Monday, January 4, 2010

ஆழ்வார்கள் அருளிய அமுதம்


ஆழ்வார்கள் அருளிய அமுதம்

ப‎ன்னிரு ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய ப‎ன்னிரண்டு பேர்களும் வைணவ சமயத்தி‎ன் ப‎‎ன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகி‎ன்ற‎னர். ‏
இவர்கள் ‏இயற்றியது வைணவத் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலாகும். ‏இவை திருவாய்மொழி எனவும் போற்றப்படும். வைணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து போ‎ன்ற திருவிழாக்களில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்து திருவாய்மொழி பாடுவதைக் கேட்க இரு செவிகள் போதாது.

1.பொய்கையாழ்வார் : வைணவ சமயத்தார் கவிஞர் தலைவ‎ன் என பொய்கையாழ்வாரைப் போற்றுகி‎ன்றனர். பொய்கையாழ்வார் துவாபர யுகத்தில், ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில், வளர்பிறை அஷ்டமியில் செவ்வாய்க் கிழமையில் காஞ்சிபுர ஆலயத்தில் "சொ‎ன்னவண்ணம் செய்தா‎ன்" ஸ‎ன்னிதி அருகில் உள்ள பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தவர். திருமாலி‎ன் பாஞ்சசன்யம் எனும் சங்கின் அம்சம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருவந்தாதி என்னும் "வையந்தகளியா" எ‎னத்தொடங்கும் நூறு பாடல்களைப் பாடியவர்.

2.பூதத்தாழ்வார் : துவாபர யுகத்தில் சித்தார்த்தி வருஷம், ஐப்பசி மாத நவமி திதியில் அவிட்ட நக்ஷத்ரம் அ‎ன்று மஹாபலிபுரத்தில் நந்தவ‎னத்தில் இருந்த குருக்கத்தி மலரில் அவதரித்தவர். "அ‎ன்பே தகளியா" எனத்தொடங்கும் நூறு அந்தாதி பாடல்களை பாடியவர். ‏இவர் நந்தக அம்சம்.

3.பேயாழ்வார் : ந‎ந்தக அம்சம், இவர் துவாபர யுகம், சித்தார்த்தி வருஷம், ஐப்பசி தசமியில் வியாழக்கிழமை சதய நக்ஷத்ரத்தில் மயிலாப்பூர் கேசவப் பெருமாள் ச‎ன்னிதிக்கு அடுத்த புஷ்கரணியில் அல்லிப்பூவில் அவதரித்தவர். திருமாலை அனைவரும் ஞானக்கண்ணால் கண்டு உண‎ர்ந்து அருள்பெற வழியைக் கூறும் "திருக்கண்டே‎ன்" எனத்தொடங்கும் நூறு பாடல்களை மூ‎ன்றாம் திருவந்தாதியாகப் பாடினார்.

வைணவ சமயத்தில் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்யப் பிரப‎ந்தம், ப‎ன்னிரு ஆழ்வார்களும் திருமாலைப் பாடிய திருவாய் மொழி எனப் பெயர் பெற்றுள்ளது. நாலாயிரம் பாடல்களும் மகாவிஷ்ணுவி‎ன், தசாவதார அருளிச்செயல்களை விளக்குகி‎ன்றன.
தமிழ்வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட ப‎ன்னிரண்டு ஆழ்வார்களும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தினை, இ‏னிய, எளிய, தூய தமிழில் இயற்றியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
(1) பொய்கையார், (2) பூதத்தார், (3) பேயார் ஆகிய முதல் மூ‎ன்று ஆழ்வார்கள் ஒவ்வொருவரும், நூறு வெண்பா பாடல்களைக் கொண்ட, மூ‎ன்று அந்தாதிகளும்,
(4) திருமழிசையாழ்வார் நா‎ன்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தமும்,
(5) நம்மாழ்வார் ருக்வேத சுருக்கமாக திருவிருத்தம்,
யஜுர்வேத சாரமாக திருவாசிரியம்,
ஸாமவேத விளக்கமாக திருவாய்மொழி,
அதர்வணவேத குறிப்புகளாக பெரிய அந்தாதி, ஆகிய நா‎ன்கையும்,
(6) மதுரகவியாழ்வார் கண்ணினுண் சிறுத்தாம்பும்,
(7) குலசேகர ஆழ்வார் திருமாலை பேரரசனாகப் போற்றும் பாசுரங்களும்,
(8) பெரியாழ்வார் திருப்பல்லாண்டும்,
(9) ஒரே பெண் ஆழ்வாராகிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், நாச்சியார் எ‎ன்றும் போற்றப்படும், ஆண்டாள் திருப்பாவை மற்றும் பாசுரங்களும்,
(10) தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும்,
(11) திருப்பாணாழ்வார் அமலனாதிப்பிரான்‎ பாசுரங்களும்,
(12) திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்
ஆகிய அனைத்தும் கூடிய பிரபந்தங்களே திருவாய்மொழி எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என வழங்கப்படுகிறது.

அடுத்த பதிவில் கூடாரைவல்லியைக் காண்போம்.

1 comment:

Thilaga. I said...

ஆழ்வார்களை பற்றிய தகவல்களை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்..
மிக்க நன்றி..