ஓதுவார் மூர்த்திகளின் பண்ணிசை கச்சேரிகள் & திருமுறை பாராயணங்கள், வாய்ப்பாட்டு, சிறப்பு இசைக் கருவிகளின் கச்சேரிகள், உபந்யாஸங்கள், நாமஸங்கீர்த்தனங்கள், பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு காலத்திலும் அளிக்கப்படும்.

மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பு யாக பூஜைகளுடனும், அபிஷேக ஆராதனைகளுடனும், ஸஹஸ்ர போஜனத்துடனும் சிறப்புற நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் காணுதற்கரிய இந்த மாபெரும் நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ சிவகாம ஸுந்தரி ஸமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜ  ராஜ மூர்த்தியின் பரிபூரண அருளைப் பெற வேண்டுகின்றோம்.

நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய மேனேஜிங் டிரஸ்டி & பூஜை
20/15, வடக்கு சன்னதி, சிதம்பரம் 608 001.
Mobile : 94434 79572, 93626 09299.








2 comments:

Anonymous said...

Will samprokshanam be performed before Nataraja swami's sabha pravesham? In your article, 3rd is going to be the maha abishegam and sabha pravesham. But 1st of May is the samprokshanam. Plz calrify.

Thank you.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

Thanks and good question.ஆனால், இதற்கு முந்தைய பதிவுக்ளைப் படித்திருந்தால் விளக்கம் பெற்றிருப்பீர்கள். தற்போது தேவஸபையில் இருக்கும் நடராஜர் யாகசாலையின் பனிரண்டாம் கால பூஜைக்குப் பின்னர் (30.04.2015), தேவஸபையிலிருந்து தனது நிரந்தர இருப்பிடமாகிய சித்ஸபை எனும் பொன்னம்பலத்திற்கு எழுந்தருளுவார். சித்ஸபையின் கும்பங்களுக்கு மஹா கும்பாபிஷேகமும், சித்ஸபையில் நடமிடும் நடராஜருக்கு மஹா ஸம்ப்ரோக்‌ஷணமும் ஒரே சமயத்தில் நடக்கும். அன்று இரவு வரை சித்ஸபையில் இருக்கும் நடராஜர் மறுநாள் அதாவது 02.05.2014 அன்று மறுபடியும் சித்ஸபையிலிருந்து புறப்பட்டு தேருக்கு வந்து நான்கு வீதிகளில் வலம் வந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு வருவார். மறுநாள் மதியம் 03.05.2015 திரும்பவும் சித்ஸபைக்கு வருவார்.