Sunday, February 10, 2019

சிதம்பரம் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய கும்பாபிஷேகம், 11.02.2019, காலை 09.00 மணி - 10.00 மணி


சிதம்பரத்தில் முப்பெரும் விழா 
(11.02.2019, காலை 09.00 10.00 மணி)



1. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள் அமைந்தருளும் ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பிகை ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/01/28-11.html  )

2. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய வளாகத்தினுள், மேற்கு கோபுரத்தில் அமைந்தருளும் ஸ்ரீ வள்ளி தேவஸேனா ஸமேத செல்வ முத்துக் குமார ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன  மஹா கும்பாபிஷேகம்  (மேற்கொண்டு விபரங்களுக்கு கீழ்க்கண்ட லிங்க் செல்லுங்கள் : http://natarajadeekshidhar.blogspot.com/2019/02/11012019-09-10.html )

3. சிதம்பரம் நகரம், மேற்கு வீதி & வடக்கு வீதி சேருமிடதிற்கு அருகில் இருக்கும் வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம். (11.02.2019, காலை 09.00 மணி 10.00 மணி)
சிதம்பரம் ஸ்தலம் : ஸ்ரீ ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி நிதமும் நாட்டியக் காட்சியை நல்கி, அருளை வாரிவழங்கும் திருத்தலம். கோயிலால் தான் ஊருக்கே பெருமை என்பது சாலப் பொருந்தும். நடராஜர் ஆலய பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். பெருமை மிகுந்தது. அருமை வாய்ந்தது.
நடராஜர் கோயிலைச் சுற்றி பல்வேறு சிறப்பான ஆலயங்கள் அமைந்துள்ளன.
அவற்றுள், மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும், வேறு எங்கிலும் காணப் பெறாத வகையிலும் மிக மிக அழகானத் திருக்கோலம் கொண்டு, தனியொரு ஆலயம் கொண்டு, பரிவார தெய்வங்களுடன் அருள்பாலிக்கும் வேதமாதா காயத்ரி தேவி  ஆலயம், மேற்கு வீதியும் வடக்கு வீதியும் சேரும் இடமாகிய கஞ்சித் தொட்டிக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இக்கோயில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது, தில்லை வாழந்தணர்கள் எனும் தீக்ஷிதப் பெருமக்களால் அனுதினமும் பூஜைகள் ஏற்பது என பல்வேறு சிறப்புகள் கொண்டது.
காயத்ரி தேவி :
வேத மந்திரங்களுக்கெல்லாம் மூச்சுக் காற்றாக விளங்குவது காயத்ரி மந்திரம். அந்த காயத்ரி மந்திரத்திற்கான வடிவாகவும், படைப்புக் கடவுளாம் பிரம்ம தேவனின் சக்தியாகவும், லோக நாயகனான சூர்ய பகவானுக்கு ஒளியை அளிப்பவளாகவும், விஸ்வாமித்ர மகரிஷிக்கு பெருமந்திரத்தை அளித்தவளாகவும், காயத்ரி தேவியைப் புராணங்கள் போற்றுகின்றன.
அதிலும், இவ்வாலயத்தில் அம்பிகை காயத்ரி தேவி ஐந்து முகங்கள் கொண்ட அற்புதக் காட்சி தந்து அருளுகிறாள்.
இக்கோயில், சிறிய அழகிய ராஜ கோபுரம் கடந்து உள்ளே செல்ல, கோஷ்டத்தில் சரஸ்வதி, அமிர்தகலசம் ஏந்திய மகாலட்சுமி, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். கருவறையில் அன்னை காயத்ரி தேவி மேற்கு நோக்கி அருள்கிறாள். ஐந்து திருமுகங்கள், கருணை பொழியும் கண்களுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். அன்னையின் பாதமருகே ஸ்ரீசக்ரம் உள்ளது. காலையில் காயத்ரியாகவும் மதியம் சாவித்திரியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் அருளும் அம்பிகை.
சிறப்பு மிக்க காயத்ரி தேவி சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, மகேஸ்வரி, லக்ஷ்மி, மனோன்மணி வடிவங்கள் உள்ளடக்கிய ஐந்து முகங்கள் கொண்ட அம்பிகை.
பவழ நிறம், பொன்னிறம், நீல நிறம், வெண்ணிறம், முத்தொளி வீசும் நிறம் என ஐந்து முகங்களும் ஐந்து வித நிறங்கள் கொண்டதாகும்.
அம்பிகையை வேண்டிக்கொண்டால், அறிவுக் கூர்மை பெருகும். அச்ச உணர்வு அகலும், தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள்.  உள்ளுக்குள் ஆன்ம பலம் பெருகும். அறிவார்ந்த தோற்றம் கிடைக்கப் பெறும்.
இவ்வாலய பூஜகரான சிவ. ராஜ சேகர தீக்‌ஷிதர் (த.பெ. - சி. சிவராஜ தீக்‌ஷிதர்) செல் : 9444849501, 9443326272 அவர்களின் பெருமுயற்சியாலும், அன்பர்களின் பேராதரவோடும், பக்தர்களின் பெரும் பங்களிப்பினாலும், கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம், ராஜ கோபுரம், சுற்று பிரகாரம் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, கருங்கல் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இவ்வாலயத்திற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மேற்கண்ட தேதியில் நடத்தப்படவுள்ளது.
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் இந்த மாபெரும் வைபவத்தில் பங்கு கொண்டு வேதமாதா ஸ்ரீ காயத்ரி தேவியின் பரிபூரணமான அருளைப் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

-     நி.த. நடராஜ தீக்‌ஷிதர்
-     சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜகர்
-     செல் : 9443479572, 9362609299
-     www.facebook.com/deekshidhar


No comments: